நரம்பியல் நிபுணர்
டாக்டர் சைமன் அவர்களின் இறப்பு, ஈடு செய்ய முடியாப் பேரிழப்பு!
கொரோனாவால் இறக்கும்
மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தப் பேரிடர் காலத்தில், அவர்களின் இறப்புச் செய்தி
தரும் வேதனையைக் காட்டிலும், அப்படி இறந்த மருத்துவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம்
செய்ய விடாமல் தடுக்கும் காட்டுமிராண்டித் தனம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.
ஏற்கெனவே இரண்டு
மருத்துவர்கள் இறந்த போது நடந்தது போல், டாக்டர் சைமன் உடல் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை
ஒரு கூட்டம் சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியிருக்கிறது.
குடும்பங்களைப்
பிரிந்து, தம் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக நோய்வாய்ப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை
செய்யும் மருத்துவர்களுக்கு, நாம் காட்டும் நன்றிக்கடன் இது தானா? போதுமான பாதுகாப்பு
கவசங்கள் இல்லையென்றாலும், தொடர்ந்து சேவை செய்து தம் உயிரை இழக்கும் மருத்துவர்கள்,
நம் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா?