நல்வரவு

வணக்கம் !

Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Wednesday, 30 September 2015

இயற்கை சமன்நிலையை அறிவிக்கும் பறவைகள்





சிறுவயதில் நம் வீட்டைச் சுற்றிக் கூட்டங்கூட்டமாக கண்டுகளித்த சிட்டுக்குருவி, மைனா எனப்படும் நாகணவாய்ப்புள், தவிட்டுக்குருவி, எல்லாம் எங்கே போயின? 

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்கள் யாவை? பறவைகளைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?  பறவைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம்? 
சிட்டுக்குருவியினம் அழிவின் விளிம்பில் இருக்கின்றது; எனவே அதனைக் காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்ட சிட்டுக்குருவி தினம், இது பற்றிய  விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தியது.
இளவயதில் நம் தோழர்களாக நம்முடன் கூடவே வளர்ந்த இனமல்லவா இது? இவற்றை வழி வழியாகக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான், ‘சிட்டுக்குருவி கூடு கட்டினால் குடும்பத்துக்கு நல்லது; கூட்டைக் கலைப்பது பாவம்,’ என்று நம் முன்னோர் கூறிச்  சென்றனர்.
இதன் அழிவுக்கு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு தான் முக்கிய காரணம் என்று முன்னர் சொல்லப்பட்டது.  ஆனால் இதற்குப் போதுமான ஆதாரமில்லை என்று இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. 
மற்ற பறவைகள் போல் இவை மரங்களிலோ, புதர்ச்செடிகளிலோ கூடு கட்டும் வழக்கமுடையன அன்று.  இவை முழுக்க முழுக்க மனிதரை அண்டி வாழ்வன.  மனிதனை அடைக்கலம் நாடுவதால், இதற்கு  அடைக்கலக்குருவி என்ற பெயருமுண்டு. 
நம் வீடுகளுக்குள்ளோ, கிணறுகளுக்குள்ளோ இருக்கும் சந்து பொந்து, பரண், மாடம் ஆகியவற்றில் வாழும் பழக்கமுடைய இவை  நம் வீடுகள் கான்கிரிட் காடுகளாகவும், அடுக்கக வீடுகளாகவும் மாறியதால்,  கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இடமில்லாமல் அருகிவிட்டன.
எனவே இவ்வினம் பெருமளவு அழிந்ததற்கு, நம் வீடுகட்டும் முறையில் நிகழ்ந்த மாற்றமே, மிக முக்கிய காரணம் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.  என் வீட்டின் முன்புறத்தில் இப்போது நான் தொங்கவிட்டிருக்கும் சர்ப் எக்ஸ்செல் அட்டைபெட்டிகளில் இவை உற்சாகமாக குடித்தனம் நடத்தி இனப்பெருக்கம் செய்கின்றன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் தெருவில் இரண்டு குருவிகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது பனிரெண்டுக்கு மேல் வீட்டைச் சுற்றி வந்து, தினமும் அதிகாலையில் ‘கீச், கீச்’  பள்ளியெழுச்சி பாடி, என்னைத்  துயிலெழுப்புகின்றன.    

மரங்களில் கூடுகட்டும் பழக்கமுடைய, மற்ற பறவைகளின் எண்ணிக்கை குறைய, மரங்களும், புதர்ச்செடிகளும் இல்லாதது முக்கிய காரணம். 
கூடுகட்ட மரங்களில்லா இக்காலச் சூழ்நிலையில், எதிர்வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டுள்ள கொம்புகள் உடைந்த திருஷ்டி பொம்மையினுள், கருந்தலை மைனா ஓராண்டாக வசிக்கின்றது.   

எங்குப் பார்த்தாலும் விளைநிலங்கள், மனைகளாக மாற்றம் பெற்றதும், வேளாண்மையில் அளவுக்கதிகமாக வேதியியல் உரங்கள் மற்றும்  செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதும், வேறு சில காரணங்கள். 
பூச்சிக்கொல்லிகள் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லாமல், விளைநிலத்துக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் சேர்த்தே கொன்றுவிட்டன.  எனவே குஞ்சுகள் வளர்வதற்குத் தேவையான புரோட்டின் நிறைந்த புழுக்கள் பறவைகளுக்குக் கிடைக்கவில்லை.  அப்படியே கிடைத்தாலும், அவை நஞ்சு நிறைந்தவையாயிருந்தன.

அமெரிக்காவில் 1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகத் தெளித்தார்கள்.   
இதனால் பறவைகள் குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது.  இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். 
தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசந்தத்தில் மயான அமைதி நிலவியது. 
இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம்(SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர் ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ‘எதிர்’  வெளியீடு.  பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது.   

கூட்டிலிருந்து வெளிவரும் சரியாகப் பறக்கத் தெரியாத சிறுகுஞ்சுகள் (Fledgling) காகம், பருந்து போன்ற பெரிய பறவைகளிடமிருந்து தப்பிக்கப் புதர்ச்செடிகள் வேண்டும்.  ஒரு நாள் கூட்டிலிருந்து வெளிவந்த மைனாக்குஞ்சு ஒன்றைக் காகம் விடாமல் துரத்தியது.  நானும் செய்வதறியாது கைபிசைந்து நிற்க, அது தத்தித் தாவி பக்கத்தில் அடர்த்தியாயிருந்த அரளிச்செடிக்குள் போய்ப் புகுந்து கொண்டது.  அதனுள்ளே காகத்தால் புகமுடியாததால், குஞ்சு தப்பித்தது.

எனவே வீட்டைச் சுற்றிக் கொஞ்சம் இடமிருந்தாலும், அழகுக்காக எதற்குமுதவாத, பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ அண்டாத புல்லை (LAWN) வளர்க்காமல், அரளி, நந்தியாவட்டை, இட்லிப்பூ போன்ற புதர்ச்செடிகளை வளருங்கள். இவை சரியாகப் பறக்கத் தெரியாத குஞ்சுகளுக்கு (Fledgling) அடைக்கலம் கொடுக்கும்!  

வீட்டுக்கு முன்புறம் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு வளருங்கள்.  இவை நம் மண்ணின் மரங்களாக இருக்க வேண்டும்.    

வீட்டுத் தோட்டங்களில் செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் பயன்படுத்தவே கூடாது.  இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்பம்பிண்ணாக்கு, இஞ்சி & பச்சை மிளகாய்ச் சாறு போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

குளிப்பதற்கொன்றும், குடிப்பதற்கொன்றுமாக தினமும் இரு மண் தொட்டிகளில் தண்ணீர் வைத்தால், தினமும் குளிக்கும் பழக்கமுள்ள சிட்டுக்குருவி, கொண்டைக்குருவிக்கு (Bul Bul) மிகவும் நல்லது.  நீர் தூய்மையாயிருக்கத் தினமும் மாற்ற வேண்டியது அவசியம்.

சிறு தானியங்கள் பறவைகளின் முக்கிய உணவு.  எனவே கம்பு கேழ்வரகு அரிசி நொய் போன்றவற்றை உணவளிப்பானில் (Bird Feeder) கொட்டித் தொங்க விடுங்கள்.  நேச்சர் பார் எவர் சொசைட்டி இதனை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்கின்றது.  http://www.natureforever.org/ .        பிறந்த நாளின் போது இவற்றை வாங்கிப் பரிசளித்துக் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.   இணையத்திலும் குப்பையில் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து, நாமே செய்யக்கூடிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் ஒன்று:-  https://www.youtube.com/watch?v=kE9jKmQJED0

ஊசிப்போன உணவை ஒரு போதும் பறவைகளுக்குத் தரக்கூடாது.  உப்பு போட்ட உணவு வகைகள், பெரிதும் தீங்கு செய்வன. இவற்றுக்கு அதிக ஒலி ஆகாதென்பதால், கூடுகளுக்கு அருகில் எப்போதுமே பட்டாசு வெடிக்கக் கூடாது..  இவ்வெடி மருந்து, காற்றை மாசுபடுத்துவதோடல்லாமல் விலங்கு, பறவைகளின் இனப்பெருக்க முறைகளையும் பாதிக்கின்றது.    

பட்டம் விடும் விழா நாட்களில், சீனாவின் மாஞ்சாவைப் பயன்படுத்துவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  இது பல பறவைகளின் கழுத்தை அறுப்பதுடன், மனிதர்களின் உயிர்க்கும் உலை வைக்கின்றன. 

உயரமான கட்டிடங்களில், விளையாட்டரங்குகளில் பொருத்தப்படும் ஒளிபுகும் (Tranparent) கண்ணாடிகள் ஆண்டுதோறும் வலசை போகும் லட்சக்கணக்கான பறவைகளின் உயிருக்கு எமனாக விளங்குகின்றன.  உயரத்தில் பறக்கும் பறவைகள், கண்ணாடி இருப்பதே தெரியாமல், வேகமாக மோதி கீழே விழுந்து இறக்கின்றன.   கண்ணாடியில் பிரதிபலிக்கும் வானம், மேகம் அவற்றைக் குழப்புகின்றன.  எனவே கண்ணாடி இருப்பது பறவைகளுக்குத் தெரியும் விதத்தில், படங்கள் ஒட்டி வைக்க வேண்டும். பூ அல்லது கோடு வரைந்த கண்ணாடியைப் (Bird Friendly Glass) பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.  .    

“பறவைகள் தாம் இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை; எனவே அவற்றுக்குக் கேடு வருகிறதென்றால், நாமும் மிக விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று பொருள்.
இயற்கையில் புழு, பூச்சி, தாவரம் பறவை, விலங்கு மனிதன் என எல்லாமே உணவுக்காக ஒன்றோடொன்று தொடர்சங்கிலி போல பின்னிப் பிணைந்து  ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.  இவற்றுள் பறவையினம் அழிகின்றது என்றால், ஏதோ ஓர் இடத்தில் உணவுச்சங்கிலி அறுபடுகிறது என்றவுண்மையை உணர்ந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்துவிடும் ஆபத்திருக்கின்றது,” என்கின்றனர் பறவை ஆய்வாளர்கள்.    .

இது பூச்சிகள் உலகம்.  பூச்சிகளை உணவாகக் கொண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது பறவைகள் தாம்.  இவை இல்லாவிடினோ நம் கதி அம்பேல் தான்.  அதனால் தான் "மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் உயிர் வாழமுடியும்; ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது," என்றார் பறவையியலின் தந்தை சலீம் அலி.


(வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.


(படங்கள் - நன்றி இணையம்) 


Sunday, 9 August 2015

பறவை கூர்நோக்கல் -6 தையற்சிட்டு (Common Tailor Bird)



இப்பறவையைப் பலர் பார்த்திருக்காவிட்டாலும் டுவீட், டுவீட் என்ற இதன் வெண்கலக் குரலைப் பல சமயங்களில்  கேட்டிருக்க வாய்ப்புண்டு.  இதன் உருவத்துக்கும், விசிலை விழுங்கியது போன்ற கணீர் குரலுக்கும் சம்பந்தமே இல்லை.

சிட்டுக்குருவியை விடச் சின்னதாக இருக்கும் இதனை, இத்தனை காலம் தேன்சிட்டு என்றே நினைத்திருந்தேன்.  பார்ப்பதற்கு அது போலவே இருந்தாலும், இதன் அலகின் அமைப்பு மட்டும் மாறுபடுகிறது.  பூக்களில் தேனை உறிஞ்ச வசதியாக நீண்டு வளைந்த தேன்சிட்டுவின் அலகு போலன்றி, இதனுடையது கொஞ்சம் குட்டையாக உள்ளது.

முதுகுப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை; வயிறு வெண்மை. வாலை எப்போதும் தூக்கிபடியே இருக்கும்.  ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆணுக்கு மட்டும் இனப்பெருக்கக் காலத்தில் வாலின் நடுவில் இரு நீண்ட சிறகுகள் முளைக்குமாம்.  சரியான துறுதுறு.  ஒரு நிமிடம் ஓரிடத்தில் அமராமல், தத்தித் தாவிப் பறந்து கொண்டேயிருக்கும்.


   
பஞ்சு, நார், நூல் கொண்டு பெரிய இலைகளின் பின்பக்கத்தைச் சேர்த்துப் பின்னி சிறிய கூடைபோலாக்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.  ஒருமுறை இட்லிப்பூச்செடியின் இரண்டு இலைகளின் ஓரத்தைச் சேர்த்து மடக்கி, இது பின்னிய கூட்டைப் பார்த்து அசந்துவிட்டேன்.  நூலை உள்ளும் புறமும் கோர்த்து வாங்கித் தையல் பிரியாமல் பின்னும் கலையை யாரிடம் கற்றது இது?  இயற்கையிலேயே அமைந்த இதன் திறமையை என்ன சொல்லிப் புகழ?  தனிப்பட்ட இந்தத் திறமையே, இதற்குத் தையல்சிட்டு என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

புழுக்கள், பூச்சிகள், பூச்சிகளின் முட்டை, தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். மரஞ்செடிகொடிகள் உள்ள பகுதிகளில் இவை அதிகமாகக் காணப்படும்.

தையற்சிட்டு வம்சத்தைச் சேர்ந்த நுண்ணிச்சிறை என்ற சிறுபறவையும் (Ashy Wren warbler) சிலசமயங்களில் இலை தைத்த பைக்கூடு கட்டுமாம்.                       
இனி உணவளிப்பான் (Bird Feeder)  பற்றி:-

இணையத்தில் இதனை  நாமே செய்வது பற்றிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் பயனற்றவை என நாம் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து செய்யும் முறை மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது.

காம்பவுண்டு சுவரில் நான் செய்து மாட்டிய உணவளிப்பான்:-




 நான் பயன்படுத்திய பொருட்கள்:- மூடியுடன் மூன்று பிளாஸ்டி பாட்டில்கள்,  பிளாஸ்டிக் தட்டு, குருவி அமர மொத்தமான ஈர்க்குச்சிகள் இரண்டு ஆகியவை மட்டுமே.   கம்பு, கேழ்வரகு, அரிசி நொய் ஆகிய மூன்றும் கலந்து பாட்டிலில் கொட்டி வைத்திருக்கிறேன்.
                                                             







(முதலிரு படங்கள் மட்டும் – நன்றி இணையம்)




Saturday, 1 August 2015

பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது



காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.

நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிக்கும், உப்புப் போட்ட சாதத்தைக் கொடுத்துவிட்டோமே என மனம் பதைத்தது.    

கட்டுரையின் முடிவில் சிட்டுக்குருவியும் புறாவும் ஓரளவு உப்பைத் தாங்கக்கூடியவை என்று படித்த பிறகு, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.   இனி என் வாழ்நாளில், கண்டிப்பாக உப்பு சேர்த்த உணவைப் பறவைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன். 

இக்கட்டுரையின் மூலம், நான் தெரிந்து கொண்ட முக்கிய விபரங்கள்:-

பெரும்பாலான தரைப் பறவைகளுக்கு உப்பு மிகவும் கெடுதல் செய்யும்.
ஊர்வனவற்றிக்கு இருப்பது போலப் பறவைகளுக்குச் சிறுநீரகம் உண்டு; ஆனால் இவை உப்பை அதிகளவு வெளியேற்றும் திறன் கொண்டவை அல்ல. 

உப்பை வெளியேற்றும் திறன், பறவைகளின்  வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது.  கடல் மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழும் பறவைகளின் சிறுநீரகம்,  மற்ற பகுதிகளில் வாழ்பனவற்றின் சிறுநீரகத்தை விட, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் திறன் கொண்டது.  அதனால் தான் கடற்பறவை, மீனையும், கடல் நீரையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றது.

சிறுநீரகத்துக்கு அடுத்தபடியாக உப்பை வெளியேற்ற பறவைகளின் மண்டை ஓட்டுக்குள் நெற்றிப்பக்கம், உப்பு சுரப்பி (Salt gland) அமைந்துள்ளது.  எல்லாவற்றுக்கும் இது உண்டென்றாலும், உப்பு சேர்ந்த உணவை அடிக்கடி உண்ணும் பறவைகளுக்கு மட்டுமே, இது வேலை செய்யும்.    

உப்புநீரையும், உப்பு அதிகமுள்ள உணவையும் அடிக்கடி உட்கொள்ளும் பறவைக்கு, அதிகளவில் உப்பை வெளியேற்ற இச்சுரப்பி பெரியதாக இருக்கும். இது அடர்த்தி அதிகமான உப்பை (concentrated salt) வெளியேற்ற மிகக் குறைந்த நீரையே எடுத்துக்கொள்ளும்.  அதே சமயம் சிறுநீரகத்துக்கு ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.

நம் தோட்டத்துப்பறவைகளுக்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் சக்தி கிடையாது என்பதால் உப்புப் போட்ட உணவைக் கண்டிப்பாகக் கொடுக்கவே கூடாது.  உப்பு போட்ட மோர் மற்றும் குழம்பு சாதம், உப்பு போட்டுப் பொரித்த கடலை, சிப்ஸ் வகையறாக்கள் கூடவே கூடாது.   சுத்தமான குடிதண்ணீர் அவசியம் வைக்க வேண்டும்.

(மேலதிக விபரங்களுக்கு -  http://www.natureforever.org/birds-and-salt.html)

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 அன்று வெளியான என் கட்டுரை)


(படம்:- நன்றி இணையம்)

Saturday, 30 May 2015

பறவை கூர்நோக்கல் - 5 - தவிட்டுக்குருவி

தவிட்டுக்குருவி


தவிட்டுக்குருவி  - Yellow-billed Babbler  (Turdoides affinis)
தோட்டங்களிலும் புதர்ச்செடிகளிலும் அடிக்கடிக் காட்சி தரும் தவிட்டுக்குருவி, பெரும்பாலோர்க்குத் தெரிந்த பறவை.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்தில் இருக்கும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.  இதற்குக் கல்குருவி, சிலம்பன் என்ற பெயர்களும் உண்டு.

பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து குருவிகள் சேர்ந்து கூட்டமாகக் காட்சியளிப்பதோடு, ஓயாமல் கத்திக் கொண்டே இருக்கும்.  சமயத்தில் அணில் குரலுக்கும், இதன் ஓசைக்கும் எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.  பூச்சிகளையும் தானியத்தையும் உணவாகக் கொள்ளும்.

குறிப்பிட்ட உயரத்திற்கு மேலோ, தொலை தூரத்துக்கோ தொடர்ச்சியாக பறக்க இயலாது என்பதால் வலசை செல்லாத பறவை.  தரையில் தத்தித் தத்தி நடக்கும்.  அடர்த்தியான மரங்களில் கூடு கட்டும்.  எங்கள் மாமரத்தில் ஒரு முறை கூடு கட்டியது. 

எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து, அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.
 அக்காக்குயில்(Common Hawk-Cuckoo)



இதற்கு அக்காகுருவி, அக்கக்கா குருவி என்ற பெயர்களும் உண்டு. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். இக்குயிலை நான் பார்த்ததில்லை என்றாலும்,   இது பற்றி இப்பதிவில் சொல்லக் காரணமிருக்கிறது.

குயிலினத்தைச் சேர்ந்த பறவை என்பதால் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காது.  காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவது போல், தவிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த பறவைகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் முட்டையிட்டுவிடுமாம்.  தவிட்டுக்குருவி தான் அதன் குஞ்சுகளை வளர்க்குமாம்.

இது சம்பந்தமாக அருமையான இரு காணொளிகளைப் பார்த்து ரசித்தேன். அவசியம் நீங்களும் பாருங்கள்:-
இணைப்பு:- 1  https://www.youtube.com/watch?v=JtNHLtHbwxs
இணைப்பு:- 2  https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM
காணொளியில் நாணல் கதிர்க்குருவி  (Reed warbler) கூடு கட்டி முட்டை யிட்டிருக்கிறது.  அது வெளியே சென்றிருக்கும் சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது.  இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக் கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது.  இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது! 
முட்டை மாற்றப்பட்ட உண்மை அறியாத கதிர்க்குருவி அடைகாக்கின்றது.  மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே முட்டையிலிருந்து வெளிவரும் குயில் குஞ்சு, பொரிக்காத மற்ற முட்டைகளைக் கூட்டிலிருந்து தன் முதுகால் அனாயாசமாகத் தூக்கி வெளியே தள்ளிவிட்டுத் தான் மட்டும், மொத்த தீனியைத் தின்று வளர்கின்றது. 
ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக் கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி ஓடி உழைத்து உணவூட்டுகின்றன.  பாவம் இந்தப் பெற்றோர்!    

(நன்றி:- பறவைகள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை)                                                                                   (படங்கள் -  நன்றி இணையம்)  இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல         

Sunday, 12 April 2015

பறவை கூர்நோக்கல் - 4 - மைனா

மைனா 


தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) (Acridotheres tristis).

மைனா (Mynah) என்ற ஹிந்தி பெயரின் மூலம் சம்ஸ்கிருதம்(Madana).  நாகணவாய்ப்புள் என்ற பெயரில், நம் இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பறவை இதுவே.       

இதன் உடல் காப்பிக்கொட்டை நிறம்; தலை கறுப்பு; கண்ணைச் சுற்றி மஞ்சளாகவும், வாலுக்கடியில் வெண்மையாயும் இருக்கும்.  புறா, காகம், சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில் வாழும்.  காலத்துக்கேற்றாற் போல் கிராமங்களில் மட்டுமின்றி, பெரிய நகரங்களிலும் வாழ்வதற்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பறவை.      

பூச்சி, புழு, பழம், தேன் என எல்லாமும் தின்பதால், இது ஓர் அனைத்துண்ணி.

மரப்பொந்து, கட்டிட ஓட்டைகள், பாறை இடுக்குகள் ஆகியவற்றில் கூடு கட்டும்.  பழைய தாள், வைக்கோல், துணி ஆகியவை இவை கூடுகட்டப் பயன்படுத்தும் பொருட்கள். 

ஆஸ்திரேலியாவில் தெரியாத்தனமாய் இதனை அறிமுகப்படுத்தப் போய், அசுர வேகத்தில் வளர்ந்து, அக்கண்டத்தையே நடுங்க வைத்துள்ளதாம்.  அங்குள்ள உள்ளூர் பறவையினங்களை ஒடுக்கிவிட்டு, குறுகிய காலத்தில் பன்மடங்கு பெருகி ஆக்கிரமிப்பு நடத்தும் அழிவு சக்திகளில் மிக முக்கிய இடத்தை இது பெற்றிருக்கிறது. 
நம்மூரில் கரிச்சான், கழுகு, பருந்து போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால், இதன் ஜம்பம் இங்குப் பலிக்கவில்லை போலும்!  ஒண்டப்போன ஆஸ்திரேலியாவில் இது ஆக்கிரமிப்பு நடத்தும் விதத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறார் கீதா, ஒண்ட வந்த பிடாரிகள் - மைனாக்கள் என்ற இக்கட்டுரையில்.  

தென்னிந்தியாவில் ஏழு வகை மைனாக்கள் இருக்கின்றனவாம்.       

கருந்தலை மைனா (Brahminy Starling)


உச்சந்தலை, பிடரி கறுப்பாகவும் வயிறும் நெஞ்சும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.  பெரும்பாலும் ஜோடியாகவே காட்சி தருகின்றது.  

எதிர் வீட்டு மாடியில் இரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கிறது.  யாருக்கும் இதன் பெயர் தெரியவில்லை.  ஜெகநாதன் எழுதிய பறவைகள் அறிமுகக் கையேட்டில் இடம் பெற்றுள்ள படம் மூலம் இதை அறிந்துகொண்டேன். 

இது குடித்தனம் நடத்தும் இடம் எது தெரியுமா?  சிருஷ்டி கழிக்க வைப்பார்கள் அல்லவா பொம்மை, அதனுள் தான். 


பொம்மையின் கொம்புகள் இரண்டும் உடைந்துவிட, அதனைத் தம் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து விட்டது.  எனவே உயரமான கட்டிடங்களில் வைக்கும் திருஷ்டி பொம்மையின் கொம்புகளை மட்டும் உடைத்து வைத்து விட்டால், திருஷ்டியும் கழியும்; ஒரு பறவை குடும்பத்துக்கு வாழ்விடம் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்!     

நன்றி:- பறவைகள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை
முதல் மைனா படம் – நன்றி இணையம்    

Wednesday, 25 March 2015

இன்று சிட்டுக்குருவி! நாளை நம் சந்ததிகள்!

ஆண்குருவி

(20/03/2015 சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)

சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது.  20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது.  .
  
அதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக  நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.     
 
பெண்குருவி

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுவன:-
1.   சிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம்.  அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. 
மேலும் தோட்டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.    

இன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை.  காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்?

2.    இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன.  . 

எனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை.  மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.

3.   அரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும்  இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும்.  ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.      

4.   செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

காலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம்,  நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச் சின்னஞ்சிறு உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அம்போ என்று நட்டாற்றில் விட்டது நியாயமா?.    

சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்தால் பாவம்; அது கூடு கட்டுவது குடும்பத்துக்கு நல்லது,’ என்று நம் முன்னோரிடமிருந்த நம்பிக்கையால் தடையேதுமில்லாமல், அக்காலத்தில் இதன் இனப்பெருக்கம் நடைபெற்றது.   .
மேலும் கிராமத்தில் வீட்டுக்கூரையின் முன்பக்கம் இவை கொத்தித் தின்னப் வயலில் புதிதாக அறுத்த நெல்மணி கொத்துக்களைச் செருகி வைப்பார்களாம்.  இயற்கையை நேசித்தல் அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது.  ஆனால் நாமோ இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம்!  அதன் விளைவைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

மனிதரிடம் அடைக்கலம் புகுவதால், இதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு.  ஆனால் இன்று இக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்பார் யாருமில்லை.

‘சிட்டுக்குருவியால் நமக்கென்ன பயன்? ஏன் அதைக் காப்பாற்ற வேண்டும்?’ என்று கேட்கும் அறிவாளிகளும்(!) இன்று நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். 

இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்:-
இயற்கையில் தாவரம், புழு, பறவை, விலங்கு, மனிதன் என அனைத்தும் உணவுக்காகத் தொடர் சங்கிலி போலப் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு படைக்கப்பட்டுள்ளன.
 
பறவைகள் அழிகின்றன என்றால், இச்சங்கிலி ஏதோ ஓர் இடத்தில் அறுபட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.  இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்து விடும்.

“இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை பறவைகள் தாம்; அவற்றுக்குக் கேடு எனில், நாமும் கூடிய விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன்.(Roger Tory Peterson)  .  

சிட்டுக்குருவியைக் காப்பதால் எனக்கென்ன நேரடி நன்மை என்று ஒவ்வொன்றுக்கும் லாப நஷ்டம் கணக்குப் போட்டுப் பார்த்து உதவி செய்யுமளவுக்கு மனங்கள் குறுகிப்போன இந்நாளில், முன்னெப்போதும் இல்லாத அளவு, வாஸ்து சாஸ்திரம் மிகப் பிரபலமாயிருக்கிறது.

கீரைக்காரியிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம், பேரம் பேசும் நம் மக்கள், வாஸ்துவுக்காக சீனா மூங்கிலை நூற்றைம்பது ரூபாய்(!) கொடுத்து வாங்கி வரவேற்பறையில் வைத்து அனுதினமும் அக்கறையாகக் கவனிக்கிறார்கள்.  இந்த மூங்கிலால் இவர்களுக்குப்  பலன் கிடைக்கிறதோ இல்லையோ, சீனாக்காரனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கிறது.  அவனுக்குத் தான் நம் வாஸ்துவினால் கொண்டாட்டம்!

சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தால், ஒரே மாதத்தில் உழைக்காமல் கோடீசுவரன் ஆகி விடலாம்,’ என்று பிரபல வாஸ்து ஜோசியர் யாராவது சொன்னால் போதும்; அதற்குப் பிறகு நாம் சிட்டுக்குருவி தினம் அனுசரித்து, இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை. வாஸ்து ஜோசியர் யாராவது மனம் வைக்க வேண்டும்!

www.citizensparrow.in/ என்ற தளம் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.  (நானும் கலந்து கொண்டு, எனக்குத் தெரிந்த தகவல்களை அளித்தேன்.)


8780 இடங்களிலிருந்து 5924 பேர் கலந்து கொண்டு அளித்த 11146 தகவல்களின் அடிப்படையில் இத்தளம், சிட்டுக்குருவி எங்கெங்கு இருக்கிறது, எங்கு இல்லை என்ற பட்டியலைத் தயாரித்து  வெளியிட்டிருக்கிறது. மேற்கூறிய தளத்துக்குச் சென்றால் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம். 


இப்போதும் கூட இத்தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, உங்களூரில் சிட்டுக்குருவியைப் பார்த்த தகவல்களை அளித்து, இது பற்றிய கணக்கெடுப்புக்கு உங்களால் உதவ முடியும்:-   இணைப்பு:- http://www.citizensparrow.in


இந்தச் சிட்டுக்குருவி தினத்தை வீட்டில், பள்ளியில் அலுவலகத்தில் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றறிய, இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.-  www.worldsparrowday.org


சிட்டுக்குருவி கூடுகள், உணவளிப்பான் (Bird Feeder) போன்றவற்றை வாங்க:-  www.save.natureforever.org
(Bird Feeder க்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை; என் ஆக்கம்  உணவளிப்பான்! யாருக்கேனும் சரியான சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)

முடிந்து போனதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை.சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க, இனி நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறீர்களா?

இதை……இதைத் தான்…… நான் எதிர்பார்த்தேன்.

உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.

எப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.

அடுத்த பதிவுக்குச் செல்ல...




 
(முதல் படம் நன்றி இணையம்)

Thursday, 5 March 2015

பறவை கூர்நோக்கல் – 3 கொண்டைக்குருவி


'கொண்டு கரிச்சானி'ன் குரல் இனிமை என்ற சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா? அதை நீங்களும் கேட்டு இன்புற இங்கே கொடுத்துள்ளேன். அலைபேசியில் ஒலிப்பதிவு செய்தது தான். இடையிடையே வேறு சத்தங்கள் இருப்பதால், அவ்வளவு தெளிவாக இல்லை.  ஆனாலும் குருவியின் குரலை ஓரளவுக்கு உங்களால் இனங்காண முடியும் . கேட்டு விட்டு உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்.


(இதனைத்  திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவைப் பார்த்துக் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இணைத்துக் கொடுத்தார்.  இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  

மூன்றாவதாக நான் அறிமுகப்படுத்துவது கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) (Pycnonotus cafer)





இதையும் பெயர் தெரியாமல் புல் புல் என்றே சொல்லிவந்தேன்.  பறவைகள் கையேட்டின் மூலம் இந்தப் பெயர் தெரிந்து கொண்டேன்.  இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டாம்.

தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  உடலும் இறகுகளும் பழுப்பு நிறமாகவும், செதில் செதிலாகவும் தோற்றமளிக்கும்.  வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம்.
பழங்கள், தேன், பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்ளும்.  . ,
சிறுசிறுகுச்சிகளையும், சிலசமயம் உலோகக் கம்பிகளையும் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும்.   

ஆண், பெண் இரண்டுமே குஞ்சுக்கு உணவூட்டும்.  தெற்காசிய பறவையான இதை நியூசிலாந்து, ஹவாய், பிஜி, யுனையெட் அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர்.

மூர்க்க குணம் கொண்டது.  வெளியூரிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் பறவைகளுள், உள்ளூர் இனங்களை ஒரேயடியாக அமுக்கி விட்டு வெகுவேகமாகப் படையெடுத்துப் பரவக்கூடிய, இனமாக இப்பறவை இனங்காணப்பட்டுள்ளது.  (worst alien invasive species)

சென்ற ஆண்டு, ஒரு நாள் எங்கள் வீட்டு வாசல் கதவுக்கும், கிரில் கேட்டுக்கும் நடுவில் தொங்கவிட்டிருந்த மின்விசிறியின் மண்டையின் மேல் கூடு கட்ட இடம் பார்த்தது, இக்குருவி. 

மின் விசிறியின் மேற்பகுதி வெட்ட வெளியாக இருப்பதால், கூடு கட்டினால் குஞ்சு தவறிக் கீழே விழுந்து விடுமே எனப் பயந்து நான் அட்டைபெட்டியின் நடுவில் ஓட்டை போட்டு, அதனை மின்விசிறியின் இறக்கையில் தொங்கவிட்டேன். 

நான் முக்காலியில் ஏறி அதைத் தொங்க விடுவதைக் கண்ட இது, அதன் கூட்டை எடுக்க முயல்கிறேன் என்று எண்ணிப் பயந்து ஓடிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் வீட்டுப்பக்கமே காணோம்.

அதன் பின் காலியாகத் தொங்கிய அக்கூட்டில், சில நாட்கள் கழித்து முதன்முறையாகச் சிட்டுக்குருவி வந்து குடித்தனம் நடத்தியது தனிக்கதை.

போன மாதம் வீட்டின் குளிர் சாதனக்கருவியின் வெளிப்பக்க பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் மிகச் சிறிய இடத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தது.  இதன் குரல் கேட்கச் சகிக்கவில்லை.

எங்கள் காரின் ஆன்டெனா மேல் தம்பதி சமேதரராகக் காட்சி தரும் கொண்டைக் குருவி,  கைபேசியில் எடுத்த படம்:-



(முதல் படம் - நன்றி இணையம்)                                                                                                                                                                                                                                                                    நன்றி: - பறவைகள் அறிமுகக்கையேடு (ப.ஜெகநாதன் & ஆசை)                                மற்றும் இணையம்.                                                                                                                                                                                                                                                                                               (தொடர்வேன்)                           

Sunday, 1 March 2015

பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) - 2 - 'கொண்டு கரிச்சான்'



இத்தொடருக்கு என் வேண்டுகோளை ஏற்று, கரிச்சான் (BLACK DRONGO) குருவியைப் பற்றி நண்பர்கள் விரிவாக எழுதிய பின்னூட்டம், என்னைப் போலவே பலருக்கும், பறவைகளின் மீது இருக்கும் நேசத்தை வெளிப்படுத்தியது. 

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, விரிவான கருத்துக்களை எல்லோரும் அறியத் தந்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி.

துரை செல்வராஜ்  (தஞ்சையம்பதிஅவர்கள் இக்குருவிக்குத் திருவாரூருக்கு அருகில் வலிவலம் என்ற ஊரில் கோவில் இருக்கிறது என்ற அரிய தகவலைச் சொன்னார்.  இக்கோவில், தேவாரப் பாடல், கரிச்சான் கழுகை விரட்டிய நினைவலைகள் ஆகியவை பற்றி, அவர் தளத்தில் தனியே ஒரு பதிவு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் கரிச்சானைப் பற்றி அவரிடம் அவ்வளவு அரிய விபரங்கள் இருக்கின்றன.  நம் சந்ததிக்காக அவற்றைப் பதிந்து வைப்பது மிக அவசியம்.    

பலர் அளித்த தகவல்கள் மூலம் இக்குருவிக்கு வலியன், கரிச்சான், கரிக்குருவி, இரட்டை வால் குருவி, கருவாட்டு வாலி என்ற பெயர்கள் இருப்பதை அறிந்தோம்.

இவற்றில் கருவாட்டு வாலி மட்டும் சரியா என்று எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.  கருவாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ஸ்ரீராம் (எங்கள் பிளாக்)கொடுத்த இணைப்பில் இருந்த சலீம் அலி புத்தகத்தைப் படித்த போது, இதற்குக் கருவெட்டு வாலி என்ற பெயரும் இருப்பதாக அறிந்தேன்.  ஸ்ரீராமுக்கும் ஆர்.விக்கும் என் நன்றி.

வால் நடுவே இரண்டாகப் பிளந்து, வெட்டுப்பட்டது போல் இருப்பதால், கருவெட்டு வாலி என்பது பொருத்தமாக இருக்கிறது.  எனவே கருவெட்டு வாலி தான் காலப்போக்கில் மருவி, கருவாட்டுவாலி ஆகியிருக்க வேண்டும்.

BIRD WATCHING என்பதற்கு ஜோசப் விஜு (ஊமைக்கனவுகள்) அவர்கள் சொன்ன கூர்நோக்கல் என்ற சொல், கவனித்தல் என்பதை விடப் பொருத்தமாய்த் தோன்றியதால், தலைப்பை மாற்றிவிட்டேன்.   

மிமிக்ரி என்பதற்கும் அநுகரணம் என்ற சொல் பத்து- பதினொன்றாம் நூற்றாண்டிலேயே  யாப்பருங்கல விருத்தி என்ற தமிழ் நூலில்  பயன்படுத்தப்பட்டிருப்பதையறிந்தேன்.   இது தெரியாமல் நாமெல்லாரும் மிமிக்ரி என்று தமிங்கிலீஷில் தானே, இது நாள் வரை எழுதி வந்தோம். இந்த அரியத் தகவலைத் தந்த விஜு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. 

இரண்டாவதாக நான் சொல்லப் போவது கொண்டு கரிச்சான் (ORIENTAL MAGPIE- ROBIN. (Copsychus saularis)

இது எங்கள் தெருவில் கடந்த ஓராண்டாக வசிக்கிறது.  இதன் தமிழ்ப் பெயர் தெரியாததால், ராபின் என்றே இதுநாள் வரை சொல்லி வந்தேன்.  பறவைகள் – அறிமுகக் கையேட்டின் (ப.ஜெகநாதன்) மூலம் சரியான பெயரைத் தெரிந்து கொண்டேன்.


ராபின் என்ற பெயர் இருந்தாலும், இக்குருவி அமெரிக்க ராபின் (American robin) (Turdus migratorius)குடும்பத்தையோ,  ஐரோப்பிய ராபின்  (European robin) (Erithacus rubecula) குடும்பத்தையோ  சேர்ந்ததல்ல. 

இது இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் வாழும் பறவை. 
அமெரிக்க ராபின் என்றவுடன் ‘மெளன வசந்தம்என்ற நூல் நினைவுக்கு வருகிறது.  அது பற்றி ஒரு சிறு தகவல்:-

அமெரிக்காவில் 1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகத் தெளித்தார்கள்.   
இதனால் பறவைகள் குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது.  இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். 

தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசந்தத்தில் மயான அமைதி நிலவியது.    

கோரைப்புல் ஏரியில் வாடிவிட்டது
பறவைகள் பண்ணிசைப்பதில்லை” (கீட்ஸ்)

இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம் (SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர் ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ‘எதிர்’  வெளியீடு.  பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது. 


'கொண்டு கரிச்சான்,' மைனாவை விடச் சற்றுச் சிறியது; இதன் தனித்தன்மை குரல் வளம் தான்.  அதிகாலை நேரத்தில் சீழ்க்கை ஒலி போலத் தொடர்ந்து, இது பாடும் பாடலைக் கேட்கலாம்; கேட்கலாம்; கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  அவ்வளவு இனிமை!

சில பறவைகள் ஏன் பாடுகின்றன?  இயல்பாக அவை எழுப்பும் ஒலிக்கும் பாட்டுக்கும் என்ன வேறுபாடு?     

இனப்பெருக்கக் காலத்தில் சில பறவைகள் இணையைத் தேடுமுன் ஒரு சிறிய இடத்தைத் தமது இடமாகத் தேர்ந்தெடுத்து, ‘இது என் பகுதி இங்கு யாரும் வரக்கூடாது,’ என்பதைத் தனித்துவமிக்க ஒலியால், பாடலால் அறிவிக்கின்றனவாம். 

ஆண் பறவைகள் மட்டுமே பாடும் (குயில் மாதிரி). அப்படி ஓர் ஆண் பறவை பாடினால், அவ்விடம் அதற்கு 'முன் பதிவு'  செய்யப்பட்டதாக அர்த்தமாம்.  அது ஓர் ஒலி வேலி; (எவ்வளவு அழகான சொல்!) பெட்டையைக் கவர்வதற்கும் இது ஒரு உத்தி என்கிறார், கானுயிர் ஆர்வலரான சு. தியடோர் பாஸ்கரன் ‘தாமரை பூத்த தடாகம்,’ என்ற நூலில்.  (உயிர்மை பதிப்பகம்)

இக்குருவி அமர்ந்திருக்கும் பெரும்பாலான நேரங்களில் வாலைத் தூக்கியே வைத்திருக்கிறது;  தரையில் இருக்கும் பூச்சிகளை இரையாகக் கொள்கிறது.

இக்குருவிக்குச் சலீம் அலியின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்  குண்டு கரிச்சான் என்ற பெயர் பொருத்தமாக இல்லையென்பதால் கையடக்க ஏட்டில் கொடுத்த பெயரையே கொடுத்திருக்கிறேன்.

இதற்கு வேறு பெயர்கள் உங்கள் பகுதிகளில் வழங்கினால், அவசியம் அனைவரும் அறியத் தாருங்கள். 

துணை நூற்பட்டியல்:-  1.  பறவைகள்-அறிமுகக் கையேடு
ப.ஜெகநாதன் & ஆசை – க்ரியா பதிப்பகம்
2.  பறவை உலகம் – சலீம் அலி – தமிழாக்கம் – பேராசிரியர் எம்.வி.ராசேந்திரன்
3.  தாமரை பூத்த தடாகம் – சு.தியடோர் பாஸ்கரன் -  உயிர்மை வெளியீடு.
4.  மெளன வசந்தம் – ரெய்ச்சல் கார்சன் – தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட் – எதிர் வெளியீடு.

தொடர்வேன்,

நன்றியுடன்,
ஞா.கலையரசி. 
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)