நல்வரவு

வணக்கம் !

Thursday 26 December 2013

சிட்டுக்குருவிக்குக் கூடு கட்டுவோம்’

துறுதுறுக்கும் கண்கள், குட்டி அலகு, 'கீச், கீச்' கீதத்துடன் 'விர், விர்' என அங்குமிங்கும் தாவிப் பறந்து, சுறுசுறுப்புக்கு இலக்கணம் சொல்லும் சின்னஞ்சிறு பறவை சிட்டுக்குருவி. 

Sunday 15 December 2013

மண்டேலாவுக்கு வீர வணக்கம்!


மண்டேலாவுக்கு வீர வணக்கம்!

05/12/2013 ல் காலமான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரான குனுவில் இன்று அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.  ஏறக்குறைய நான்காயிரத்து ஐநூறு பேர்,  இவரது ஈமச்சடங்கில் கலந்து கொண்டு வீரவணக்கத்துடன் பிரியா விடை கொடுத்த காட்சி, நெகிழ்ச்சி தருவதாக இருந்தது.

1918 ஆம் ஆண்டு கிழக்கு தென்னாப்பிரிக்காவில் சிறிய கிராமமொன்றில்  திம்பு இனத்தில் பிறந்த இவரது இயற்பெயர், ரோலிலாலா தலிபுங்கா மண்டேலா.  மடிபா என்பது செல்லப்பெயர்.  அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கிறித்துவ பெயர் சூட்டும், அப்போதைய வழக்கப்படி பள்ளியாசிரியர், இவருக்கு நெல்சன் என்று பெயர் சூட்டினார்.

வெள்ளையரின் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் இருபத்தி ஏழு ஆண்டுகள் தனிமைச் சிறையில் இவர் வாட நேர்ந்தது.  அன்னை, மகன் ஆகியோரின் ஈமச்சடங்குகளில் பங்கேற்க கூட, இவருக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.  நிபந்தனையோடு இருமுறை அவரை விடுதலை செய்ய தென்னாப்பிரிக்க அரசு முன்வந்த போது, அதனை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார் மண்டேலா.  
(கொலை, கொள்ளையில் ஈடுபட்டு, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு,  சிறைத்தண்டனை வழங்கப்பட்டவுடன், நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் தஞ்சம் புகும்,  நம்மூர் அரசியல் தலைவர்களின் 'ஞானம்' இவரிடம் இல்லை).  

இவரது இடைவிடாத போராட்டத்தின் விளைவாக தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையராகயிருந்த வெள்ளையரின் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்டு கறுப்பர்களின் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.  முதல் கறுப்பினத் தலைவராக 1994 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர், நினைத்திருந்தால், சாகும் வரை பதவியில் நீடித்திருக்க முடியும்.  ஆனால் இவரோ பதவி ஆசை துளியுமின்றி,  இரண்டாம் முறை போட்டியிட மறுத்து விட்டார்.

(தள்ளாத வயதில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர வேண்டி வந்தாலும் பதவி ஆசையைத் துறக்காத நம் அரசியல்வாதிகள், இவரது வாழ்க்கை சரித்திரத்தைப் படித்த பிறகாவது திருந்துவார்களாக!)
மேலும் நம் நாட்டைப் போல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தினரை (அவர்களை விட்டால், வேறு யாருக்கும் நாட்டை ஆள தகுதியில்லை என்பது போல்) அரசியலுக்குள் புகுத்திப் பதவியில் அமர்த்தும், மோசமான வாரிசு அரசியலையும் இவர் ஏற்படுத்தவில்லை.

1990 ல் இவர் விடுதலை செய்யப்பட்ட போது நான் அடைந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.  வின்னியும் இவரும் பிரிந்த போது, மறைந்த என் தாயார் மனம் வருந்திய காட்சியும் நினைவுக்கு வருகிறது

நாடு,மொழி, இனங் கடந்து இன்று உலக மக்கள் அனைவரையும் மண்டேலாவின் மரணம் பாதித்திருக்கிறது என்றால், அர்ப்பணிப்புடன் கூடிய இவரது தன்னலமற்ற தியாகமே காரணமாகும்.  கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டேலாவுக்குப் புகழாரம் சூட்டினர்.

நம்மூரில் இரங்கற்கூட்டமென்றால் அனைவராலும் தவறாமல் உச்சரிக்கப்படும் சொற்கள் ‘ஈடு செய்ய முடியா இழப்பு,’.  இவை உண்மையான பொருளில் வழங்கப்படாமல் வெறும் சம்பிரதாயத்துக்காகவே சொல்லப்படும் வார்த்தைகள்.   உண்மையில் இக்காலக் கட்டத்தில் மண்டேலாவின் மரணம் தான் ஈடு செய்ய முடியா இழப்பு.  இவர் வாழ்ந்த நாளில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயம் .

இவரது முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை என்னால் முடிந்த அளவு  மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  இவருக்கு வீர வணக்கம் செலுத்தும் இந்நாளில் இவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் என்பது என் கருத்து:-


1.       ஒன்றைச் செய்து முடிக்கும் வரை, அது எப்போதுமே செய்ய முடியாததாகவே தோன்றும்.

2.      சுதந்திரமாக இருப்பதென்பது தனது தளைகளை மட்டும் விடுவித்துக் கொண்டு இருப்பதல்ல;  மற்றவரின் சுதந்திரத்தையும் மதித்து அதனை அதிகரிக்கும் வகையில் வாழ்வதே சுதந்திரம் ஆகும்.

3.      பிறக்கும் போது யாருமே அடுத்தவரின் நிறம், பின்னணி, அல்லது மதம் இவற்றைப் பார்த்து அவரை வெறுப்பதில்லை. வெறுப்பதற்கு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.  வெறுப்பதைக் கற்க முடியுமென்றால்,  அன்பு செலுத்தவும் அவர்களுக்குக் கற்பிக்க முடியும். ஏனென்றால் வெறுப்பை விட மனித மனத்திலிருந்து இயற்கையாக தோன்றும் உணர்வு அன்புதான்.

4.   ஓர் உயர்ந்த சிகரத்தின் மீது ஏறிய பின்னர், அது போல் ஏறுவதற்கு இன்னும் பல சிகரங்கள் இருப்பது தெரிய வரும்.

5.   ஒரு முறை கூட கீழே விழாமல் வாழ்வது வாழ்வின் உன்னதமல்ல ஒவ்வொரு முறை  விழும் போதும், எழுவதிலேயே வாழ்வின் பெருமை அடங்கியிருக்கிறது.

6.   உன் பகைவனோடு அமைதி ஏற்படுத்துக் கொள்ள விரும்பினால் அவனோடு சேர்ந்து வேலைசெய்ய வேண்டும்; அவன் உன் துணைவனாகிவிடுவான்.

7.   பயமின்றியிருப்பது தைரியம் அல்ல பயத்தை வெற்றிக் கொள்வதே தைரியம் என்று கற்றுக் கொண்டேன்.  தைரியமான மனிதன் என்பவன் பயத்தை வெற்றி கொண்டவனே ஆவான்.

8.   உலகத்தை மாற்றுவதற்கு, மிக அதிக வலுவுள்ள ஆயுதம் கல்வியே.