நல்வரவு

வணக்கம் !

Wednesday 25 February 2015

என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ – கவிதைகள்

       என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ –                ஆசிரியர்:-  உமா மோகன்
       வெளியீடு:அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம்.                          முதல் பதிப்பு:- டிசம்பர் 2014
       இவரது பிற நூல்கள்:- டார்வின் படிக்காத குருவி – கவிதை              வெயில் புராணம் -  பயண அனுபவத்தொகுப்பு

இந்நூலில் நான் ரசித்த, என்னைப் பாதித்த கவிதைகள் பற்றி, உங்களோடு பகிர்ந்து கொள்ளவே, இப்பதிவு.


உமா மோகன் கவிதைகளில் பாரதி, பாவேந்தர் மூச்சுக் காற்று படிந்துள்ளது; கால்களில் இந்த மகாகவிகள் மிதித்த புழுதி மண்.  கணிணி யுகச் சூறாவளிக்கு நடுவேயும், அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப்படுத்தும் கவிதைகள் இவருடையவை,” என்கிறார் வாழ்த்துரை வழங்கியிருக்கும் கவிஞர் புவியரசு அவர்கள்.

இத்தொகுப்பில் பெண்ணியம் பேசும் கவிதைகளில் என்னை வெகுவாகக் கவர்ந்தது, ‘சக்தி தரிசனம்’ எனும் கவிதை:.

“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்,” என்று பாரதி அன்றே பொட்டில் அறைந்தாற் போல் முழங்கிய பின்னரும், பெண்ணைப் போகப் பொருளாக, அழகுப் பதுமையாக மட்டுமே பார்க்கும் ஆணின் பார்வை, இன்னும் முழுமையாக மாறவில்லையென்பது தான், இக்கவிதை உணர்த்தும் கசப்பான உண்மை:-

நிறங்களால் கொண்டாடப் பெறுபவள்
அணிகளால் அழகு சேர்ப்பவள்
பூச்சுகளால் பிரகாசிப்பவள்
இவ்வளவு தான் நான் உனக்கு.”

தலைமுறைகள் பல கடந்த போதும், பெண்ணென்பவள், ஆணின் கோலுக்கு ஏற்றபடி ஆடும் குரங்காகத் தான் இன்னும்:--
தலைமுறை தாண்டிய பின்னும்
“குரங்கு போல்
உணர்வதைத் தடுக்க முடியவில்லை
உன் குச்சியின்
அசைவுக்குத் தக
குந்தியிருக்கும் போதும்
குதித்தாடும் போதும்….”

பெண்ணுக்கு எந்த வயதில், எந்த இடத்தில், ‘நலம் அழிக்க மாட்டோம்',என்ற பத்திரம் கிடைக்கும்?' என்று தவிப்புடன் கேட்கிறார் கவிஞர்!  (தவிப்பின் குரல்)

பெண்ணின் உடல் மொழி சம்பந்தப்பட்ட கருத்துக்கள் தாம், இன்றைய பெண்ணியத்தில் முக்கியமாகப் பேசப்படுகின்றன என்பதை உறுதிப் படுத்தும் விதமாக, ‘அவளுக்கும் அப்படித்தான்,’ என்ற கவிதை, இரத்தக்  கசிவு, நாப்கின் தாண்டிவிடக்கூடாதே,’ எனப் பெண்களுக்கே உரித்தான பதைப்புடன் காத்திருக்கும், நடிகையைப் பற்றிப் பேசுகிறது. 

எல்லாவற்றிற்கும் மேலாகப் பெண்குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்யும் சமுதாயக் கொடுமையினைச் சாடும் ‘நெஞ்சு இரண்டாக,’ எனும் கவிதை, புண்பட்ட நம் நெஞ்சை, வாளைக் கொண்டறுத்து இரணகள மாக்குகிறது.
தாம் அழுது கொண்டே இதனை எழுதியதாக உமாமோகன் இந்நூல் வெளியீட்டின் போது தெரிவித்தார்:-
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா
தவழும் போதே
தற்காப்புக் கலை சொல்லவா?”

 ‘பொழுது விடிகிறது,’ என்ற கவிதையில், அதிகாலையில், இயற்கையில் மனமொன்றி ரசிக்கும் கவிஞரின் கவனத்தை, வலுக்கட்டாயமாகத் திசை திருப்பி, விசில் கொடுத்து அடுப்பங்கரைக்கு அழைக்கிறது குக்கர்! 

தான் ஆசைப்படுவதைச் செய்யவிடாமல், விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல்,  படைப்பாளிப் பெண்ணொருத்தியின் பெரும் பான்மையான பொழுதுகளை அநியாயமாகக் களவாடும், சமையலறையின் குறியீடாக குக்கரைப் பயன்படுத்திச் சோகத்தை வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையை, நான் மிகவும் ரசித்தேன்.
அதனை நீங்களும் சுவைக்கக் கொஞ்சம்:-
பட்டாம்பூச்சியைப் போல
வெயில் காய முடிந்தால்
……….
அதோ ஒடிந்து தொங்கும் கிளையில்
அச்சமின்றி ஊஞ்சலாடும்
காக்கைக்கு ஜோடியாக முடிந்தால்….
ம்ம்ம்.
குக்கர் ஐந்து விசில் கொடுத்தாச்சு.”

‘படைப்பாளி,’ என்ற கவிதையிலும், காய்கறி, கீரை ஆகியவற்றை ஆய்ந்து அடுக்கிய பின், கவிதை படைக்கவியலாமல், ஏடு மூடும் வேதனையைப் பகிர்கிறார்.     

பெண்ணியக் கவிதைகளுக்கு அடுத்தபடியாக சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞரின் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன;

போன தலைமுறையில்
வைத்த பலாக்கன்றாக
ப்ரியம்
வளர்ந்து கொண்டிருக்கிறது
வன்மமோ
கருவைக்காடு  (வளர்ச்சி)

விஷமிக்க வேலிகாத்தான் என்று சொல்லப்படும் கருவை மரம் காடாகப்  பல்கிப் பெருகி நாட்டை ஆக்ரமித்தது போல், வன்மமும் குரோதமும் வளர்கின்றன;  ஆனால் அன்பும், மனித நேயமும், தலைமுறை தாண்டியும்  இன்னும் வளராத பலாக் கன்றாகவே…..

உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டவாறே, தொலைக்காட்சியில் ரத்தம் தெறிக்கும் விபத்து, வக்கிரம், ஆபாசம், வன்புணர்வு கொடூரம் நிறைந்த காட்சிகளை எவ்வித அதிர்வுமின்றி மெளனமாகக் காணும் மனிதர்களைப் பார்க்கும் போது,  உணர்வு ‘மரத்’துப் போன இவர்களும், நானும் ஒன்றே என்று நினைக்குமாம் மேசை;

ஆனால் என்றாவது உணவில் ஒரு கல் உப்பு குறைந்து விட்டால் விழும் வசவையும் , கண்ணீரையும் பார்க்க நேரும் போது தான்,  “அடடா! இவர்களும் நானும் ஒன்றல்ல; இவர்கள் உயர்திணையைச் சேர்ந்தவர்கள்,” என்ற ‘உண்மை’யை உணருமாம்:-  (உயர்திணைப்பிறப்பு)
“உணவில் குறையும்
ஒரு கல் உப்பைச் சகியாப் பொழுதுகளில்
விழும் வசவும், கண்ணீரும்
மீண்டும் திணை காட்டும்”

நான் யார் என்கிற தேடல் தான், தேடலில் தலையாய தேடல் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, இத்தொகுப்பில் இரண்டு கவிதைகள் உள்ளன:-
நான் என் பெயரிலும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
(‘இல்லாமல் இருப்பதுவும் இருப்பே,’) 
எனக்குத் தெரியாத நான்
எங்கோ இருக்கிறேன்
எங்கிருக்கிறேன்
இருக்கிறேனா? (‘எனக்குத் தெரியாத நான்’) 

யாரிடமும் சொல்லாமல், வேப்பமரத்தை வெட்டி விட்டார்கள் என்ற  சோகச் செய்தியைச் சொன்ன போதிலும், அநித்தியம் கவிதையின்
கீழ்வரிகளில் இழையோடும் நகைச்சுவையைப் பெரிதும் ரசித்தேன்:-

ஜன்னல் திறந்து
மூச்சுப் பயிற்சியில்
முழு மரத்தையும்
இழுக்கப் பார்க்கும்
மாடி வீட்டுப் பாஸ்கரிடம்

தோழி மஞ்சள்கறுப்பி பட்டாம்பூச்சியுடன் கழித்த இனிய நாட்களை நினைவு கூர்ந்து, இடையில் மறந்தமைக்காக, அவளிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கும் என் தோழி பாடல் வெகு அருமை!

எல்லாருக்காகவும் வேண்டுதல் செய்ய மனமின்றி, தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளைகள் எனக் குறுகிய மனப்பான்மை பெருகி விட்டாலும், வன்மம் பெருகி மனித நேயம் அருகி விட்டாலும், ஒற்றை வயலின் இழுப்பில் உயிர் துளிர்க்க வைப்பவன், பெயரறியாத் தெய்வத்துக்காக சம்பங்கி பூக்கள் தொடுப்பவன் என நம்பிக்கையுடன் வாழ இன்னும்  இருக்கிறது உலகம்  (பிட்சாந்தேஹி) என்று நேர்மறை எண்ணத்தை, வாசகர் மனதில் விதைக்கும் கவிஞர் பாராட்டுக்குரியவர்!

இது போல் இன்னும் சிறந்த ஆக்கங்களைத் தமிழுக்கு இவர் அளிக்க வேண்டும் என்று உமா மோகனை வாழ்த்துகிறேன்!

பாராட்டுக்கள் தோழி! 

20 comments:

  1. வணக்கம்
    புத்தகம் பற்றி விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. புத்தகம் கிடைக்க வில்லை படிப்பதற்கு தங்களின் விமர்சனத்தின் வழி பார்த்தபோது படிக்க வேண்டும் என்ற ஆசை.. வருகிறது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி ரூபன்! படிக்க வேண்டும் என்று தூண்டுமளவு என் பகிர்வு அமைந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி! புத்தகம் கிடைக்கும் போது வாசித்து மகிழுங்கள்! மீண்டும் நன்றி ரூபன்!

      Delete
  2. நெகிழ வைத்த "நெஞ்சு இரண்டாக" உட்பட ஆழ்ந்த விமர்சனம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் அருமை எனப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. கவிதை உங்களை மட்டுமல்ல எங்களையும் பாதித்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  4. //..குழந்தைப் பருவத்திலேயே
    குறுவாள் கொடுத்திடவா
    தவழும் போதே
    தற்காப்புக் கலை சொல்லவா?..//

    கண்டிப்பாக - ஈரமுள்ளவர் நெஞ்சு இரண்டாகும்..

    நேர்த்தியான விமரிசனம்..
    உங்களுடன் நானும் பாராட்டுகின்றேன்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நேர்த்தியான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிகுந்த நன்றி துரை சார்!

      Delete
  5. அருமை அருமை கலை. மிக அழகான விமர்சனம். சிறப்பான கவிதைகள். உமாவுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி தேன்! உமா சார்பாகவும் நன்றி!

      Delete
  6. ஆஹா ....மிகச் சிறப்பான விமர்சனத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி .பின்னூட்டமிட்டுப் பாராட்டியுள்ள அன்பு நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான விமர்சனம் என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி உமா!

      Delete
  7. மிக சிறப்பான விமர்சனம் அக்கா. உமா மோகன் அவர்களுடைய கவிதைகளை யாவும் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி நிற்பவை. அவருடைய கவிதைகளில் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டி விமர்சித்திருப்பது மகிழ்வாக உள்ளது. நன்றியும் பாராட்டும் அக்கா. உமா மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா! வாழ்த்தை உமாவிடம் சேர்த்துவிடுகிறேன்!

      Delete
  8. எடுத்துக் காட்டியுள்ள கவிதை வரிகள் சிறப்பாக இருக்கின்றன.

    குறிப்பாக இந்த வரிகள்..

    //அதோ ஒடிந்து தொங்கும் கிளையில்
    அச்சமின்றி ஊஞ்சலாடும்
    காக்கைக்கு ஜோடியாக முடிந்தால்….
    ம்ம்ம்.
    குக்கர் ஐந்து விசில் கொடுத்தாச்சு.”//

    //“நிறங்களால் கொண்டாடப் பெறுபவள்
    அணிகளால் அழகு சேர்ப்பவள்
    பூச்சுகளால் பிரகாசிப்பவள்
    இவ்வளவு தான் நான் உனக்கு.”//


    நற்பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! தாங்கள் ரசித்த வரிகளை எடுத்துக் காட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி!

      Delete
  9. அருமையான நூல் அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான அறிமுகம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி குமார்!

      Delete
  10. கவிதை நூல் விமர்சனம் மிகவும் அருமையாகச் செய்துள்ளீர்கள். தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளவற்றில் பல எனக்கும் பிடித்துள்ளன.

    குறிப்பாக ‘நெஞ்சு இரண்டாக,’ + ’குக்கர் ஐந்து விசில் கொடுத்தாச்சு’. + ’தலைமுறை தாண்டிய பின்னும்’ போன்றவற்றைச் சொல்வேன்.

    அருமையாகக் கவிதைத்தொகுப்பு நூல் எழுதியுள்ளவருக்கும், அதனை வெகு அழகாக விமர்சனம் செய்துள்ள தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்..

    ReplyDelete
  11. பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete