நல்வரவு

வணக்கம் !

Thursday 16 February 2017

என் பார்வையில் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே'



சிரியர்:- கவிஞர் நா.முத்துநிலவன்
வெளியீடு:- அகரம், தஞ்சாவூர்.

பல்வேறு காலங்களில் தினமணி, ஜனசக்தி முதலிய நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.

மாணவர்களின் பாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, குழுவாகச் செயல்படுவது முதலிய பன்முகத் திறமைகளுக்கு மதிப்பளிக்காது, மதிப்பெண் ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும், இக்காலக் கல்வியின் அவல நிலையையும், மாணவர்களின் மீது வன்முறையைப் பிரயோகித்து, அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனத்தையும், கடந்த ஆண்டு, வெளியான ‘அப்பாதிரைப்படம், வெளிச்சம் போட்டுக்காட்டி அதிர்வலையை ஏற்படுத்தியது


ச்செய்திகளை, ரு ஆண்டுகளுக்கு முன்பே, முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளேஎன்ற தலைப்பில், மகளுக்கு எழுதிய கடித இலக்கியம் வாயிலாய், அழுத்தந்திருத்தமாக மனதில் பதியுமாறு, எடுத்தியம்பி யிருக்கிறார் ஆசிரியர்.

"மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வர வேண்டும் எனும் கனவில், அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே, பல பெற்றோர்!" (பக் 29) என்ற வரிகளில் வெளிப்படும் வேதனை, நம் சமூகத்தின் மீது, அவர் கொண்ட உண்மையான அக்கறையைப் பறைசாற்றுகின்றது.

முதல் வகுப்பில் சேர்ந்தது முதல், முதல்மதிப்பெண் மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே, லட்சியமாக நினைக்க வைத்த பாவம், நமது கல்விமுறை சார்ந்த சாபமின்றி, வேறென்ன?”(பக் 64).

மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல; நமது கல்வி முறையில் எந்த அறிவும், சரியாக அளக்கப்படுவதுமில்லை.” (பக் 67)

பலதுறை அறிவோடும், பண்பாட்டை வளர்க்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்புக்கான தகுதியாக மட்டுமே, நடைமுறையில் அறியப்பட்டுள்ளது. இது மாற வேண்டும். (பக் 151)  

தமிழறிவு-பகுத்தறிவு, சமூக உணர்வு சார்ந்த செய்திகள், எந்தத் தமிழ்ப்பாட நூலிலும், மாணவர்க்கு முழுமையாகத் தரப்படுவதில்லை; பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவர் பற்றிய பாடத்தை ஏன் வைக்க வேண்டும் என்ற அவர் கேள்வி, நியாயமானதே.  புராணக்கதைகளை, நம் நாட்டு வரலாற்றுச் செய்திகள் போலக் கொடுத்து மாணவர்களைக் குழப்புவதையும், கடுமையாகச் சாடுகிறார் ஆசிரியர்

பாடநூல்கள் அடுத்த தலைமுறைக்கானவை என்னும் அக்கறையுடன், நமது தமிழின் விழுமியங்களுடன், இன்றைய வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ளும் மொழிப்பயிற்சிகளுடன், சமகாலப் போட்டி உலகில் நமது மாணவர்கள், வெற்றி பெறும் கூர்மையுடன் இருக்க வேண்டும்.(பக் 91) என்று வர் சொல்வது, பாடநூல் தயாரிப்பவர், காதுகளில் விழுந்தால் தானே?

வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் நத்திய, நேரடி அனுபவம் இல்லாதவர்கள், புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு எழுதும், பாடநூல் எப்படிச் சரியாக இருக்கும்?” (பக் 47) என்பது இவர் வினா.  இவர் விரும்புவது போல், பாட நூல்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு இருந்தால், எவ்வளவு சிறப்பாயிருக்கும்?

நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்கள் தாமே ம் தகுதிகளை எடுத்துச் சொல்லி, விண்ணப்பிக்கும் கேவலத்தையும், விருது வழங்குதல் என்ற பெயரில், அரசு நடத்தும் கேலிக்கூத்தையும், இவர் கிண்டல் செய்யத் தயங்கவில்லை

தேவையற்ற திரைப்படங்கள் இனிப்பாகவும்,  தேவையான பள்ளிப் பாடங்கள் கசப்பாகவும் இருக்கும், இன்றைய நிலையை மாற்ற திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், கணிணி என அனைத்துவகை ஊடகங்களையும், மாணவர் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்,” என்ற இவர் யோசனையை, அரசு பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மாணவர்களைத் தம் சொந்தப் பிள்ளைகளாக பாவித்து, அதிகாலையில் கண் விழித்துப் படிக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் விதத்தில், அவர்களை அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பச் சொன்னது; அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, பெற்றோரைச் சந்தித்து, நன்றாகப் படிக்கிறார்களா என்று விசாரித்தது ஆகிய இரண்டு செய்திகளுமே, மிகவும் நெகிழ்ச்சி தருவதாக இருந்தது.  என்னே இவர் தொழில்பக்தி!

எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற தலைப்பில்,  இவர் பெயரை மாணவன் எழுதி, காரணங்களைப் பட்டியலிட்டுப் போட்டியில் வென்றதில் வியப்பேதும் இல்லை தானே?

இக்காலக் கல்வித்திட்டத்தின் பிற்போக்குத்தனம்,
ஆங்கிலேயர்க்கு அடிமைகளை உற்பத்தி செய்ய, அறிமுகப்படுத்தப்பட்ட மெக்காலே கல்விமுறையின் பக்கவிளைவுகள்,
சமத்துவ சமூகத்துக்கு அடித்தளமிடும், சமச்சீர்க் கல்வியின் பயன்கள்,
குழந்தைகளின் பன்முக ஆற்றலை, வெளிக்கொணரும் விதத்தில் சுமையற்ற, சுவையான கல்வியைக் கொடுக்க வேண்டிய அவசியம்,
அதற்குப் பாத்திட்டம், தேர்வு மற்றும்  திருத்தும் முறை ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள் & சீர்திருத்தங்கள்,
சிந்தனைக்கு ஊற்றாக விளங்கும், தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம்,
காலத்துக்கேற்றாற் போல், மாற்றி யோசித்துப் பழங்கதைகளை மறுவாசிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் எனக் கல்விச்சிந்தனைகள் அனைத்தும், ஒருங்கே மையப் பெற்ற நூலிது.

பல்வேறு காலங்களில், வேறுபட்ட ஊடகங்களில் எழுதியவற்றைத் தொகுத்திருப்பதால், சில கட்டுரைகளில் கூறியது கூறல் உண்டு.

எளிய நடையில் அமைந்த இக்கட்டுரைகள், வாசிப்பதற்கு சுவையாக இருப்பதோடு, கல்வி பற்றிய நம் சிந்தனைகளைத் தூண்டுவதற்கும், கருத்தாடல்களுக்கும், துணை செய்கின்றன. 

சமூக மாற்றத்துக்கான காரணி கல்வி என்பதால், இந்நூல் பரவலாக வாங்கி வாசிக்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளில், இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது!      
நூலாசிரியருக்குப் பாராட்டுகள்!




26 comments:

  1. அருமையான
    கல்விச் சிந்தனைகளைத் தூண்டும், இன்றைய கல்வியியல் யதார்த்தத்தை கண் முன்னே காட்டும் அற்புத நூல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ!

      Delete
  2. நேர்மையான விமர்சனத்திற்கு நன்றிம்மா. கூறியது கூறல் உண்மைதான். பாராட்டுகளுக்கு என் வணக்கம். என் வலைப்பக்கத்தில் பகிரலாமா? நன்றிகலந்த வணக்கம் தங்கையே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தாராளமாக பகிரலாம் அண்ணா. தங்கள் வருகைக்கும், நேர்மையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் நன்றி அண்ணா.

      Delete
  3. சரியானவரிடமிருந்து சரியான படைப்புகள்தானே வெளிவரும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  4. திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் முத்திரை பதித்த நூலான 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்பதைத் தங்களின் பார்வையில் அலசி ஆராய்ந்து, தங்களைக் கவர்ந்துள்ள பகுதிகளின் சில வரிகளை (அதன் பக்க எண்களுடன்) எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும் போதே, அந்த நூலை உடனே வாங்கிப் படிக்கணும்போல ஓர் ஆசையை ஏற்படுத்துகின்றது.

    துரதிஷ்டவசமாக இன்றைய கல்வி முறையே மதிப்பெண் அடிப்படையிலேயே, எல்லோராலும் மதிப்பிடப்பட்டு வருகின்றது என்பது வருத்தம் அளிப்பதாகத்தான் உள்ளது.

    //சமத்துவ சமூகத்துக்கு அடித்தளமிடும், சமச்சீர்க் கல்வியின் பயன்கள்,
    குழந்தைகளின் பன்முக ஆற்றலை, வெளிக்கொணரும் விதத்தில் சுமையற்ற, சுவையான கல்வியைக் கொடுக்க வேண்டிய அவசியம், அதற்குப் பாடத்திட்டம், தேர்வு மற்றும் திருத்தும் முறை ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள் & சீர்திருத்தங்கள், சிந்தனைக்கு ஊற்றாக விளங்கும், தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம், காலத்துக்கேற்றாற் போல், மாற்றி யோசித்துப் பழங்கதைகளை மறுவாசிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் எனக் கல்விச்சிந்தனைகள்//

    இவை எல்லாமே அடியோடு மாற்றப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்.

