நல்வரவு

வணக்கம் !

Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, 23 January 2016

என் வீட்டுத் தோட்டத்தில் - 2

என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படங்களின் தொகுப்பு....
இது என்ன பூ? கண்டுபிடியுங்க பார்க்கலாம்!
இது தாமரை இலைத் தண்ணீர் இல்ல!  சேப்பங்கிழங்கு இலைத்தண்ணீர்!
அப்பப்பா! குளிர் தாங்க முடியல! விரியலாமா, வேணாமா?
அப்பாடி! ஒரு வழியா விரிஞ்சுட்டேன்!
வாகனங்கள் விடுற நச்சுப்புகையை நான் தான் கிரகிக்கிறேங்கிற உண்மை தெரியுமா ஒங்களுக்கு?
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று!
சமைக்க வேணாம்! அப்பிடியே சாப்பிடலாம்!
                     
ஒட்டுறவு!
         
பூப்பூவாப் பறந்து போவும் பட்டாம்பூச்சி அக்கா! நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா?
தும்பி தம்பியைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு?

கொஞ்ச நேரம் என்னை அமைதியா இருக்க விடறீங்களா?

Friday, 14 August 2015

நுணா எனும் மஞ்சணத்தி

முல்லையையொத்த மலர்
தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria.  இதன் தாவரக்குடும்பம்   Rubiaceae.   

இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். 
நுணா மரம்

முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு.  மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். 
உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால் ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்ய இம்மரம் பயன்பட்டிருக்கிறது என்பது இதன் சிறப்புவண்டியிழுக்கும் மாடுகளின்  கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது!  காவி வேட்டிக்கு இதன் முற்றிய  மரப்பட்டைகளைக் கொதிக்க வைத்து, அதில் வெள்ளைத் துணியை முக்கி எடுப்பார்களாம்.        

இதன் மலர்கள் தோற்றத்தில் வெண்மையாக அப்படியே முல்லையை ஒத்திருந்தாலும், இதழ்கள் அதனை விடத் தடிப்பாக உள்ளன.   நறுமணமும் உண்டு.  முடிச்சு முடிச்சாகத் தோன்றும், இதன் காய்களைக் கொண்டு இம்மரத்தை எளிதில் அடையாளங் காணலாம்.  முற்றிய பிறகு பழம் கறுப்பாக மாறும்.  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
சங்க இலக்கியத்தில் நுணவம் என்ற பெயரில் இது குறிக்கப்படுகின்றது.

எ,கா:-
“அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்புகளித் தாலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே,”
(ஐங்குறுநூறு 342 ஓதலாந்தையார்);

(கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளையும் உடைய நுணா மரம் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது; அம்மலர்களிலுள்ள தேனைக் குடித்து விட்டு வண்டினங்கள் மகிழ்வுடன் பாடும் இளவேனில் வந்துவிட்டது; ஆனால் அவர் இன்னும் வரவில்லை என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி)

இலையும் காயும்

முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்.’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘சங்கக்காலத் தாவரங்கள்,’ பட்டியலில் இதன் பெயர் இருப்பதிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மண்ணில் நிலை பெற்றிருக்கும் மரமிது என்றறியலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தொன்மையான மரங்களின் சிறப்புக்களைத் தெரிந்து கொள்வதுடன், வளரும் தலைமுறைக்கு இவற்றை அடையாளம் காட்டுவதும் நம் கடமை!     

 (நான்கு பெண்கள்  இணைய இதழில் 08/08/2015 அன்று வெளியான என் கட்டுரை)

Sunday, 9 August 2015

பறவை கூர்நோக்கல் -6 தையற்சிட்டு (Common Tailor Bird)



இப்பறவையைப் பலர் பார்த்திருக்காவிட்டாலும் டுவீட், டுவீட் என்ற இதன் வெண்கலக் குரலைப் பல சமயங்களில்  கேட்டிருக்க வாய்ப்புண்டு.  இதன் உருவத்துக்கும், விசிலை விழுங்கியது போன்ற கணீர் குரலுக்கும் சம்பந்தமே இல்லை.

சிட்டுக்குருவியை விடச் சின்னதாக இருக்கும் இதனை, இத்தனை காலம் தேன்சிட்டு என்றே நினைத்திருந்தேன்.  பார்ப்பதற்கு அது போலவே இருந்தாலும், இதன் அலகின் அமைப்பு மட்டும் மாறுபடுகிறது.  பூக்களில் தேனை உறிஞ்ச வசதியாக நீண்டு வளைந்த தேன்சிட்டுவின் அலகு போலன்றி, இதனுடையது கொஞ்சம் குட்டையாக உள்ளது.

முதுகுப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை; வயிறு வெண்மை. வாலை எப்போதும் தூக்கிபடியே இருக்கும்.  ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆணுக்கு மட்டும் இனப்பெருக்கக் காலத்தில் வாலின் நடுவில் இரு நீண்ட சிறகுகள் முளைக்குமாம்.  சரியான துறுதுறு.  ஒரு நிமிடம் ஓரிடத்தில் அமராமல், தத்தித் தாவிப் பறந்து கொண்டேயிருக்கும்.


   
பஞ்சு, நார், நூல் கொண்டு பெரிய இலைகளின் பின்பக்கத்தைச் சேர்த்துப் பின்னி சிறிய கூடைபோலாக்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.  ஒருமுறை இட்லிப்பூச்செடியின் இரண்டு இலைகளின் ஓரத்தைச் சேர்த்து மடக்கி, இது பின்னிய கூட்டைப் பார்த்து அசந்துவிட்டேன்.  நூலை உள்ளும் புறமும் கோர்த்து வாங்கித் தையல் பிரியாமல் பின்னும் கலையை யாரிடம் கற்றது இது?  இயற்கையிலேயே அமைந்த இதன் திறமையை என்ன சொல்லிப் புகழ?  தனிப்பட்ட இந்தத் திறமையே, இதற்குத் தையல்சிட்டு என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

புழுக்கள், பூச்சிகள், பூச்சிகளின் முட்டை, தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். மரஞ்செடிகொடிகள் உள்ள பகுதிகளில் இவை அதிகமாகக் காணப்படும்.

தையற்சிட்டு வம்சத்தைச் சேர்ந்த நுண்ணிச்சிறை என்ற சிறுபறவையும் (Ashy Wren warbler) சிலசமயங்களில் இலை தைத்த பைக்கூடு கட்டுமாம்.                       
இனி உணவளிப்பான் (Bird Feeder)  பற்றி:-

இணையத்தில் இதனை  நாமே செய்வது பற்றிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் பயனற்றவை என நாம் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து செய்யும் முறை மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது.

காம்பவுண்டு சுவரில் நான் செய்து மாட்டிய உணவளிப்பான்:-




 நான் பயன்படுத்திய பொருட்கள்:- மூடியுடன் மூன்று பிளாஸ்டி பாட்டில்கள்,  பிளாஸ்டிக் தட்டு, குருவி அமர மொத்தமான ஈர்க்குச்சிகள் இரண்டு ஆகியவை மட்டுமே.   கம்பு, கேழ்வரகு, அரிசி நொய் ஆகிய மூன்றும் கலந்து பாட்டிலில் கொட்டி வைத்திருக்கிறேன்.
                                                             







(முதலிரு படங்கள் மட்டும் – நன்றி இணையம்)




Friday, 17 July 2015

மரங்களைக் காப்பாற்றுங்கள்



இன்றைய காலக்கட்டத்தில்  மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட.
 .
காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி  நீரில்லை;  சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம்.
     
ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி நிற்கின்ற மரங்கள் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், தூசி விழுதல், கடத்தல் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
       
தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் ஒரு கட்சி, தெருவோரங்களில் இருந்த தொன்மையான மரங்களை எல்லாம் வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திப் புதிய சாதனை படைத்தது!

இன்னொரு கட்சி தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லிக் கோவையிலிருந்த பல நூறு மரங்களை வெட்டி, ஊரைப் பொட்டல் திடலாக ஆக்கியது.    

பிரும்மாண்ட தட்டிகளை வைத்து விளம்பரங்கள் செய்தல், அரசியல் வாதிகளுக்குக் கண்ட கண்ட இடங்களில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைத்தல், தோரணங்கள்  மாட்டுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பெரிய பெரிய கிளைகளைத் துண்டாடி மரத்தை மொட்டையடித்து மூளியாக்குகின்றனர்.  இதனால் மரம் பட்டுப் போய்விடுகின்றது. 

போதாக்குறைக்கு அவ்வப்போது நடத்தப்படும் மரம் நடு விழாக்களும், எஞ்சியிருக்கின்ற மரங்களுக்குச் சாவு மணி அடிக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை. 

எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் எழுதியது இது.  மந்திரி தலைமையில்  மரம் நடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நூறு மரக்கன்றுகள் நடப்பட்டதாம்.  சில மாதங்கள் கழித்து, நட்டவற்றில் எத்தனை பிழைத்திருக்கின்றன என்று கேட்டதற்கு  

'நட்டது நூறு,  செத்தது  நூத்தியொன்னு,' என்றாராம் உதவியாளர்.  'அதெப்படி?'  என்று விழித்தவருக்கு, கன்றுகள் நடுவதற்கு நூறு
போத்துகள்  வெட்டியதில், இருந்த ஒரு மரமும் செத்து விட்டது என்றாராம்.  எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மரம் நடு விழாக்கள், இப்படித்தான் இருக்கின்ற மரத்தையும்  சாகடிக்கும் கேலிக்கூத்தாகயிருக்கின்றன. 


மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுவதில் இவர்களுக்கு உண்மையான அக்கறையிருக்குமானால், கோலாகலமாக விழா நடத்தி மரக்கன்று நடுவதுடன்,  அது வேர் பிடிக்கும் வரைத் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   அல்லது மழைக்காலம் துவங்குவதற்கு முந்தைய மாதத்தில், இவ்விழாவை நடத்த வேண்டும்.  செய்வார்களா? 

ஒரு நாள் கூத்தாக கடுங்கோடையில் மரம் நடுவிழா நடத்திக் கன்றுகளை நடுவது போல் ‘போஸ்’ கொடுத்து பத்திரிக்கையில் பெரிய படம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதே அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்.

சுற்றுச்சூழல் பற்றியும் இயற்கையைப் பேணுதல் குறித்தும் நம்  எழுத்தாளர்களும் அவ்வப்போது குரலெழுப்பித் தம் பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  காலச்சுவடு இதழின் நிறுவனர் மறைந்த எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை.’  இக்கதையின் கரு பற்றி ஆசிரியர் முதல் அத்தியாயத்தில் என்ன கூறுகிறார் கேளுங்கள்:-

மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?
 

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”
 

இதே கதையில் காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீன பூங்கா அமைக்கும் பணி விவரிக்கப்படுகிறது. தோப்பு மரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல், முதியவர் ஒருவர், இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க” 

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”
”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும், செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!” 

நவீனமயம் என்ற பெயரில் தோப்பை அழிக்கும் மனிதனின் பைத்தியக் காரத்தனத்தை இவ்வுரையாடல் மூலம், ஆசிரியர் எப்படிக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், இன்னும் நம் மக்களுக்கு
சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்தோ, மரங்களின் அருமை பற்றியோ போதிய விழிப்புணர்வு வந்தபாடில்லை.  புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ  இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.

