நல்வரவு

வணக்கம் !

Wednesday 11 April 2012

ரசித்த நகைச்சுவை துணுக்குகள்


’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில்
ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை,  மொழியாக்கம் செய்து இங்கே தந்துள்ளேன்:-


 துணுக்கு 1:-

கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.

அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
.

"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."

அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"

"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார்.  ஆம். கூடும் என்று  நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."

"அப்படியா? மிகவும் நல்லது.  சரி. அந்த கெட்ட சேதி?"

"அந்த ஆள் வேறு யாருமில்லை.  உங்கள் குடும்ப டாக்டர் தாம்."


துணுக்கு 2 :-


குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.

"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.

"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன்.  தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.

"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு. 


துணுக்கு 3:-.


அழகான இளம்பெண் ஒருத்திக்குத்  தினந்தினம் போன் செய்து கொண்டிருந்த வாலிபன் ஒருவன் ஒரு நாள் அவளிடம்,

"அன்பே!, உனக்காக எதை வேண்டுமானாலும், நான் விடத் தயாராயிருக்கிறேன்" என்றான்.

"அப்படியா? உன் நம்பிக்கையை விட்டு விடு" என்றாள் அவள்.


துணுக்கு - 4


ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஜிம்மி:-  "நீ எப்படி இங்கு வந்தே?"

ஜானி:-  "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன்.    நீ?"

ஜிம்மி:-  "என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தேன்.   அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு பூராத் தேடினேன்.  ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால  ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது".

ஜானி:-  "அடடா!  நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா,  நாம ரெண்டு பேருமே  இன்னிக்கு  உயிரோடு இருந்திருக்கலாம்".


துணுக்கு - 5

கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள். 

"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால், மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது," என்றாள் அந்தப் பெண்.

அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர்,

"நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான்.  எந்தப் பல்?" என்றார்.

"அன்பே, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.


துணுக்கு - 6


தன் கணவனின் குடிப்பழக்கத்தால் வெறுப்புற்றிருந்த பெண்ணொருத்தி, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தாள்.  பேய் போல வேடம் பூண்டு,  சோபாவின்  பின்புறம் காத்திருந்தவள், கணவன் வீட்டுக்குள் நுழைந்த போது திடீரென்று அவன் முன்னால் வந்து குதித்துப் பயமுறுத்தினாள்.

"நீ என்னைப் பயமுறுத்த முடியாது.  நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்," என்றான் அவன்  மிகவும் அமைதியாக.


.(ரீடர்ஸ் டைஜஸ்ட்)


துணுக்கு - 7


டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது.  நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன்.  சில சமயம் நான் ஜெயிக்கிறேன்.  சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.  இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு" 


(ஹிந்து யங் வேர்ல்டு)



28 comments:

  1. ஹஹஹ... சூப்பர் காமெடிகள்... அதுவும்.. //நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்,// அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் அருமை எனப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      Delete
  2. நகைச்சுவைப் பகிர்வுகள் அனைத்தும் அருமை. அதிலும் பல்மருத்துவரிடம் சென்ற பெண்ணின் துணிவு பற்றி அறிந்ததும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை. மனம் இலகுவாக்கும் நகைப்புகளைத் தமிழில் வழங்கியமைக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  3. ரசிக்கத் தகுந்த துணுக்குகள் சகோதரி.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  4. மனதுவிட்டு சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை துணுக்குகள்.
    தொகுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மனம் விட்டுச் சிரித்ததற்கும் கருத்துக்கும் நன்றி மாசிலா சார்!

      Delete
  5. சிரிக்க அமைத்த சிறப்பான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்த அவசர யுகத்தில் மனம் விட்டுச் சிரிக்க சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது அருணா! தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. மனம் விட்டு சிரித்தேன். ஆனால் முதல் துணுக்குக்கு என்னால் சிரிக்க முடியவில்லை.

    ReplyDelete
  7. எல்லா துணுக்குகளுக்கும் சிரித்தாக வேண்டும் என்பது கட்டாயமா என்ன? வெளிநாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கண்டிப்பாக குடும்ப டாக்டர் என ஒருவர் இருப்பார். இது நம்மூருக்கு ஒத்து வராது. எனவே சிரிப்பு வராததில் வியப்பில்லை.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவகுமாரன் சார்!

    ReplyDelete
  8. கலையரசி,
    வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்தது தங்கள் முதல் துணுக்கு, சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது இரண்டாவது துணுக்கு, விரக்தியோடு சிரிக்க வைத்தது மூன்றாம் துணுக்கு, அர்த்தபுஷ்டியோடு சிரிக்க வைத்தது நான்காம் துணுக்கு, வாய்விட்டு சிரிக்க வைத்தது ஐந்தாம் துணுக்கு மற்றும் ஆறாம் துணுக்கு, மனம் விட்டு சிரிக்க வைத்தது ஏழாம் துணுக்கு !!!

    சிரித்து சிரித்து ஆயுளில் ஒரு நாள் கூடி விட்டது போல உணர்ந்தேன் தோழி ! நன்றி !

    ReplyDelete
  9. தங்களது வருகைக்கும், மனம் விட்டுச் சிரித்தமைக்கும் மிக்க நன்றி குருச்சந்திரன்!

    ReplyDelete
  10. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தோழி!

      Delete
  11. Replies
    1. தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி அருள்!

      Delete
  12. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி குணா!

    ReplyDelete
  13. அத்தனையும் சிறப்பான நகைச்சுவைகள்
    தமிழில் தந்தமைக்கு நன்றி
    வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அத்தனையும் சிறப்பான நகைச்சுவைகள்
    தமிழில் தந்தமைக்கு நன்றி
    வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  16. அத்தனையும் சிறப்பான நகைச்சுவைகள்
    தமிழில் தந்தமைக்கு நன்றி
    வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் சிறப்பான நகைச்சுவை எனப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி சகோதரரே!

      Delete
  17. I like more that Final match with dongs jock

    ReplyDelete
  18. துணுக்கு - 4
    ஜானி:- "அடடா! நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா, நாம ரெண்டு பேருமே இன்னிக்கு உயிரோடு இருந்திருக்கலாம்"....... அட்ராசக்க....அட்ரா சக்க ......அட்ரா சக்க....

    ReplyDelete