    நூல் ஆசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    இதனை இவ்வளவு சுருக்கமாகவும், சுவையாகவும் எடுத்துச்சொல்லியுள்ள தங்களுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்! பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மீண்டும் என் நன்றி!

      Delete
  5. தனது அனுபவங்களையும், சிறந்த சிந்தனைகளையும் சேர்த்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர் என்று தெரிகிறது. ஏற்கெனவே இந்நூலின் ஒரு பகிர்வில் இதை வாங்க வேண்டும் என்ற அவள் இருந்தது. இன்னும் வாங்கவில்லை. விரைவில் வாங்கிப் படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! வாங்கிப்படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  6. மிகச் சரியான கருத்துகளை நூல் தெளிவாகக் கூறுகிறது . தமிழ் இலக்கணம் ஏழு நூற்றாண்டுக்கு முந்திய நன்னூலை அடிப்படையாய்க் கொண்டு கற்பிக்கப்படுகிறது ; அதனால் , கழிந்த பலவற்றை வீணாகப் படிக்க வேண்டியிருக்கிறது ; புகுந்த பலவற்றைக் கற்பிக்க முடியவில்லை .நான் என் பிள்ளைகளிடம் 5 ஆம் இடத்துக்குள் வந்தால் போதும் என்று எழுபது ஆண்டுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. திரு. சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு, வணக்கம்.

      //நான் என் பிள்ளைகளிடம் 5 ஆம் இடத்துக்குள் வந்தால் போதும் என்று எழுபது ஆண்டுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறேன்.//

      மிகவும் அருமை, ஐயா.

      எனக்கு மூன்று பிள்ளைகள். 1974, 1975 மற்றும் 1982-இல் பிறந்தவர்கள். மூவரையுமே தமிழ் கல்விமுறையில்தான் நான் படிக்க வைத்தேன். நானும் தங்களைப்போல மட்டுமே.

      முதல் 10 இடங்களுக்குள் அவர்கள் வந்தால் போதும் என்பேன். எதையும் மனப்பாடம் செய்யாமல், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு சொந்த நடையில் எழுத வேண்டும் எனச் சொல்லிச்சொல்லி வளர்த்து வந்தேன்.

      இருப்பினும் கணித பாடத்தில் மட்டும் 100க்கு 100 வாங்க வேண்டும் என வலியுறுத்திச் சொல்வதுண்டு.

      அதுபோலவே அவர்கள் மூவருமே கணிதம் தவிர அனைத்துப் பாடங்களிலும் 80%க்கு குறையாமல் வாங்கி, கணிதத்தில் மட்டும் பள்ளியின் இறுதித்தேர்வினில் மூவருமே 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி என்னை மிகவும் மகிழ்வித்திருந்தனர்.

      மிகவும் ஒழுக்கத்துடனேயே வளர்ந்த அவர்கள் இன்று மிக உன்னத நிலையில் இருந்து வருகிறார்கள்.

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் நல்லாசிகளும், பாடம் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களின் அன்புடன் கூடிய அர்ப்பணிப்புகளும், மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத பெற்றோர்களின் வளர்ப்பு முறையும், ஆண்டவனின் அருளும் இருந்ததால் மட்டுமே இவைகள் சாத்தியமானது.

      Delete
    2. @ சொ.ஞானசம்பந்தன் "நான் என் பிள்ளைகளிடம் 5 ஆம் இடத்துக்குள் வந்தால் போதும் என்று எழுபது ஆண்டுக்கு முன்பே வலியுறுத்தி யிருக்கிறேன்" இந்நூலைப் படித்த போது, நீங்கள் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  7. @ வை.கோபாலகிருஷ்ணன் - "எனக்கு மூன்று பிள்ளைகள். 1974, 1975 மற்றும் 1982-இல் பிறந்தவர்கள். மூவரையுமே தமிழ் கல்விமுறையில்தான் நான் படிக்க வைத்தேன். நானும் தங்களைப்போல மட்டுமே.
    முதல் 10 இடங்களுக்குள் அவர்கள் வந்தால் போதும் என்பேன். எதையும் மனப்பாடம் செய்யாமல், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு சொந்த நடையில் எழுத வேண்டும் எனச் சொல்லிச்சொல்லி வளர்த்து வந்தேன். மிகவும் ஒழுக்கத்துடனேயே வளர்ந்த அவர்கள் இன்று மிக உன்னத நிலையில் இருந்து வருகிறார்கள்."
    மீள் வருகைக்கு மிகவும் நன்றி கோபு சார்! நீங்கள் எழுதியதைப் படித்து, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். போன தலைமுறை பெற்றோரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை என்பது தான் முக்கிய காரணம். கல்வியை ஒழுக்கம், அறிவு, பண்பு ஆகியவற்றின் காரணிகளாகப் பார்த்தார்கள். பணத்தை விட ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று கல்வி வியாபார மாகிவிட்டது. வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குத் தான் கல்வி என்பது இன்றைய பெற்றோரின் எண்ணம். உங்களைப் போலவே என் தந்தையும் எங்களனைவரையும் அரசுப்பள்ளிகளில், தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்தார். அர்சுப்பள்ளியில் ஆசிரியராய் இருந்த அவர், ஓய்வு பெறும் வரை வீட்டில் யாருக்கும் தனிப்பயிற்சி (டியூஷன்) எடுப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பவர்கள் மேல் வகுப்புக்குச் செல்லும் போது நன்றாகப் பிரகாசிப்பார்கள். உங்கள் பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!

    ReplyDelete
  8. @ வை.கோபாலகிருஷ்ணன் - "எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் நல்லாசிகளும், பாடம் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களின் அன்புடன் கூடிய அர்ப்பணிப்புகளும், மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத பெற்றோர்களின் வளர்ப்பு முறையும், ஆண்டவனின் அருளும் இருந்ததால் மட்டுமே இவைகள் சாத்தியமானது". மிகவும் சரியாகச் சொன்னீர்கள் கோபு சார்! பிள்ளைகள் ஒழுக்கத்துடன் உன்னத நிலையையடைய, ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய அன்பும், அக்கறையும் மிகவும் அவசியம். மாதா, பிதாவுக்கு அடுத்த இடம், குருவுக்குத் தானே? பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியர் தாம் ரோல் மாடல். ஆனால் இன்று? அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம். மனந்திறந்து, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி கோபு சார்!

    ReplyDelete
  9. சிறந்த திறனாய்வுப் பார்வை

    ஆசிரியர் முத்துநிலவன் ஐயா
    பாராட்டுக்கு உரியவர்

    மதிப்பெண்ணை நோக்காகக் கொண்டு கற்பதனால்
    பரந்த அறிவைத் திரட்டிப் பேண முடியாது
    மாணவர்கள் திண்டாட்டம்!

    இந்தியாவில் மட்டுமல்ல
    நம்ம இலங்கையிலும்
    இதே நிலை தான்!

    ReplyDelete
    Replies
    1. சிறந்த திறனாய்வு என்ற பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி காசிராஜலிங்கம் அவர்களே!

      Delete
  10. அருமையா அலசல்...
    முத்தெடுத்து இருக்கின்றீர்கள்..
    வாழ்த்தும்...நன்றியும்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

      Delete
  11. எக்காலத்திற்கும் பொருந்தும் நூலைப் பற்றிய அருமையான விமர்சனம். நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
    2. முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் கருத்திற்கு நன்றி.
      ஆனால் அய்யா, எனது நூல் எக்காலத்திற்கும் பொருத்தமாக இருந்தால், என்னை விட வருந்துவார் யாரும் இருக்க முடியாது. இவற்றை மாற்ற வேண்டும் என்பதே எனது எழுத்தின் நோக்கம். மாற்றி, “இந்த நூல் இப்போது பொருந்தாது” எனும் நிலை வர வேண்டும் என்பதே என் விருப்பம் அய்யா.

      Delete
  12. கவிஞர் முத்துநிலவன் அவர்களின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' என்ற நூலை வெகு நேர்த்தியாக, நேர்மையாக திறனாய்வு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

    கவிஞர் அவர்களின் நூலையே முழுதும் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது தங்களின் திறனாய்வு. பாராட்டுகள்!


    கல்வி பற்றிய நமது சிந்தனைகளை தூண்ட உதவிய கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான திறனாய்வு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  13. இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அத்தியாவசியமான நூலை எழுதியுள்ள முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள சில சான்றுகளும் நூல் குறித்த திறமையான ஆய்வும் அலசலும் நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பாடநூல்களைத் தயாரிப்போர் குறித்த ஆசிரியரின் கவலை மிகவும் நியாயமானது.. மனப்பாடமே கல்வி என்னும் மனப்போக்கு முற்றிலும் மாறினால் ஒழிய நற்சிந்தனையுடைய மாணாக்கர் கல்வியில் மேம்படுதல் சிரமமே..

    ReplyDelete
  14. மிகச் சரியான விளக்கம்... மனப்பாடம் மனதை பாடம் செய்வதில்லை என்பது என் கருத்து... சிந்தனையே மனதை சீர் செய்யும் ...நன்றி !!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete