நல்வரவு

வணக்கம் !

Thursday 9 February 2012

’பள்ளிகொண்டபுரம்’ - நாவல்




கேரளாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இப்போது திருவனந்தபுரத்தில் வசித்து வரும் திரு நீல.பத்பநாபன் அவர்கள் எழுதிய பள்ளிகொண்டபுரம், நாவலை வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. 

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதி, இலையுதிர்காலம் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யிருக்கும் இவர், சாகித்ய விருது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர்..


பள்ளிகொண்டபுரம், நாவலின் முதற்பதிப்பு டிசம்பர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  அக்காலத்தில் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட நாவல் என்ற சிறப்பினையும் இது பெற்றுள்ளது.

கதையின் முக்கிய பாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்வில் இரண்டு நாட்களில் நடைபெறும் சம்பவங்கள் தான் கதையாக உருப்பெற்றுள்ளது.. அவரது ஐம்பதாவது பிறந்த நாளன்று அதிகாலை கோவிலுக்குச் செல்லும் அனந்தன் நாயர் சந்திக்கும் மனிதர்களும், அவர்களுடனான உரையாடல் களும், இடையிடையே அவரைப் பின்னோக்கி இழுக்கும் பழைய நினைவுகளுமே நாவல். 

நிகழ்காலமும் இறந்தகாலமும் மாறி மாறி வந்தாலும் முன்னதைப் படர்க்கையிலும் பின்னதைத் தன்மையிலும் கூறி வாசகருக்குக் குழப்பம் ஏற்படாமல் தவிர்த்துள்ளமை, பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  தமது துக்கங்களையும் துயரங்களையும் தமக்குள் சொல்லிச் சொல்லிப் புலம்ப, ஆசிரியரின் எளிய நடை மிக இயல்பாய்ப் பொருந்துகிறது.  . 

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்பு தம்மை விட்டுப் பிரிந்து இன்னொருவரின் மனைவியான கார்த்தியாயினியின் நினைவிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.  அவரது புற உலகம் அரூபமான போதெல்லாம் அகவுலகம் விழித்துக் கொண்டு உள்ளத்தின் உள்கோடி யிலிருந்து அவளது உருவம் மெல்ல மெல்ல எழுந்து வருகிறது.

“கடவுளின் இந்தப் புனித சன்னிதானத்தில் வந்து உட்கார்ந்த பிறகும், இந்த வயசான காலத்தில் ஒரு காலத்தில் என் கெட்டிய வளாகயிருந்த அந்த நன்றி கெட்டவளை நினைத்துப் பார்க்க வெட்கமாக இல்லையா? என்று அவரது அந்தராத்மா கேட்டாலும்,  அவளது விலகலால் ஏற்பட்ட மனக்காயத்தை ஆற்ற முடியாமல், அவளது நினைவுகளைச் சுமந்து அலைகிறார் அனந்தன் நாயர்.

தம்மைப் போலவே பிள்ளைகளும் தம் அன்னையின் மீது கோபத்துடனும் வெறுப்புடனும் இருப்பர் என்று நம்புகிறார். ஆனால் தமக்குத் தெரியாமல் மகன் பிரபாகர், அவளைச் சந்தித்துப் பழகி வந்திருக்கிறான் என்ற உண்மை தெரிய வரும் போது, அவரது உள்ளம் ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் கொழுந்து விட்டு எரிகிறது.

அது மட்டுமின்றிப் பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரு வருடன் போகும் அளவுக்கு, பர்த்தாவால் வஞ்சிக்கப் பட்டவர், என்று தன் அம்மாவுக்குப் பரிந்து கொண்டு அவரையே நேரிடையாக மகன் குற்றஞ் சாட்டும் போது, நிலைகுலைந்து போகிறார்.   

நாம என்னதான் கழுதையாக் கத்தினாலும் பணம் இல்லாமெ ஒரு இழவும் நடக்காது!  பிறகு நான் எதுக்கு அனாவசியமாக உங்கச் சிறகில விடாப் பிடியாய் ஒளிந்திருந்து கொண்டு, உங்கள் தரித்திரத்திலும் பங்கு போட்டவாறு வாழணும்? அம்மாவைப் போல் புதிய மேய்ச்சல் இடம் பார்த்து, நான் போய் விட்டதில் என்ன தப்பு?  என்று இளந்தலை முறையின் பிரதிநிதியான பிரபாகர் கேட்கும் போது, அனந்தன் நாயரைப் போலவே நாமும் அதிர்ச்சியடைகிறோம்.

கேரளக் கலாச்சார சூழலில் அமைந்த இந்நாவலின் பெண் கதா பாத்திரங்களின் ஒழுக்கப் பிறழ்வு, இது வெளியான காலத்தில் தமிழக வாசகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.  ஆனால் மேல்நாட்டுக் கலாச்சாரம் இறக்குமதியாகிவிட்ட இந்நாளில், சிறு அதிர்வைக் கூட இது ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

திருவனந்தபுரம் தான் பள்ளிகொண்டபுரம்.  பழவங்காடி பிள்ளையார் கோவில், பிரியப்பெட்ட நாட்டுகாரேஎன்று அரசியல் வாதிகள் முழங்கும் புத்தரிக்கண்டம் மைதானம், புகழ் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம், சாலைக்கம்போளம், பெரிய கடைத் தெரு என்று இந்நகரைப் பற்றிய விபரங்கள் துல்லியமாக இந்நாவலில் இடம் பெற்று, இரண்டு நாட்கள் அனந்தன் நாயருடன் சேர்ந்து நாமும் இந்நகரைச் சுற்றிப் பார்த்தது போன்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலச்சுவடு பதிப்பகத்தால் கிளாசிக் வரிசையில் வெளியிடப் பட்டுள்ள இந்நாவலுக்குச் சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரையில்,
“ஒரு மனச்சுமை மனிதனின் மனவோட்டங்கள் தாம் பள்ளிகொண்ட புரத்தில் கதையாடலாக விரிவடைகின்றன.  ஏற்றுக்கொண்ட மதிப்பீடு களுக்கும் புதிய மதிப்பீடுகளுக்கு மிடையில் உழலும் சாதாரண மனிதர் அனந்தன் நாயர். 
இலக்கிய புனைவு வெறும் கதையாடல் அல்ல.  அதையும்
மீறிய நுண்ணுணர்வுகளை வாசக கவனத்தில் ஏற்படுத்துவது என்ற இலக்கிய செயல்பாட்டை இனங்கண்ட தருணங்களில் ஒன்றாக இருந்தது ‘பள்ளிகொண்டபுரம் வாசிப்பு, என்று சொல்லியிருப்பது, நூறு சதவீதம் உண்மையே..   

5 comments:

  1. நீங்கள் இங்கே குறிப்பிட்ட திரு நீல.பத்மநாபன் அவர்களின்
    நாவல்களை படித்திருக்கிறேன் சகோதரி.
    "தலைமுறைகள்" எனக்கு மிகவும் பிடித்த நாவல்.
    "பள்ளிகொண்டபுரம்" பற்றிய உங்கள் கண்ணோட்டம்
    படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ’தலைமுறைகள்’ நாவலைப் படிக்க வேண்டும் என்று நானும் நினைத்திருக்கிறேன். அது உங்களுக்கு மிகவும் பிடித்த நாவல் என்று சொன்னதிலிருந்து விரைவிலேயே படிக்க வேண்டும் என மனம் விழைகிறது. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  2. நல்லதொரு இலக்கிய நாவலை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு நன்றி அக்கா. சுருக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் நாவலைப் படிப்பதற்கான உந்துதலை அளிக்கும் வகையில் விமர்சித்திருப்பது சிறப்பு. வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா.

      Delete
  3. இரண்டு நாள் முன்பு இங்கிருக்கும் நூலகத்தில் உறுப்பினராகி சில தமிழ் புத்தகங்கள் எடுத்துவந்தேன். பெரும்பாலும் நாவல்களும், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களும் உள்ளன. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஜெயகாந்தன்), ஜே ஜே: சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி) என்று தமிழ்ப்புத்தகங்களைக் கையில் ஏந்தியதும் ஒரே பரவசம்.

    ReplyDelete