நல்வரவு

வணக்கம் !

Sunday 13 December 2015

வெள்ளத்தின் குரல்!



காலங்காலமாய் நான் தவழ்ந்து வந்த பாதையைக்
கள்ளத்தனமாய் அபகரித்துக் கட்டிடங்கட்டி
முட்டுக்கட்டை போட்ட   மனிதருக்குப்
பாடம் புகட்ட, தக்கதொரு தருணத்தைப்
பலநாளாய் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது..

வான் பொத்துக்கொண்டு கொட்டிய நாளில்
முன்னறிவிப்பு ஏதும் செய்யாமல்    
ஏரியைப் பெருமளவு  திறந்து விட்டு
அறிவு ஜீவிகள்(!) செய்த பேருதவிக்கு
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை!

ஆற்றின் கரைகளை உடைத்தெறிந்து
ஆவேசமாய் ஊருக்குள் நுழைகிறேன்.
மனித உடல்கள் பலவற்றை ருசிபார்த்து  
உடைமைகளை நாசம் பண்ணி
என் கோபத்தைக் காட்ட இதுவே சமயம்!.
நள்ளிரவாய்ப் போனதால்,
வேலை இன்னும் எளிதாயிற்று!

நான் சீறிப் பாயும் சத்தங் கேட்டு
முதல் மாடியில் தஞ்சம் புகுந்தனர் பலர்.
அவர்கள் அறியாமையைக் கண்டு
உள்ளுக்குள் நகைத்துக்கொள்கிறேன்.
முதல் மாடிக்கு ஓடி விட்டால்
வர முடியாதா என்னால்?
கீழ்த்தளத்தில் வேலை முடிந்தவுடன்
மேல்தளத்தைக் கவனிக்க வருவேன்!

கண்ணில் பட்ட முதல் வீட்டின்
கதவிடுக்கின் வழியே மெல்ல நுழைந்து
முதியவரின் கால்களை வருடுகிறேன்.
வீட்டுக்குள் தண்ணீர் என்றதும்
அதிர்ந்த கணவர், மனைவியுடன்
படுக்கையில் ஏறி அமர்கிறார்.

கிடுகிடுவென கட்டில்வரை முன்னேறி
படுக்கையை நனைப்பது
சிரமமாக இல்லை எனக்கு!

வாசல் சாவியை நான் அபகரித்து
அமுக்கிக் கொண்ட செய்தியறியாமல்
மின்சாரம் இல்லாக் கும்மிருட்டில்
தம் சாவியைத்  தேடித் தேடிக்
களைத்துப் போகிறார் முதியவர்.

கதவைத் திறக்க வழியறியாது
சாப்பாட்டு மேஜை மேல்
தஞ்சம் புகுகிறார்கள் இருவரும்.
விடுவதாயில்லை நான்!
ஓட ஓடத் துரத்திப் பிடிக்கும்
விளையாட்டு பிடித்திருக்கிற தெனக்கு!

மேஜையின் விளிம்பு வரை முன்னேறி
மீண்டும் பாதங்களை நனைக்கிறேன்.
கண்களில் மரணபயம் லேசாக
எட்டிப்பார்க்கிறது இப்போது!

முக்காலிகளை மேஜையில் ஏற்றி
மூச்சு வாங்க ஏறி அமர்கின்றனர் .
அலைபேசியில்  யார் யாரிடமோ
நிலைமையை அவசரமாய் விளக்கி
உதவி கோருகிறார் பெரியவர்..

படிப்படியாக நான் உயர்வதைக் கண்டு
முடிந்தமட்டும் அலறுகிறார்கள் உதவி கேட்டு!
தெருவில் என் பேரிரைச்சலுக்கிடையே  
பெரியவரின் மரண ஓலம்
சிறுகேவலாய் விம்மி அமுங்குகிறது!.

தெருவில் பத்தடி உயரத்தில்
நான் பாய்ந்து கொண்டிருக்கும் போது
இருட்டில் யார் வருவார்கள்
இவர்களுக்கு உதவி செய்ய? 

முக்காலியை நான் மூழ்கடிக்கும் சமயம்…
எழுந்து நின்று…  
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
ஓலமிடுகிறார்கள் மீண்டும்!

நெஞ்சு வரை உயர்ந்துவிட்டேன் இப்போது!.
அவர் தம் கைகள் நனையா வண்ணம்
உயரத் தூக்கி அலைபேசி மூலம்
அபயக்குரல் எழுப்புகிறார் மீண்டும்! 

பத்து நிமிடங்களுக்குப் பிறகு…
இருவர் கண்களையும் முத்தமிட்ட நான்
உயரத் தூக்கிய கைகளை நனைத்தவாறு
வீட்டின் உச்சியைத் தொட்ட பெருமிதத்துடன்
முதல் மாடியில் தஞ்சம் புகுந்தோரின் பக்கம்
என் கவனத்தைத் திருப்புகிறேன்.

அலைபேசி அணைந்து கீழே விழுகிறது.


சமர்ப்பணம்

(02/12/2015  அன்று சென்னை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் வாசித்த போது, கர்னல் வெங்கடேசன் அவர்களும், அவர் மனைவி கீதாவும்  நீரில் மூழ்கி உயிரிழந்த விதம் என்னைக் கடுமையாகப் பாதித்தது.  வெள்ளத்தில் மூழ்கி ஓரிரு நிமிடங்களில் உயிர்விடுவதை விடக் கடைசி நிமிடம் வரைஉதவி கிடைக்காமல் மரண பயத்தில் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடிய விதம் மனதை நெகிழச் செய்தது.    இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிவை எழுதினேன். )  
இருவருக்கும் இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.  அவர் தம் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!


டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:- “The water has reached the ankle level … now it’s up to my hip … now we are standing on the table inside the bedroom, my father told me,” said Anitha quoting the frantic updates Venkatesan gave her. His final call came at 11am on December 2, when he said they were neck-deep in water and that he was craning his neck just below the ceiling, trying to protect the phone, the last line of communication. Then the call went dead. It was Geetha’s 60th birthday. (http://timesofindia.indiatimes.com/city/chennai/Locked-at-home-Armyman-wife-died-sending-SOSs/articleshow/50099333.cms)

(படங்கள் நன்றி இணையம்)

27 comments:

  1. வணக்கம் சகோ.

    கவிதையின் இடையிலேயே கானல் வெங்கடேசன் குறித்தானது என்பதைப் புரிந்து கடக்க நேர்ந்தது.

    வாழ்வின் இறுதி நொடிகளில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு கடந்த கணங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் நான் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்திருப்பேன்.

    இறைவன் இணைத்ததை மரணம் கூடப் பிரிக்க முடியவில்லை.

    மனதிற்குள் கழுவிச் சுத்தமாக்க முடியாத அளவு சேறாக உறைந்திருக்கிறது இது போன்ற சோகங்கள்....!

    உங்கள் வரிகள் மீண்டும் அந்த சம்பவத்தைக் காட்சிப்படுத்திப் போகின்றன.

    ““““ஆற்றின் கரைகளை உடைத்தெரிந்து““““““ என்னும் வரியில் உடைத்தெரிந்து என்பதைக் கவனியுங்கள்.

    நிறைய இதுபோன்ற படைப்புகளைத் தர வேண்டுகிறேன்.

    நன்றி.

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்துக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி சகோ! தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. உடனே சரி செய்துவிட்டேன். மீண்டும் என் நன்றி!

      Delete
  2. வணக்கம்
    பட்ட துயரத்தை சொல்லிய விதம் சிறப்பு..படித்து மகிழ்ந்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரூபன்!

      Delete
  3. மிகவும் சோகமான அந்த உயிர்களின் கடைசிநேர போராட்டக் காட்சிகளை, வெள்ளம் பேசுவதுபோல நகைச்சுவை கலந்து வெல்லமாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்.

    //கர்னல் வெங்கடேசன் அவர்களும், அவர் மனைவி கீதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்த விதம் என்னைக் கடுமையாகப் பாதித்தது.//

    செய்தி படித்த அனைவரையும் இது நடுங்கத்தான் வைத்தது.

    அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    இயற்கை சீற்றத்திற்கு முன் மனித முயற்சிகள் எம்மாத்திரம். நாளை என்பதே நிச்சயமில்லாததாகத்தான் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! வணக்கம். எல்லோருக்கும் இவர் விஷயம் தெரிந்திருந்தாலும் ஏனோ இவ்விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நீங்கள் கூறுவது போல் இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமேயில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  4. வணக்கம் சகோ !

    ஒரு உண்மைச் சம்பவத்தின் காட்சி கண்முன்னே வந்து கண்களை நனைக்கிறது
    அவர்கள் ஆன்மா இறையடி சேரட்டும் ! இதுபோன்ற நிகழ்வுகள் இனியாவது வராமல் காப்போம் தொடரட்டும் தங்கள் கவிப்பயணம் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீராளன்! வாக்குக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் வேதனையைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிகவும் நன்றி சகோ!

      Delete
  6. Replies
    1. அனுதாபங்களுக்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  7. கண்களை குளமாக்கிய கவிதை. மரணம் தழுவிய கர்னல் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. வாக்குக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  8. நேரிலே காட்சியைக் காண்பது போன்ற வரிகள் மனத்தின் பதற்றம் கூட்டுகின்றன. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அதை உறுதிப்படுத்திவிட்டுப் போயிருக்கிறது இப்பெருமழையும் வெள்ளமும். தன் வழியே போகவேண்டியதைத் தடைகள் போட்டு தடுத்தாட்கொண்டால் அது என்ன செய்யும்? இப்படிதான் வீடேறிவந்து உயிர்களைக் காவுகொள்ளும் என்ற உண்மையை உணர்த்திப் போயிருக்கிறது. வெள்ளத்துக்குப் பலியான அப்பாவிகளை எண்ணி மனம் குமுறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆழமான க்ருத்துரைக்கு மிகவும் நன்றி கீதா! என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

      Delete
  9. மனம் கனக்கும் சம்பவம், கண்களைக் குளமாக்கியது

    வரிகள் அனைத்தும் அருமையாக வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி! வரிகள் அருமை எனப் பாராட்டியமைக்கு என் நன்றி!

      Delete
  10. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் சிறந்த பதிவு என்ற பாராட்டுக்கும் நன்றி யாழ்பாவாணன் அவர்களே!

      Delete
  11. என்னை விம்மியழ வைத்தது இப்பதிவு இப்படி எத்தனை துன்பங்களை எல்லோரும் பட்டிருப்பார்கள் என்று எண்ணவே நெஞ்சம் நடுங்குகிறது. கவிதை நன்றாக வந்துள்ளது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! என்னைப் பாதித்த நிகழ்வு உங்களையும் பாதித்தது அறிந்தேன். வரவுக்கும் பகி்ர்வுக்கும் நன்றி இனியா!

      Delete
  12. மரணத்தைவிட, அது நெருங்குவதை உணர்ந்து அதன் நிழலில் போராடுவது மிக கொடுமை ! கர்னல் வெங்கடேசன் தொடங்கி, கையாலாகாத அரசு இயந்திரத்தால் பாதிப்பு பல மடங்கு உயர்ந்த பெருமழை இடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. பாதிக்கப்படவர்களின் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதுடன், இந்நிகழ்வின் மூலம் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என உலகுக்கு உணர்த்திய தன்னலமற்ற சாமானியர்களின் கரங்களுக்கு முத்தங்கள் !

    நீரோட்டம் போன்ற எழுத்தில், எளிய வார்த்தைகளால் அந்த துயர நிகழ்வை நிழல்படமாய் கண்ணில் பதிந்துவிட்டீர்கள் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " சென்னை நலமா ? "
    http://saamaaniyan.blogspot.fr/2015/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாம்! விரைவில் உங்கள் பதிவை வாசிப்பேன்!

      Delete
  13. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    ReplyDelete
  14. அக்கா, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமும் சூழலும் சாதகமாயிருப்பின் தொடரவும். http://geethamanjari.blogspot.com.au/2016/01/blog-post.html

    ReplyDelete
  15. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete