நல்வரவு

வணக்கம் !

Sunday 5 January 2014

'இன்று உலக பறவைகள் தினம்'




அழிந்து வரும் பறவையினங்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இயற்கை வளம், காடுகள் அழிந்து வருதல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல், நீர் நிலைகள் குறைந்து வருதல் மற்றும் மாசு படுதல், பறவைகளைச் சட்ட விரோதமாகப் பிடித்துச் சுகாதாரமற்ற முறையில் கூண்டிலடைத்து விற்பனை செய்தல், செயற்கை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்போதைய வேளாண்முறையில் அதிகளவு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பறவையினங்களில் 12 சதவீதம் அழிவின் விளிம்பில் இருப்பதாக பறவை ஆர்வலர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.     ஏற்கெனவே கூட்டங்கூட்டமாக இருந்த சிட்டுக்குருவி இனம் பெருமளவு அழிந்து விட்டது. எனவே மக்களிடையே பறவையினங்களைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பறவைகள் தினத்தின்  முக்கிய நோக்கம்.                                          
பறவைகள் வீட்டில் வளர்க்கப்பட வேண்டிய பிராணிகள் அல்ல.  சுதந்திரமாகத் தம்மினத்தோடு பறந்து திரிந்து களிக்க வேண்டியவற்றின் சிறகுகளை முறித்துக் கூண்டிலடைத்து வாழ்நாட் முழுக்க சிறையில் வைப்பது முறையற்ற செயல்.    இதை எழுதும் போது சிறுவயதில் நான் பள்ளியில் படித்த கவிமணியின் பாடல் நினைவுக்கு வருகின்றது:-         

"பாலைக் கொண்டு தருகின்றேன்
பழமும் தின்னத் தருகின்றேன்
சோலைக்கோடி போக வழி
சுற்றிப்பார்ப்பதேன் கிளியே?
காட்டி லென்றும் இரை தேடிக்
களைத் திடாயோ? உனக்கிந்த
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகளேதும் உண்டோ சொல்?
என்று சிறுவன் கேட்பான்.

அதற்கு அவன் வளர்க்கும் கிளியோ,
சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியா பாலகனா
எண்ணி வினைகள் செய்யானா?                                                
பாலும் எனக்குத் தேவையில்லை
பழமும் எனக்குத் தேவையில்லை 
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா”                         
என்று பதில் சொல்லும்.  

கிளிகளைக் கூண்டிலடைத்து வளர்ப்பது தீங்கான செயல் என்பதை எளிய 
சொற்களில் எவ்வளவு அழகாக குழந்தைகளின் மனதில் படும்படி கவிமணி 
எழுதியிருக்கிறார்!     பறவைகளைக் கூண்டிலடைத்து வளர்ப்போர் கடை
பிடிக்க வேண்டிய விதி முறைகளை மக்களிடையே எடுத்துச் சொல்வதும் இத்தினத்தின் இன்னொரு நோக்கம்:- அவற்றைப் பற்றி நாளை எழுதுகிறேன்...                        
              
                                                                                                              


9 comments:

  1. வணக்கம்
    இன்று பறவைகள் தினம் என்பதை மிக அருமையாக பதிவில் சொல்லியுள்ளீர்கள் அத்தோடு பறவையை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய அம்சங்கள் பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ரூபன் சார்!

      Delete
  2. பாலும் எனக்குத் தேவையில்லை
    பழமும் எனக்குத் தேவையில்லை
    சோலை எங்கும் கூவிநிதம்
    சுற்றித் திரிதல் போதுமப்பா”

    சுதந்திரப் பறவைகள் நலமாய் வாழட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!

      Delete
  3. பாடல் அருமை... நல்லதொரு பகிர்வு.. தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நேரம் கிடைத்தால் : நீங்கள் பறவையானால்...? - http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்! கண்டிப்பாக நீங்கள் பறவையானால் பதிவைப் படிப்பேன்.

      Delete
  5. மார்ச் 20 சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்பதைத் தங்களால் அறிந்திருந்தேன். ஜனவரி 5 உலகப் பறவைகள் தின்ம என்பதையும் இன்று தங்களால் அறிகிறேன். நன்றி அக்கா. பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. கவிமணியின் பாடல் பறவைகளின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. வானளாவிப் பறக்கும் பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பது நமக்கு இன்பம் தரலாம். ஆனால் அப்பறவைகளுக்கு எவ்வளவு பெருந்துன்பம்! மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
  6. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

    ReplyDelete