நல்வரவு

வணக்கம் !

Wednesday 25 March 2015

இன்று சிட்டுக்குருவி! நாளை நம் சந்ததிகள்!

ஆண்குருவி

(20/03/2015 சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)

சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது.  20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது.  .
  
அதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக  நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.     
 
பெண்குருவி

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுவன:-
1.   சிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம்.  அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. 
மேலும் தோட்டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.    

இன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை.  காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்?

2.    இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன.  . 

எனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை.  மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.

3.   அரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும்  இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும்.  ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.      

4.   செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

காலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம்,  நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச் சின்னஞ்சிறு உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அம்போ என்று நட்டாற்றில் விட்டது நியாயமா?.    

சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்தால் பாவம்; அது கூடு கட்டுவது குடும்பத்துக்கு நல்லது,’ என்று நம் முன்னோரிடமிருந்த நம்பிக்கையால் தடையேதுமில்லாமல், அக்காலத்தில் இதன் இனப்பெருக்கம் நடைபெற்றது.   .
மேலும் கிராமத்தில் வீட்டுக்கூரையின் முன்பக்கம் இவை கொத்தித் தின்னப் வயலில் புதிதாக அறுத்த நெல்மணி கொத்துக்களைச் செருகி வைப்பார்களாம்.  இயற்கையை நேசித்தல் அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது.  ஆனால் நாமோ இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம்!  அதன் விளைவைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

மனிதரிடம் அடைக்கலம் புகுவதால், இதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு.  ஆனால் இன்று இக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்பார் யாருமில்லை.

‘சிட்டுக்குருவியால் நமக்கென்ன பயன்? ஏன் அதைக் காப்பாற்ற வேண்டும்?’ என்று கேட்கும் அறிவாளிகளும்(!) இன்று நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். 

இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்:-
இயற்கையில் தாவரம், புழு, பறவை, விலங்கு, மனிதன் என அனைத்தும் உணவுக்காகத் தொடர் சங்கிலி போலப் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு படைக்கப்பட்டுள்ளன.
 
பறவைகள் அழிகின்றன என்றால், இச்சங்கிலி ஏதோ ஓர் இடத்தில் அறுபட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.  இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்து விடும்.

“இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை பறவைகள் தாம்; அவற்றுக்குக் கேடு எனில், நாமும் கூடிய விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன்.(Roger Tory Peterson)  .  

சிட்டுக்குருவியைக் காப்பதால் எனக்கென்ன நேரடி நன்மை என்று ஒவ்வொன்றுக்கும் லாப நஷ்டம் கணக்குப் போட்டுப் பார்த்து உதவி செய்யுமளவுக்கு மனங்கள் குறுகிப்போன இந்நாளில், முன்னெப்போதும் இல்லாத அளவு, வாஸ்து சாஸ்திரம் மிகப் பிரபலமாயிருக்கிறது.

கீரைக்காரியிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம், பேரம் பேசும் நம் மக்கள், வாஸ்துவுக்காக சீனா மூங்கிலை நூற்றைம்பது ரூபாய்(!) கொடுத்து வாங்கி வரவேற்பறையில் வைத்து அனுதினமும் அக்கறையாகக் கவனிக்கிறார்கள்.  இந்த மூங்கிலால் இவர்களுக்குப்  பலன் கிடைக்கிறதோ இல்லையோ, சீனாக்காரனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கிறது.  அவனுக்குத் தான் நம் வாஸ்துவினால் கொண்டாட்டம்!

சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தால், ஒரே மாதத்தில் உழைக்காமல் கோடீசுவரன் ஆகி விடலாம்,’ என்று பிரபல வாஸ்து ஜோசியர் யாராவது சொன்னால் போதும்; அதற்குப் பிறகு நாம் சிட்டுக்குருவி தினம் அனுசரித்து, இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை. வாஸ்து ஜோசியர் யாராவது மனம் வைக்க வேண்டும்!

www.citizensparrow.in/ என்ற தளம் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.  (நானும் கலந்து கொண்டு, எனக்குத் தெரிந்த தகவல்களை அளித்தேன்.)


8780 இடங்களிலிருந்து 5924 பேர் கலந்து கொண்டு அளித்த 11146 தகவல்களின் அடிப்படையில் இத்தளம், சிட்டுக்குருவி எங்கெங்கு இருக்கிறது, எங்கு இல்லை என்ற பட்டியலைத் தயாரித்து  வெளியிட்டிருக்கிறது. மேற்கூறிய தளத்துக்குச் சென்றால் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம். 


இப்போதும் கூட இத்தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, உங்களூரில் சிட்டுக்குருவியைப் பார்த்த தகவல்களை அளித்து, இது பற்றிய கணக்கெடுப்புக்கு உங்களால் உதவ முடியும்:-   இணைப்பு:- http://www.citizensparrow.in


இந்தச் சிட்டுக்குருவி தினத்தை வீட்டில், பள்ளியில் அலுவலகத்தில் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றறிய, இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.-  www.worldsparrowday.org


சிட்டுக்குருவி கூடுகள், உணவளிப்பான் (Bird Feeder) போன்றவற்றை வாங்க:-  www.save.natureforever.org
(Bird Feeder க்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை; என் ஆக்கம்  உணவளிப்பான்! யாருக்கேனும் சரியான சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)

முடிந்து போனதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை.சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க, இனி நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறீர்களா?

இதை……இதைத் தான்…… நான் எதிர்பார்த்தேன்.

உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.

எப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.

அடுத்த பதிவுக்குச் செல்ல...




 
(முதல் படம் நன்றி இணையம்)

50 comments:

  1. //உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும். நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்!..//

    இனிய பதிவு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. இனிய பதிவு என்று சொல்லி வாழ்த்தியமைக்கும், முதல் கருத்துரைக்கும் மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  2. உண்மைதான்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பகிர்வு என்று பாராட்டியதற்கு மிகவும் நன்றி குமார்!

      Delete
  3. சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு.

    //உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.
    எப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.//

    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு என்று பாராட்டியதற்கு மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  4. ஏதோ ஒரு விளம்பரத்துக்காக உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என்று சுவரில் எழுதிப் போட்டிருப்பார்கள். அது போல எதிர்கால அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள பறவை இனங்களை நாம் காக்க வேண்டும்.

    எங்கள் பாஸிட்டிவ் செய்திகளில் கடந்த இரு வாரங்களில் இரண்டு குடும்பங்கள் பற்றி படித்ததைப் பகிர்ந்திருந்தோம். வீட்டின் ஒரு பகுதியையே குருவிகளுக்குக் கொடுத்தவர்கள் பற்றி ஒன்று, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பவர்கள் பற்றி ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு செய்திகளையும் நான் அப்போதே வாசித்தேன் ஸ்ரீராம். நீங்கள் தரும் பாசிட்டிவ் செய்திகள் மிகவும் பயனுள்ளவை. என்னைப் பெரிதும் கவர்ந்தது பமீலா தம்பதியினரின் சாதனை. 23 ஆண்டுகள் உழைத்துத் தரிசு நிலத்தை விலங்குகள் சரணாலயமாக மாற்றியது. தண்ணீர் இல்லாமல் நீர்ச்சத்து குறைந்து நிறைய பறவைகள் இறக்கின்றனவாம். அதனால் தான் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது புண்ணியம் என்று அந்த நாளில் சொன்னார்கள். எந்த நல்லவிஷயத்துக்குமே புண்ணியம் பாவம் என்று சொன்னால் தான் நம் மக்கள் அதைக் கடைபிடிப்பார்கள். எல்லோருமே அவரவர் வீட்டில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கலாம். கருத்துரைக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  5. அருமையான பகிர்வு... இணைப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப்பாராட்டியதற்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  6. வணக்கம் சகோ.

    உங்களைப் போன்றவர்களின் இதுபோன்ற சிந்தனைகளும் பதிவுகளும் இன்றய உலகில் அத்தியாவசியத் தேவை உள்ளவை. இந்த வகையில் உங்கள் பதிவின் செய்திகளும் சிட்டுக் குருவிகளின் நலனுக்கான ஏறெடுப்பையும் மகிழ்வுடன் காண்கிறது மனம்.

    தற்பொழுதெல்லாம் நீளமான பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கிறேன். சில சங்கடங்களை அதனால் தவிர்க்க முடியும் என்பதால்.....:)) ஆனால் இப்பதிவைப் படித்து முடிக்கும் முன்பாகவே எழுத வேண்டிய பின்னூட்டம் மென்மேலும் விரிந்து செல்லும் என்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. இம்முறை நான் அவற்றைத் தவிர்க்க நினைக்கவில்லை. நினைக்கும் எல்லாவற்றையும் சொல்ல இயலாவிட்டாலும் அவற்றை மட்டுப்படுத்தி ஒரே ஒரு செய்தியை மட்டும் பகிர்தல் அவசியம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த இயற்கைச் சங்கிலி………………… சரியாக அதனைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நினைத்துப் பார்த்தால் மனிதர்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும். நிச்சயம் நன்றாகவே இருக்கும். ஏனெனில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தம் தேவைக்குக் கிடைப்பது போதும். எல்லாம் வேண்டும் எனும் பேராசை அவற்றிற்கு இல்லை. மாறாகத் தாவரங்களும் விலங்குகளும் ( பறவைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இல்லாத உலகில் மனிதர்கள் இருக்க முடியுமா...?

    இங்கு அவைதான் மனித குலத்திற்குத் தேவையே தவிர நாம் அவற்றிற்குத் தேவையே இல்லை என்கிற உணர்வு முதலில் நமக்கு வேண்டியது.

    மனிதர்களுக்கு சிட்டுக்குருவி அழிந்தால் என்ன “அன்றில்“ மறைந்தால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது....? அல்லது அது தொலைதலால் மனித இனம் மாண்டழியப்போகிறதா என்கிற எண்ணம் இருக்கிறது.

    ஆனால் ஒரு சிறு பறவை இனத்தின் அழிவு இயற்கைச் சங்கிலியை எவ்வாறு சிதைக்கிறது என்பதை அவர்கள் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    அது 1970 களில் அமெரிக்க சூழலியலாளர் ஸ்டான்லி என்பவர் தாவர இனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மொரீஷியஸ் தீவிற்குச் செல்வதில் இருந்து தொடங்குகிறது.

    அங்கு செல்லும் அவர் மொரீஷியஸ் காடுகளில் மட்டுமே காணப்பட்ட ஒரு விசித்திர மரவகையைப் பார்க்கிறார். அம்மரத்தின் பெயர் கால்வரியா மேஜர். வேறெங்கும் காண முடியாத அம்மரங்கள் மொரீஷியஸ் தீவில் மொத்தம் 13 தான் இருக்கிறது.
    ஒவ்வொரு மரத்தின் வயதும் 300 ஆண்டுகளுக்கு மேல் .அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவை. அழிந்து போனால் உலக தாவர இனத்தில் மீட்டெடுக்க முடியாத அழிந்த வகைகளுள் அப்பெயரும் சேர்க்கப்பட்டுவிடும்.

    300 ஆண்டுகளாக அம் மரம் இனப்பெருக்கம் செய்யவில்லையா ? ஏன் அதன் கன்றுகள் இல்லை. வேறு மரங்கள் இல்லை என்று ஆய்கிறார்.

    அம் மரங்களின் விதைகள்.... பதியனிடல் போன்ற பல வகைகளில் முயன்றும் அம்மரவகையை இனப்பெருக்கம் செய்ய அவரால் முடியவில்லை.

    அவரது மனம் மிகத் தளர்கிறது.

    விதையின்றியோ பதியனின்றியோ வேறுமுறைகளிலோ இந்த மரம் பெருகவில்லை என்றால் வானத்தில் இருந்து யாராவது கொண்டு இதனை நட்டிருக்கவா முடியும்.....?!!!!

    நீண்ட ஆய்வுக்குப் பிறகு அவரால் அம்மரங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமைக்கான விடை கிடைக்கிறது.

    அது டூடூ என்னும் பறவை அழிந்ததன் வரலாறு…….
    பதினைந்தாம் நூற்றாண்டில் நாடுபிடிக்கும் வெறியுடன் அலைந்த போர்ச்சுகீசியர்களாலும் டச்சுக்காரர்களாலும் துண்டாடப்பட்ட தீவு மொரீஷியஸ்.
    சூழ்நிலையின் சொர்க்கமாக விளங்கிய அத்தீவில் அவர்களின் கவனத்தைக் கவர்ந்த ஒரு விடயம் உண்டென்றால் அதுதான் இந்தப் பறவைதான். கோழியைப்போன்ற குட்டையான மனிதர் எவ்வளவு கொடியவர்கள் என்று அறியாமல் ஸ்னேகபாவம் காட்டி அவர்களை நெருங்கிய அப்பாவிப் பறவை.
    அவர்களுக்கு வியப்பாய் இருந்தது.
    அட நம்மைக் கண்டு அஞ்சாத பறவையா…..? நம்மைப் பற்றித் தெரியாமல் இவ்வளவு அப்பபாவிகளாக இவை இருக்கின்றனவே என்ற பொருள்படும் போர்ச்சுகீசச் சொல்லான “Doudu“ என்ற பெயரில் அதை அழைத்த ஐரோப்பியர்கள் தானே விரும்பி வந்து சிக்கும் எண்ணற்ற அந்தப் பறவைகளைப் பிடித்து உண்ணத்தொடங்கினர். மிக வேகமாக அவ்வினம் அதன் சுவைக்காகவும் மனிதனின் பேராசையை சுயநலத்தை எடையிடத் தெரியாத அப்பறவைகளின் அறியாமைக்காகவும் வேட்டையாடப்பட்டன. ஐரோப்பியர்கள் கொண்டுவந்த பன்றிகள் அப்பறவைகள் மண்ணில் தோண்டி இட்ட முட்டைகளையும் மிச்சமில்லாமல் தேடிச் சிதைத்தழித்தன.
    இப்படியாகப் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மொரீஷியஸ் தீவில் மட்டுமே வாழ்ந்த டூடூ என்றழைக்கப்பட்ட அப்பறவை இனத்தின் கதை உலக இயற்கைச் சூழலிடமிருந்து தன்னைக் கண்ணீரோடு விடுவித்துக் கொண்டது.
    தாங்கள் செய்வது இன்னது என எப்போதும் போல் அறியாமல் நிகழ்ந்த மனிதத் தவறு இது.
    .....................................................................................................தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. சரி அதற்கும் இந்தக் கால்வரியா மேஜர் மரத்தின் இனப்பெருக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால்………. இருக்கிறது.
      ஸ்டான்லி அதைத்தான் கண்டுபிடித்தார்.
      டூடூ பறவைகளின் முக்கிய உணவே இம்மரத்தின் உதிர்ந்து விழும் காய்கள்தான். இம்மரத்தின் அவ்விதைகள் கடினமான ஓட்டினை உடையவை.
      சாதாரணமாக மண்ணில் விழுந்தால் அம்மரவிதைகளின் உட்கரு கடினமான அதன் வெளியோட்டைத் துளைத்து முளைக்க முடியாது.
      அந்த வெளியோட்டின் கடினத்தை நீக்கி மென்மையாக்கும் பணியைத்தான் டூடூ பறவைகள் செய்தன.
      டூடூ பறவைகளின் பெருங்குடல் அந்த வேலையைச் செய்தது. விதையின் உட்கருவிற்கு எந்தப்பாதிப்பும் நேராமல் அதன் வெளியோட்டில் இருந்து தனக்கான உணவைப் பெற்று அவ்விதைகளை அடைகாத்து மண்ணிற்களித்தது அப்பறவை.
      டூடூ பறவையின் கழிவிலிருந்து மட்டுமே கால்வரியா மேஜரின் விதைகள் முளைவிடும்.
      தன்முட்டைகளோடு தாவர வித்துகளையும் உயிர்மீட்டு அளிக்குமொரு பறவை.
      மரம் பறவையோடு செய்திருந்த உயிர்த்தலின் ஒப்பந்தம் அது.
      இயற்கைச் சங்கிலி என்று நாம் சொல்வது நமக்குத் தெரியாமல் நடைபெறும் இதுபோன்ற பல பரிபாஷைகளைத்தான்.
      அது அழிந்தது.
      கனவுகளோடு கால்வரியா மேஜரின் கணக்கற்ற விதைகள் உயிர்க்கக் காத்திருந்து காத்திருந்து உயிர்ப்பூட்டுவாரின்றிக் கருவிலேயே கண்ணடைத்துவிட்டன.
      அம் மரக் காடுகள் அழிந்தன.
      பறவை அழிந்தது.

      மனிதன் தன்னை மட்டுமே நினைக்கின்ற பேராசையோடு அடுத்தடுத்த தாவரத்தை, பறவையை, விலங்கை நோக்கித் தன் கண்களைத் திருப்புகிறான்.
      இன்னும் தொடர்வது முறையாக இருக்காது என்பதால், நிறைகிறேன்.
      தொடருங்கள்.

      தொடர்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. “கனவுகளோடு கால்வரியா மேஜரின் கணக்கற்ற விதைகள் உயிர்க்கக் காத்திருந்து காத்திருந்து உயிர்ப்பூட்டுவாரின்றிக் கருவிலேயே கண்ணடைத்துவிட்டன.
      அம் மரக் காடுகள் அழிந்தன.
      பறவை அழிந்தது.”

      வணக்கம் சகோ!
      மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைப் படித்தவுடன் அவலச்சுவை நிரம்பிய கவிதை ஒன்றைப் படித்தது போல் மனம் மிகவும் கனத்துப் போயிற்று. நமக்குத் தெரிந்து இது ஒன்று; தெரியாமல் இது போல் எத்தனையெத்தனை தாவரங்களும், மற்ற உயிரினங்களும் அழிந்தனவோ?
      இயற்கைக்கு எதிரான மனிதனின் அட்டூழியங்கள் பற்றி, உங்கள் தளத்தில் தனியாக இரண்டு, மூன்று பதிவுகள் போடுமளவுக்கு உங்கள் கைவசம் ஏகப்பட்ட செய்திகள் உள்ளன. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி பரந்து பட்ட ஆழமான வாசிப்பின் மூலம் நிறைய செய்திகளைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள். எனவே உங்கள் பின்னூட்டம் பல அரிய செய்திகளை நாங்களனைவரும் அறிந்து கொள்ள உதவுகின்றது.
      டூடூ பற்றியும் இந்த மரங்கள் பற்றியும் நான் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. நீங்கள் குறிப்பிட்ட பின் தான் இணையத்தில் இவை பற்றிய செய்திகளைத் தேடி வாசித்தேன். இது பற்றிய புத்தகம் ஏதும் இருக்கிறதா? இது போல் பதிவுக்குத் தொடர்புடைய வேறு செய்திகள் தெரிந்திருந்தால் அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
      பொறுமையாகத் தட்டச்சி நீண்ட பின்னூட்டம் கொடுத்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோ! தொடர்வதற்கு மீண்டும் என் நன்றி சகோ!

      Delete
    3. நீண்ட பின்னூட்டம் எழுதுவதைத் தற்போது தவிர்க்கிறேன் என்றறிந்து வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் என் பதிவுக்கு உங்கள் முடிவைச் சற்றே தளர்த்தியமைக்குத் தனியே நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இயற்கைக்கு எதிரான மனிதன் குறித்துத் தனியே உங்கள் தளத்தில் பதிவுகள் எழுதினாலும் மகிழ்வேன். அறியாச் செய்திகளை எழுதிய உங்களுக்கு மீண்டும் நன்றி.

      Delete
    4. டூடூ பறவை அழிந்த வரலாறும் அதனால் ஏற்பட்டிருக்கும் இயற்கையின் சமன்பாட்டுக்குலைவு பற்றியும் அறிய, வருத்தமும் வேதனையுமே மிஞ்சுகிறது. இப்போது நான் எழுதிவரும் தொடரான ஒண்டவந்த பிடாரிகளின் களமும் இதுதான். இயற்கைக்கு எதிரான பல புதிய விலங்குகள் பறவைகளின் அறிமுகம் அங்கு ஏற்கனவே உள்ள உயிரினங்களை அழித்துவிடுவதை அறிந்தும் மனிதர்கள் தொடர்ந்து தவறு செய்வது வேதனை அளிக்கும் செயல். புதிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

      Delete
    5. ஆம் கீதா. நீ எழுதும் தொடரும் இதே களம் தான். இயற்கைக்கு எதிராகப் பல புதிய விலங்கினங்களையும் தாவரங்களையும் அந்நிய மண்ணில் புகுத்தும் போது அதனால் ஏற்படும் இயற்கை சமன்குலைவை அருமையாகத் தொடர்ந்து எழுதி வருகிறாய். பல உண்மைகள் இதனால் தெரியவருகின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!

      Delete
    6. அன்புச் சகோதரி,
      என்னைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்கிறீர்கள். வாசிப்பு அது எங்கள் பணிக்கான மூலதனம். அதிஷ்டவசமாய் தெரிந்தோ தெரியாமலோ அதை என் சிறு வயதில் இருந்தே சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். தேர்வுகளுக்காகவோ ஏதேனும் பயன்பாடு கருதியோ படித்ததல்ல ஒன்று. அது ஒரு சுகம். ஒரு போதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

      இந்த வலைத்தளம் எனக்குப் புதிது. நான் இதனுள் நுழைந்து ஓராண்டு இன்னும் நிறைவுறவில்லை.
      இங்கியங்குபவர்களின் வயதோடும் அறிவோடும் ஒப்பிட்டால் என் வயதும் அறிவும் மிகக் குறைவுதான்.
      பிறகு இந்தப் பின்னூட்டங்கள்...............................!
      வலையுலகத்திற்கு வந்த புதிதில் பல பக்கங்களுக்கு பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தேன் . ஆனால் பலரும் அதை விரும்பவில்லை (இப்போதும் கூட ) என்பது பின்னர் புரிந்தது.
      நான் மிக மதிக்கும் நண்பர் ஒருவரின் இரண்டு ஆலோசனைகள்,
      1) அடுத்தவர் பதிவுகளில் பின்னூட்டத்தை நீட்டாதே..!
      2) பின்னூட்டமிட்டுவிட்டுத் திரும்பவும் அங்கு போய்ப் பார்க்காதே
      என்பதாய்த்தான் இருந்தது. பெரும்பாலும் அதன்பின் நான் அதைக் கடைபிடித்தே வருகிறேன்.

      உங்கள் பின்னூட்டத்தில் தட்டச்சத் தொடங்கியபோதே லேசாக அந்தப் பயம் இருந்தது.
      கூடவே திட்டி எதுவும் கூறிவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும்.....
      அது வீண்போகவில்லை.

      என் பதிவுகள் நான் தமிழை இன்னும் சற்று அதிகமாய்ப் பார்க்கவே பயன்படுத்துகிறேன் என்பதால் நான் விரும்புகின்ற பலவிடயங்களை அங்குப் பகிர இயலவில்லை. உங்களுக்குப் பயன்படும் எனில் நிச்சயம் பகிர்தல் தடையில்லை.

      சரி சிட்டுக்குருவியைப் பற்றிச் சொல்லும் போது இந்தப் பாடலைச் சொல்லாமல் நீங்கள் இருக்க முடியாது.

      சென்ற பின்னூட்டத்தில் சில செயதிகளைத் தட்டச்சு செய்தபின் விரிவஞ்சி நீக்கயனவற்றுள் தலையானது , “ ஆம்பற் பூவின் சாம்ப லன்ன “ (குறுந். 46) என்னும் இந்தப் பாடல்.

      வேறு சில இடங்களில் இக்குருவி சொல்லப்பட்டாலும் இப்பாடலின் சிறப்பு, அதிலுள்ள 7 வரிகளில் 5 வரிகள் சிட்டுக்குருவியின் தோற்றம், அதன் வாழிடம், உணவு , செயல்பாடுகள், பற்றிய செய்திகளைச் சொல்பவை.
      அதன் தோற்றத்திற்கு மாமலாடனார் சொல்லும் உவமையைப் பார்த்தால் நிச்சயம் உங்கள் விழிகள் வியப்பால் விரிந்துவிடும் என்று என்னால் உறுதி கூற முடியும்.

      http://en.wikipedia.org/wiki/Nymphaea_pubescens

      இணைப்பில் சென்று இந்தப் பூவின் படத்தைப் பாருங்கள்.
      இதன் சரியான தாவரவியல் பெயர் 'Nymphaea pubescens willd ' என்பது.

      அதன் ஒரு இதழைப் பாருங்கள்.

      அது உலர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள்.
      ( இந்தப் பாடலின் உள்ளுறைக்குள் எல்லாம் கடக்க வேண்டியதில்லை. ).

      மீண்டும் பாடலைப் பாருங்கள்.

      நீங்கள் ஒரு தனிப்பதிவையே இடுமளவிற்கு ஆச்சரியங்கள் இருக்கின்றன.
      உங்களைப் போன்றவர்களிடத்தில் இருந்துதான் நான் பலவற்றையும் கற்றேன். இன்றளவும் கற்கிறேன்.


      நன்றி.

      Delete
    7. அன்புச்சகோ,
      உங்கள் மீள்வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.
      உங்களைப் பற்றி நான் கற்பனை ஏதும் செய்யவில்லை; வெறும் புகழ்ச்சிக்காகவும் சொல்லவில்லை. உங்கள் பதிவுகள் சிலவற்றை வாசித்த பிறகு என் மனதிற்குப் பட்டதையே சொன்னேன்.
      பதிவுலகுக்கு நீங்கள் புதியவராக இருக்கலாம்; வயதில் மிகவும் இளையவராகவும் இருக்கலாம். ஆனால் மற்றவரோடு ஒப்பிடும் போது அறிவு மிகக் குறைவு என்று நீங்கள் கூறுவதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன், அறிவுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. குழந்தைகளிடம் இருந்து கூட நமக்குத் தெரியாத சில விஷயங்களைக் நாம் கற்றுக்கொள்ள முடியும். உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம். நிறைகுடம் என்றுமே தளும்பாது அல்லவா?
      பின்னூட்டம் பற்றி நீங்கள் கூறுவது விசித்திரமாயிருக்கிறது. இணையத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகள் கொட்டிக்கிடக்கும் போது நம் பதிவுகளைப் படிக்க வருபவர்கள் மிகவும் குறைவு; அதிலும் வாசித்து விட்டுக் கருத்து எழுதுபவர்கள், அதை விடக் குறைவு; அப்படியே எழுதினாலும் அவரவர்க்கு இருக்கும் வேலையில், ஒன்றிரண்டு வரிகள் எழுதிச் செல்பவர்களே அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் நம் பதிவுக்கென்று நேரம் ஒதுக்கி அவர் வேலைகளை விட்டு நீண்ட பின்னூட்டம் எழுதுகிறார் என்றால் அதற்குப் பதிவர்கள் மகிழ்ச்சியல்லவா அடையவேண்டும்? அதை விடுத்து நீண்ட பின்னூட்டம் விரும்பாதவர்களும் இருக்கிறார்கள் என்றால் கேட்கவே ஆச்சரியமாயிருக்கிறது.
      என்னைப் பொறுத்தவரை என் பதிவைப் படித்துக் கருத்து எழுதுபவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நம் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் என எப்போதுமே நம்புகிறேன். எனவே எப்போதுமே என் பதிவை வாசிக்கும் போது உங்களுக்கு அது தொடர்பாகத் தோன்றும் கருத்துக்களைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பின்னூட்டம் பல புதிய செய்திகளை நான் மட்டுமின்றிப் பதிவை வாசிக்கும் பலரும் தெரிந்து கொள்ள உதவுகின்றது.
      அடுத்து நீங்கள் சொன்ன இணைப்புக்குச் சென்று ஆம்பல் மலரைப் பார்த்தேன். முடிவில் லேசாக பிளவுபட்ட இதழைக் காய்ந்த இதழாகக் கற்பனை பண்ணிப்பார்த்தேன். குருவி அதில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. வெகு அற்புதம்! பாடலும் அருமை! புதுப்பாடல் ஒன்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!
      நேரமிருந்தால் சிட்டுக்குருவி பற்றி உங்களுக்குத் தெரிந்த வேறு பாடல்களின் குறிப்புக்களைக் கொடுக்கவும். வாசிப்பின்பத்துக்காக மட்டுமின்றி, சிட்டுக்குருவி பற்றி இலக்கியங்களில் சொல்லியிருப்பதைத் தொகுக்கவும் அது பயன்படும்.
      நீங்கள் சொன்ன பி.எல்.சாமி எழுதிய புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வெளியீடு. ஆன்லைனில் தேடிப்பார்த்தேன். எங்காவது கிடைக்கும் விபரம் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
      தமிழுக்காக மட்டுமே உங்கள் தளத்தைப் பயன்படுத்தப் போகிறேன் என்று சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் ஏன் வேறு தளம் ஒன்று துவங்கக் கூடாது? தமிழுக்கு ஒன்றும், தமிழல்லாத செய்திகளுக்காக ஒன்றும்! என் யோசனையைப் பரிசீலித்துப் பாருங்கள். புதிதாக நீங்கள் ஒன்று துவங்கும் வரை, உங்களிடமிருந்து புதுப்புது செய்திகளை எளிதாகச் சேகரித்து என் சொந்த சரக்கு போல் பதிவுகள் வெளியிட்டுக்கொண்டிருப்பேன்!
      மீண்டும் நன்றி சகோ! நீண்ட பின்னூட்டம் எழுதுவதில் நானும் சளைத்தவளல்ல. ஆனால் சரக்கிருக்காது!


      Delete
  7. அதன் இனம் வளர ஈரத்துடன்,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் கண்டிப்பாக அந்த ஈரம் இருக்கிறது மகேஸ்! அடுத்த பதிவைப் படித்துவிட்டு உங்களால் முடிந்ததைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. கருத்துக்கு மிகவும் நன்றி மகேஸ்!

      Delete
  8. அன்பின் ''ஊமைக்கனவுகள்''அவர்கள் - அழிந்து போன டூடூ பறவையினத்தைப் பற்றிக் குறித்தவற்றைப் படித்தபின் மனம் மிகக் கலங்கியது..

    எத்தனை கோர முகம் ஐரோப்பியனுக்கு!..
    அண்டி வந்த உயிரினங்களை அழித்த செயல் அரக்கருக்கும் மேலே!..

    ஒரு தகவலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய தகவலை அளித்தமைக்கு நன்றி..

    ஆயினும், தங்களின் கனிவான கவனத்திற்கு..

    தங்களின் செய்தியினைப் படித்ததும் “Doudu“ - என, விக்கியில் தேடினேன்..

    அது - ''Dodo'' - என்று குறிப்பிட்டுத் தகவல்களை வாரி வழங்கியது..
    படிக்கப் படிக்க இதயம் கனத்தது.. கண்கள் கலங்கின

    இறைவனின் படைப்பில் அல்லது இயற்கையின் முகிழ்த்தெழுந்த எல்லாமும் பயனுள்ளவைகளே..

    ஆயினும் -

    பயனற்றதாகிக் கொண்டிருப்பது - மனித இனமே!..

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தாங்கள் என் தளம் வந்து இப்பின்னூட்டத்தை அங்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
      இது ஒரு போர்ச்சுகீசியச் சொல்.
      அதன் ஒலிபெயர்ப்பில் பிழைகள் நேர்ந்திருக்கலாம்.
      தவறெனில் வருந்துகிறேன்.
      சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. அன்புடையீர்..
      வருத்தமெல்லாம் எதற்கு - ஐயா!..
      தங்களின் அன்பான பதில் தங்களது பெருந்தன்மையைக் காட்டுகின்றது..

      வாழ்க நலம்...

      Delete
    3. “அன்புடையீர்..
      வருத்தமெல்லாம் எதற்கு - ஐயா!..
      தங்களின் அன்பான பதில் தங்களது பெருந்தன்மையைக் காட்டுகின்றது..”

      தங்கள் மீள்வருகைக்கு மிகவும் நன்றி துரை சார்! ஊமைக்கனவுகள் தளத்துக்கு நீங்கள் சென்ற விபரம் அறிந்தேன்.
      இவர் இப்படித்தான் தவறுக்கு வருந்துகிறேன் என்று பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்லித் தம்மை மிகவும் தாழ்த்திக்கொள்வார்,
      அவர் தமிழ்ப்பதிவுகள் ஒன்றிரண்டை அவசியம் வாசித்துப் பாருங்கள். தமிழில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.
      தற்போது சங்க இலக்கியத்தைப் பற்றி அவர் எழுதும் தொடரின் மூலம் அருமையான செய்திகளைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
      என்னைப் போலவே டூடூ பறவை பற்றிச் செய்தியறிந்து நீங்களும் மனம் கலங்கிய விபரம் அறிந்தேன். உங்கள் தொடர் வருகைக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  9. வணக்கம்
    பதிவை படித்த போது பிரமிக்கவைத்தது... நல்ல விழிப்புணர்வு.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல விழிப்புணர்வு என்று பாராட்டியமைக்கும் தொடர்ந்து வந்து ஊக்கமூட்டுவதற்கும் மிகவும் நன்றி ரூபன்!

      Delete
  10. நம்மையே அடைக்கலமாய் வந்த குருவிகளுக்கு நாம் தரும் அன்புப்பரிசு இதுதானா? எவ்வளவு அலட்சியமாய் இருந்திருக்கிறோம் இந்நாள் வரையில்? சிட்டுக்குருவிகளுக்கென்று ஒரு தினம் வைத்து அவற்றைக் கொண்டாடுவதற்கு பதில் நினைவுகூரும் துயரம் நடக்குமுன்பே நல்லவேளையாக விழித்துக்கொண்டுவிட்டனர் மக்கள் பல இடங்களில். தங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலரும் ஒன்றுகூடியோ தனித்தோ தங்களால் இயன்ற பல முயற்சிகளைச் செய்து சிட்டுக்குருவிகளை மீண்டும் தழைக்கச்செய்திருப்பது பெரு மகிழ்வைத் தருகிறது.

    முள்ளை முள்ளால் எடுப்பது போன்று வாஸ்து பைத்தியம் பிடித்திருக்கும் பலருக்கும் இதுபோன்ற நற்சிந்தனைகளையும் நற்செயல்களையும் விதைக்க வாஸ்துவையே குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.

    சிறப்பான பகிர்வு. பல தகவல்களையும் தளங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. பின்னூட்டங்களால் மேலும் பல புதிய தகவல்கள் அறியப்பெற்றோம். மிகுந்த நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான பகிர்வு என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா! இதே களத்தில் நீ எழுதும் ஒண்ட வந்த பிடாரிகளும் மிகச் சிறப்பான பதிவு.

      Delete
  11. முன்காலத்தில் சிட்டுக் குருவிகள் வீட்டுக்குள் கீச்ச் கீச்ச் என ஒலி எழுப்பியவாறு அங்குமிங்கும் பறக்கும் ; முற்றத்தில் பரப்பியுள்ள நெல்லை 20 , 30 குருவிகள் கொண்ட கூட்டம் கொரித்துக்கொண்டிருக்கும் ; யாராவது நெருங்கினால் எல்லாம் ஒரே சமயத்தில் விருட்டென்று பறந்துபோகும்.; எல்லாம் இனிய காட்சி ! சிட்டுக் குருவிக்கும் சிவனுக்கும் சிலேடையாய்க் காளமேகப் புலவர் கூறியது : "பிறப் பிறப்பிலே " விளக்கம் :
    சிட்டுக்குப் பிறப்பு இறப்பிலே . (இறப்பு = இறவானம்); கூரையின் பகுதி .
    சிவனுக்குப் பிறப்பு , இறப்பு இலே ( இல்லை ) .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. முற்றத்தில் காய வைக்கும் நெல்லைத் தின்பதும் யாராவது வந்தால் கூட்டமாக விருட்டென மேலெழும்பி பறப்பதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. சிட்டுக்குருவியையும் சிவனையும் வைத்துக் காளமேகம் சிலேடை கூறியிருப்பது உங்கள் பின்னூட்டத்தால் தெரிந்து கொண்டேன். எறவானம் என்று தான் இன்று வரை நினைத்திருந்தேன். இறவானம் என்பது தான் சரி என்று உங்களால் தெரிந்து கொண்டேன். கருத்துக்கும் புதிய செய்தியைத் தெரிவித்தமைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  12. சகோ! சிட்டுக்குருவி பற்றிய உங்கள் பதிவு, "பதிவு வெளியிட்டு நாளாகி விட்டதே! அடுத்து ஏதாவது ஒன்றைப் பற்றி எழுதியாக வேண்டுமே" என்பது போல் இன்றி, உண்மையான அக்கறையின் ஈரம் படர்ந்திருந்தது. (’என்ன, திடீரென இப்படியெல்லாம் கவித்தனமாக எழுதுகிறானே இவன்!’ என வியக்க வேண்டா! இப்பொழுதுதான் ‘ஊமைக்கனவுகள்’ தளத்திலிருந்து வருகிறேனா, அந்தப் பாதிப்பு, வேறொன்றுமில்லை:-D).

    அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை மீண்டும் வளர வைப்பது எப்படி என அவ்வப்பொழுது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. உங்களைப் போல் அக்கறையுள்ள பெண்மணி ஒருவர் ‘காம்ப்பிளான்’, ‘ஆர்லிக்சு’ போன்ற ஊட்ட பானங்களின் அட்டைப்பெட்டிகளில், மையப் பகுதியில் குறிப்பிட்ட அளவு துளையிட்டு உள்ளே வைக்கோல் பரப்பி வைத்து, நூலில் கட்டித் தொங்க விட்டால், சில நாட்களில் சிட்டுக்குருவிகள் எங்கிருந்தாவது வந்து அதைக் கூடாக ஏற்று முட்டையிடும் என்றார். இதே போல், பானையைப் பாதியாக உடைத்தோ என்னவோ - சரியாக நினைவில்லை - அதில் வைக்கோல் பரப்பி வைத்தாலும் சிட்டுக்குருவி வரும் என்று ஓரிரு ஆண்டுகள் முன் ஆனந்த விகடனில் படித்தேன்.

    மேலே கண்ட உங்கள் பதிவின் இறுதியில், நீங்கள் எழுதியிருந்த வரியைப் பார்த்து, இது போல் நீங்களும் ஏதாவது வழி சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், தளத்தில் ‘சிட்டுக்குருவி’ எனும் சிட்டையில் ஒரு பதிவுதான் இருக்கிறது. :-( விரைவில் நீங்கள் இதன் தொடர்ச்சியை எழுத வேண்டும், சிட்டுக்குருவி வளர்ப்பது எப்படி என விளக்க வேண்டும் எனக் கோரி விடைபெறுகிறேன்.

    நன்றி! வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! வணக்கம். உங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. ஊமைக்கனவுகள் தளத்தின் கவித்துவம் உங்களையும் தொற்றிக்கொண்டது நன்றாகவே தெரிகின்றது! சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து மீட்க என்ன செய்ய வேண்டும் என்ற பதிவில் நான் விலாவாரியாக வழி சொல்லியிருக்கிறேன். அதற்கான இணைப்பு:- http://unjal.blogspot.com/2015/04/blog-post.html இதில் நான் சொல்லியிருப்பவை எல்லாமே என் அனுபவத்தில் நான் செய்வது. இப்பதிவு கண்டிப்பாக உங்களுக்கு உதவும். மீண்டும் நன்றி!

      Delete
    2. ஓ! மிக்க மகிழ்ச்சி! நன்றி! விரைவில் படிக்கிறேன்.

      Delete
  13. பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு செய்தி!

    இரண்டு எச்சரிக்கைகள்!

    எச்சரிக்கை#1
    feedjit செயலி மூலம் மால்வேர் பரவுகிறது. எனவே அதை உடனடியாக நீக்கி விடுங்கள் சகோ! இன்றுதான் நான் நீக்கினேன்.

    எச்சரிக்கை#2
    நீங்கள் தமிழ்10, இன்ட்லி ஆகிய திரட்டிகளின் வாக்குப்பட்டைகளை இன்னும் தளத்திலிருந்து நீக்காமல் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் உங்கள் தளம் திறக்க மிகவும் தாமதமாகிறது. உடனே அவற்றை நீக்கி விடுங்கள். எப்படி நீக்குவது என அறிய: http://agasivapputhamizh.blogspot.com/2016/01/indli-warning.html.

    அது மட்டுமில்லை, நீங்கள் தளத்தின் முகப்பிலேயே திரட்டிகளின் வாக்குப்பட்டைகள் தெரியும்படி வைத்திருக்கிறீர்கள். இதுவும் உங்கள் தளம் திறப்பதைத் தாமதப்படுத்தும். இதைச் சரி செய்ய வாக்களிப்புப் பட்டை நிரல் தொடக்கத்தின் முன்பு

    என்றும், முடிவிற்குப் பின்னால்

    என்றும் சேருங்கள். சரியாகி விடும். எதற்கும் இதைச் செய்யும் முன் தளத்தை Backup செய்து கொள்வது நல்லது. ஏதாவது ஐயமோ, குழப்பமோ இருந்தால் அல்லது செய்ய வராவிட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! என் மின்னஞ்சல் முகவரி: e.bhu.gnaanapragaasan@gmail.com.

    ReplyDelete
  14. நீங்கள் சொன்னது போல் feedjit செயலியை நீக்கிவிட்டேன். நீங்கள் கொடுத்த இணைப்பு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. அதனைப் படித்து வாக்குப் பட்டைகளை (html editing) நீக்கிவிட்டேன். தளத்தின் முகப்பில் திரட்டிகளின் வாக்குப்பட்டைகள் தெரியும்படி வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வது எனக்குப் புரியவில்லை. அவை எங்கிருக்கின்றன எனத் தெரியவில்லை. இதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொடுத்திருப்பது தெளிவாக இல்லை:- இதைச் சரி செய்ய வாக்களிப்புப் பட்டை நிரல் தொடக்கத்தின் முன்பு

    என்றும், முடிவிற்குப் பின்னால்

    என்றும் சேருங்கள். சரியாகி விடும் என்று சொல்லியிருப்பதில் எதைச் சேர்க்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே இது பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். ஏற்கெனவே html editing பண்ணிய போது இவை நீக்கப்பட்டு விட்டனவா எனவும் தெரியவில்லை. என் தளத்தைக் கவனித்து இவற்றை நீக்கச் சொல்லி அறிவுறுத்தியமைக்கு மிகவும் நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. பொறுத்துக் கொள்ளுங்கள் சகோ! நான்தான் தவறு செய்து விட்டேன். குறிப்பிட்ட இடங்களில் நான் சேர்க்கச் சொல்லி எழுதியிருந்த நிரல் வரிகள் மாயமாகி விட்டிருக்கின்றன. கருத்துரைப் பெட்டி அதை அழித்து விடுகிறது போலும். நான் ஒன்று செய்கிறேன். இது தொடர்பாக உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

      Delete
    2. சகோ! உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் வலைப்பூவில் கண்டுபிடிக்க முடியவில்லை. என் மின்னஞ்சல் முகவரியில் நீங்களே தொடர்பு கொள்கிறீர்களா?

      Delete
  15. அன்புச் சகோவிற்கு வணக்கம். என் தளத்தில் இப்போது பிரச்சினை ஏதுமில்லை என்றறிய நிம்மதி. இன்டிலி, தமிழ் மணம் ஆகியவற்றின் நிரல்களை நீக்குவது பற்றிய உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. எனக்குத் தொழில் நுட்ப அறிவு சிறிதுமில்லை. இருந்தும் சின்னப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் நீங்கள் விளக்கியிருந்தது படித்து எந்தச் சந்தேகமும் எழாமல் நானே நீக்கிவிட்டேன். பீட்ஜிட்டில் மால்வேர் பரவுகிறது என்று நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்து பிரச்சினை ஏதும் வராமல் என் தளம் தப்பித்தது. உங்கள் அன்புக்கும், உதவிக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  16. உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ!

    பீட்ச்சிட்டில் கெடுவறை (malware) பரவுவதாக நான் உணர்ந்த அன்றுதான் உங்கள் தளத்தின் அந்தப் பதிவையும் படிக்க வந்தேன். அதனால் கையோடு உங்களுக்குச் சொல்லி விட்டேன். இன்னும் நிறைய நண்பர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் இதைப் பற்றி ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதி ‘பிளாக்கர் நண்பன்’ தளத்துக்கு அனுப்பியுள்ளேன். அவரும் அதை ஏற்று வெளியிட்டு விட்டால் பீட்ச்சிட்டில் கெடுவறை பரவுவது 100% உறுதியாகி விடும்.

    உங்கள் பதிவுகளை நான் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும் ‘ஊமைக்கனவுகள்’ தளத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களைப் பலமுறை படித்ததுண்டு. அதிலிருந்தே உங்கள் தமிழறிவையும் ஆர்வத்தையும் உணர்ந்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒருவருக்கு உதவ முடிந்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி!

    வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! ஊமைக்கனவுகள் தளத்தில் நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை நானும் வாசித்திருக்கிறேன். தமிழில் அளப்பரிய ஆர்வம் உங்களுக்குண்டு என்பதை அறிவேன். தொழில் நுட்ப அறிவு இல்லாத என்னைப்போன்று பலருக்கும் பயன்படும் விதமாக நீங்கள் கட்டுரை எழுதி அனுப்பியிருப்பதறிந்து மகிழ்ச்சி. உங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் என் நன்றி!

      Delete
    2. //ஊமைக்கனவுகள் தளத்தில் நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை நானும் வாசித்திருக்கிறேன். தமிழில் அளப்பரிய ஆர்வம் உங்களுக்குண்டு என்பதை அறிவேன்// - ஓ! மிக்க மகிழ்ச்சி! நன்றி!

      //தொழில் நுட்ப அறிவு இல்லாத என்னைப்போன்று பலருக்கும் பயன்படும் விதமாக...// - நானும் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவன் கிடையாது சகோ! வீட்டில் கணினி வாங்கும் வரை கணினியை விசையூட்டக் கூடத் தெரியாதவனாகத்தான் இருந்தேன். இந்தத் தொழில்நுட்ப விதயங்களெல்லாம் தம்பி, நண்பர்கள் மூலமாகவும் இணையக் கட்டுரைகள் வாயிலாகவும் தெரிந்து கொண்டவைதாம். பிளாகர் நண்பன், கற்போம் இதழ், பொன்மலர் பக்கம் ஆகிய இணையத்தளங்களில் உள்ள கட்டுரைகளைப் படித்தால் நீங்களும் ஒரே மாதத்தில் இவை அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

      நன்றி!

      Delete
  17. ஒரு சிறு திருத்தம்! இன்டிலி, தமிழ்மணம் அல்ல; இன்டிலி, தமிழ்10 ஆகியவற்றின் வாக்குப்பட்டைகளையே நான் நீக்கச் சொன்னேன். நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தவறாக தமிழ் மணம் என்று சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. உங்கள் பதிவைப் படித்து இம்மி பிசகாமல் அவற்றை மட்டும் தான் நீக்கினேன். நன்றி சகோ!

      Delete
  18. சகோ! பேர்டு பீடருக்குத் (Bird Feeder) தமிழில் என்ன என்று கேட்டிருந்தீர்கள். Feeding என்றால் ‘ஊட்டுதல்’ எனப் பொருள். எனவே, Feeder-ஐ ‘ஊட்டி’ எனலாம். ஆக, Bird Feeder என்பதைத் தமிழில் ’பறவை ஊட்டி’ என்பது பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! பறவை ஊட்டி பொருத்தமாய்த் தான் இருக்கிறது. இனி இதைப் பயன்படுத்துவேன்,பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி சொல்லி!மீண்டும் என் நன்றி!

      Delete
    2. ஐயோ! இல்லை சகோ, நான் சொன்னது தவறு. இன்று காலை இதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

      ஒரு சொல்லை மொழிபெயர்க்கும்பொழுது எந்த மொழிக்குப் பெயர்க்கிறோமோ அதன் மரபை ஒட்டிச் செய்ய வேண்டும். மாறாக, நேரடியாகப் பொருளை மொழிபெயர்ப்பது சரியான முறை இல்லை.

      அப்படிப் பார்த்தால், உயிரினங்களுக்கு அளிக்கும் உணவைத் தமிழில் ’தீனி’ என்றுதான் குறிப்பிடுகிறோம் என்பதால், Bird Feeder-ஐத் தமிழில் ’தீனிக்கலம்’, ’தீனிக்குடுவை’ என அழைப்பதே பொருத்தம். தவற்றுக்கு வருந்துகிறேன்!

      Delete
    3. வணக்கம் சகோ. உங்கள் மீள்வருகைக்கு நன்றி. தீனிக்கலம் என்பது நன்றாக உள்ளது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி! பெயர்களைப் பரிந்துரைப்பதில் தவறொன்றும் இல்லை. இதற்காக நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை. இவ்வளவு மெனக்கெட்டு யோசித்து நீங்கள் பரிந்துரைப்பதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்!

      Delete
  19. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கலையரசி அவர்களுக்கு நேச வணக்கம்!

    சகோ! பீட்ச்சிட்டில் (feedjit)கெடுவறை (malware) பரவுவதாக நான் எண்ணியது தவறாம். இது பற்றி ‘பிளாகர் நண்பன்’ தளத்துக்கு நான் அனுப்பிய கட்டுரையைப் படித்துப் பார்த்த அத்தளத்தின் உரிமையாளர், நண்பர் அப்துல் பாசித் அவர்கள், இது குறித்து ஆராய்ந்து நான் எண்ணியது தவறு என்று கூறி விட்டார்.

    பீட்ச்சிட்டு இணைக்கப்பட்டுள்ள தளங்கள் நினைவேற (load ஆக) மிகுந்த நேரம் பிடிப்பதாலும், அந்நேரங்களில் என் நச்சுநிரல் எதிர்வறையிலிருந்து (anti-virus) எச்சரிக்கைகள் வந்ததாலும், குறிப்பிட்ட தளங்கள் நினைவேறும்பொழுது நச்சுநிரல் பரப்பும் தளம் என்று இணையத்தில் பரவலாகக் குறிப்பிடப்பட்டுள்ள http://stats.g.doubleclick.net/ என்ற தளத்திலிருந்து போக்குவரத்து நடைபெறுவதாலும்தான் நான் இது கெடுவறைத் தாக்குதல் என்று உறுதியாக நம்பி, பீட்ச்சிட்டை நீக்கி விடுமாறு தங்களுக்குக் கூறினேன். ஆனால், google transperancy report எனும் தளத்தில் இது பற்றிப் பரிசோதித்துப் பார்த்த அப்துல் பாசித் அவர்கள் எந்தக் கெடுவறைத் தாக்குதலும் இல்லை என்பதை எனக்குத் திரைப்பிடிப்புச் (screenshot) செய்து அனுப்பியுள்ளார். அதன் பின் Virus Total Scan எனும் தளத்தில் நானும் தனிப்பட சோதித்துப் பார்த்தேன். அவர் சொல்வதுதான் சரி என்பது உறுதியானது. பிறகு, நான் பயன்படுத்தும் வழக்கமான இதே உலவி மூலம் வேறு கணினியிலிருந்து பீட்ச்சிட்டு இணைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் சென்று பார்த்ததிலும் அவர் கூறுவது உண்மைதான் என்பது தெரிய வந்தது. எனவே, என்னுடைய கணினியில் நான் வழக்கமாகப் பயன்படுத்தும் உலவியில்தான் ஏதோ கோளாறு.

    நான் குழம்பியதோடில்லாமல் உங்களையும் குழப்பி விட்டதற்கு மன்னியுங்கள்! நீங்கள் பீட்ச்சிட்டைத் தாராளமாக இணைக்கலாம். ஒருவேளை இணைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் சொல்லுங்கள், நான் கண்டிப்பாக உதவுகிறேன்.

    மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! வணக்கம். மன்னிப்பெல்லாம் மிகப்பெரிய வார்த்தை! நீங்கள் வேண்டுமென்று இதைச் செய்யவில்லை. எனக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தானே சொன்னீர்கள். அதனால் வருத்தப்பட வேண்டாம். பீட்ஜிட் இணைப்பதில் எனக்கு விருப்பமில்லை. அப்படி இணைக்க விரும்பினால் உங்களைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்வேன். உங்கள் ஆலோசனையின் பேரிலேயே இன்டிலி, தமிழ்10 நீக்கினேன். இப்போது என் தளம் வேகமாகத் திறக்கின்றது. அதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எனவே இதைப் பற்றி வருந்த வேண்டாம். எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் உங்களைத் தான் தொடர்பு கொள்வேன். மீண்டும் நன்றி சகோ!

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி சகோ! மிகவும் நன்றி!

      Delete