முடிவாக கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் எழுதிய ‘காயின் ருசி’ என்ற கவிதையிலிருந்து, என்னைக் கவர்ந்த சில வரிகள்:-

தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது  என்று    ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். நடு இரவில் கிளை தழைகளோடு, ஜன்னல் வழி வந்து   கன்னந் தழுவிய  நிலா, இப்போது மொட்டையாக….….
“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. …..”


(நான்கு பெண்கள் இணைய இதழில் 17/06/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)

Thursday, 18 June 2015

பசுமைப் புரட்சியின் வன்முறை - நூல் அறிமுகம்

பசுமைப் புரட்சியின் வன்முறை
ஆசிரியர் வந்தனா சிவா
முதற்பதிப்பு டிசம்பர் 2009
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013
வம்சி/பூவுலகு வெளியீடு
விலை ரூ 140/-

டெல்லியில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலுக்கு எதிரான எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution (1992)  என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது. 
நூலாசிரியரைப் பற்றி வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து மீட்ட போராளி என்று மட்டும் பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்;  அவரைப் பற்றி வேறு எந்த விபரமும் இல்லை.  மொழி பெயர்ப்பாளர் யார் என்றும் தெரியவில்லை.



வந்தனா சிவாவைப் பற்றித் தெரியாதவர்களுக்காக, சிறு அறிமுகம்:-   
கனடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவனத்தை,1984ல் ஏற்பட்ட பஞ்சாப் கலவரமும், போபால் விஷ வாயுக்கசிவு விபத்தும், வேளாண்மை பக்கம் திருப்பின.

தற்போது இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களின் மீதான நம் மக்களின் உரிமையைக் காக்கவும் போராடிவரும் இவர், இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்படும் பி.டி. கத்தரிக்காயைத் தீவிரமாக எதிர்க்கிறார்.  முன்பிருந்த இரசாயன பூச்சிக்கொல்லி, உரத்தொழிற்சாலைக்குப் பதிலாக செடியே இப்போது விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது என்பது இவர் எதிர்ப்புக்குச் சொல்லும்  காரணம்.

நவதான்யா,’ என்ற அமைப்பை நடத்தும் இவர், நம் நாட்டு வேளாண் உணவு உற்பத்தியிலும், பதப்படுத்துவதிலும் பெண்களின் பங்கு கணிசமானது என்கிறார்.

தொழிற்சாலையில் பதப்படுத்தும் வேலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது’; ஆனால் பாரம்பரிய முறையில் வீட்டில் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்துப் பதப்படுத்துவதில்  செலவிடப்படும் பெண்களின் உழைப்பு வேலையாகவே கருதப்படுவதில்லை என்பது இவர் ஆதங்கம். 

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:-- http://vandanashiva.org/

1960 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு, அபரிமித வளத்திற்குப் பதிலாக,  மிஞ்சியதெல்லாம் நோயால் பீடிக்கப்பட்ட மண்ணும், பூச்சியால் தாக்கப்பட்ட பயிர்களும் பெருங்கடனாளியாகியுள்ள, திருப்தியற்ற விவசாயிகளுமே என்கிறார்  ஆசிரியர்.

இந்நூலிலிருந்து முக்கிய கருத்துக்கள் மட்டும், உங்கள் பார்வைக்கு:-

  •  1950 களில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது பசுமைப்புரட்சி என்ற புதிய மதம் பிறந்தது.  அற்புத விதைகள் மூலம் அதிக உற்பத்தி என்ற தாரக மந்திரத்தை அது பரப்பியது.

·         1970 ல் இவருக்கு அமைதி நோபெல் பரிசு வழங்கப்பட்டது.  இவர் கண்டுபிடித்த மாயவிதை,  அபரிமித உற்பத்தி மற்றும் அமைதிக்கான ஆதாரமாக நோக்கப்பட்டது  இந்தியாவில் பஞ்சாபில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.


·         இந்தியாவிற்குள் பசுமைப்புரட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் 1964 ல் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும், 1965ல் இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவன இயக்குநர் எம்.எஸ்.சுவாமிநாதனும் ஆவர்.

·         20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நஷ்டம் தாங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 1960 களில் பட்டினியை விரட்டுகிறேன் என்ற பெயரில், நம் அரசு நடைமுறைப்படுத்திய பசுமைப் புரட்சி தான் இதற்குக் காரணம்.


·         இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.

·         மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் தங்கள் நாட்டு வேளாண்மையில் மேம்பாடு செய்வதற்கான திறனில்லை என்று ராக்பெல்லர் நிறுவன அறிஞர்கள் கருதினர்.  அதிக உற்பத்திக்கான விடை, அமெரிக்க பாணி வேளாண்மை அமைப்பில் இருப்பதாக அவர்கள் எண்ணினர்..

·         பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுத் தலைமுறை தலைமுறையாக உள்ளூரில் பயிர் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தாவர வகைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய ரகங்களை உருவாக்கினர்.  புதிய ரகங்களுக்கு அதிகளவில் செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் நீர் தேவைப்பட்டது.  வேளாண் செலவு பன்மடங்கு அதிகரித்தது.

·         உயரமான பாரம்பரிய இனங்கள் வயலில் இடப்படும் உரச்சத்துக்களைத் தாவரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன.  ஆனால் குட்டை ரகங்கள் அவற்றைத் தானிய மணிகளாக மாற்றும் திறன் படைத்திருந்தன. முதலாவதில் கால்நடைக்குத் தேவையான வைக்கோல் கிடைத்தது.  ஆனால் புதிய முறையில் வைக்கோல் பற்றாக்குறை ஏற்பட்டது.


·         செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாவிட்டால் புதிய ரகங்கள், உள்ளூர் ரகங்களை விடக் குறைவான விளைச்சலையே தரும்.  விளைச்சலால் கிடைக்கும் லாபம், இடுபொருட்களின் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் டாக்டர் பால்மர். 

·         பசுமைப்புரட்சிக்குப் பிறகு வேதி உரங்களின் உபயோகம் 30 மடங்கு அதிகரித்தது.  பஞ்சாபில் கொடுக்கப்பட்ட வேளாண் கடன்களில் 64% உரங்கள் வாங்கச் செலவிடப்பட்டன.


·         பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக ஆய்வுகள் வேதி உரங்கள் தழையுரத்துக்கு ஈடாகாது என்று நிரூபித்துள்ளன.  கால்நடைப்பண்ணை உரங்களும் வேதியுரங்களை விடச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

·         பசுமைப்புரட்சிக்குப் பின்னர் கோதுமை, சோளம், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியன கலந்த மாற்றுப்பயிர் முறை ஒழிக்கப்பட்டு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் ஓரினப்பயிர் முறை பரவலாக்கப்பட்டது.


·         சர்வதேச வல்லுநர்களும், இந்திய ஆதரவாளர்களும் தொழில்நுட்பம் நிலத்துக்கு மாற்று என்றும், வேதியியல் உரங்கள் தழைச்சத்திற்கு மாற்று என்றும் தவறாக நம்பியதால், பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட நம் மண்வளம், பசுமைப்புரட்சிக்குப்பின்  கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாசமாகிவிட்டது.


இடையிடையே கருத்துத் தெளிவின்றிக் குழப்பம் ஏற்படுத்தும் நீண்ட வாக்கியங்கள்,   மொழிபெயர்ப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது.  பலவிடங்களில் கூறியது கூறல் சலிப்பை ஏற்படுத்துகிறது.    

இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை நம் தலையில் திணிக்க அரசு முயலும் இந்நாளில்,  முதல் பசுமைப்புரட்சியின் விளைவால் நம் மண்ணுக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகளையும், சூழலியல் பாதிப்புக்களையும் விலாவாரியாக விளக்கி, மக்களிடையே விழிப்புணர்வூட்ட இந்நூல் உதவும் என்பதால் மொழிபெயர்ப்பில் குறைகள் இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அட்டையில் இடம் பெற்றிருக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி மனைவியின் சோகம் ததும்பும் முகம் மனதைக் கனக்கச் செய்கிறது.                                                       (01/06/2015  அன்று  நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)
(வந்தனா சிவா படம் – நன்றி இணையம்)

Saturday, 30 May 2015

பறவை கூர்நோக்கல் - 5 - தவிட்டுக்குருவி

தவிட்டுக்குருவி


தவிட்டுக்குருவி  - Yellow-billed Babbler  (Turdoides affinis)
தோட்டங்களிலும் புதர்ச்செடிகளிலும் அடிக்கடிக் காட்சி தரும் தவிட்டுக்குருவி, பெரும்பாலோர்க்குத் தெரிந்த பறவை.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்தில் இருக்கும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.  இதற்குக் கல்குருவி, சிலம்பன் என்ற பெயர்களும் உண்டு.

பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து குருவிகள் சேர்ந்து கூட்டமாகக் காட்சியளிப்பதோடு, ஓயாமல் கத்திக் கொண்டே இருக்கும்.  சமயத்தில் அணில் குரலுக்கும், இதன் ஓசைக்கும் எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.  பூச்சிகளையும் தானியத்தையும் உணவாகக் கொள்ளும்.

குறிப்பிட்ட உயரத்திற்கு மேலோ, தொலை தூரத்துக்கோ தொடர்ச்சியாக பறக்க இயலாது என்பதால் வலசை செல்லாத பறவை.  தரையில் தத்தித் தத்தி நடக்கும்.  அடர்த்தியான மரங்களில் கூடு கட்டும்.  எங்கள் மாமரத்தில் ஒரு முறை கூடு கட்டியது. 

எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து, அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.
 அக்காக்குயில்(Common Hawk-Cuckoo)



இதற்கு அக்காகுருவி, அக்கக்கா குருவி என்ற பெயர்களும் உண்டு. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். இக்குயிலை நான் பார்த்ததில்லை என்றாலும்,   இது பற்றி இப்பதிவில் சொல்லக் காரணமிருக்கிறது.

குயிலினத்தைச் சேர்ந்த பறவை என்பதால் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காது.  காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவது போல், தவிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த பறவைகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் முட்டையிட்டுவிடுமாம்.  தவிட்டுக்குருவி தான் அதன் குஞ்சுகளை வளர்க்குமாம்.

இது சம்பந்தமாக அருமையான இரு காணொளிகளைப் பார்த்து ரசித்தேன். அவசியம் நீங்களும் பாருங்கள்:-
இணைப்பு:- 1  https://www.youtube.com/watch?v=JtNHLtHbwxs
இணைப்பு:- 2  https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM
காணொளியில் நாணல் கதிர்க்குருவி  (Reed warbler) கூடு கட்டி முட்டை யிட்டிருக்கிறது.  அது வெளியே சென்றிருக்கும் சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது.  இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக் கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது.  இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது! 
முட்டை மாற்றப்பட்ட உண்மை அறியாத கதிர்க்குருவி அடைகாக்கின்றது.  மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே முட்டையிலிருந்து வெளிவரும் குயில் குஞ்சு, பொரிக்காத மற்ற முட்டைகளைக் கூட்டிலிருந்து தன் முதுகால் அனாயாசமாகத் தூக்கி வெளியே தள்ளிவிட்டுத் தான் மட்டும், மொத்த தீனியைத் தின்று வளர்கின்றது. 
ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக் கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி ஓடி உழைத்து உணவூட்டுகின்றன.  பாவம் இந்தப் பெற்றோர்!    

(நன்றி:- பறவைகள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை)                                                                                   (படங்கள் -  நன்றி இணையம்)  இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல