காலங்காலமாய் நான் தவழ்ந்து
வந்த பாதையைக்
கள்ளத்தனமாய் அபகரித்துக்
கட்டிடங்கட்டி
முட்டுக்கட்டை போட்ட மனிதருக்குப்
பாடம் புகட்ட, தக்கதொரு
தருணத்தைப்
பலநாளாய் எதிர்பார்த்துக்
காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது..
வான் பொத்துக்கொண்டு கொட்டிய
நாளில்
முன்னறிவிப்பு ஏதும் செய்யாமல்
ஏரியைப் பெருமளவு திறந்து விட்டு
அறிவு ஜீவிகள்(!) செய்த
பேருதவிக்கு
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை!
ஆற்றின் கரைகளை உடைத்தெறிந்து
ஆவேசமாய் ஊருக்குள் நுழைகிறேன்.
மனித உடல்கள் பலவற்றை ருசிபார்த்து
உடைமைகளை நாசம் பண்ணி
என் கோபத்தைக் காட்ட இதுவே
சமயம்!.
நள்ளிரவாய்ப் போனதால்,
வேலை இன்னும் எளிதாயிற்று!
நான் சீறிப் பாயும் சத்தங்
கேட்டு
முதல் மாடியில் தஞ்சம் புகுந்தனர்
பலர்.
அவர்கள் அறியாமையைக் கண்டு
உள்ளுக்குள் நகைத்துக்கொள்கிறேன்.
முதல் மாடிக்கு ஓடி விட்டால்
வர முடியாதா என்னால்?
கீழ்த்தளத்தில் வேலை முடிந்தவுடன்
மேல்தளத்தைக் கவனிக்க வருவேன்!
கண்ணில் பட்ட முதல் வீட்டின்
கதவிடுக்கின் வழியே மெல்ல
நுழைந்து
முதியவரின் கால்களை வருடுகிறேன்.
வீட்டுக்குள் தண்ணீர் என்றதும்
அதிர்ந்த கணவர், மனைவியுடன்
படுக்கையில் ஏறி அமர்கிறார்.
கிடுகிடுவென கட்டில்வரை
முன்னேறி
படுக்கையை நனைப்பது
சிரமமாக இல்லை எனக்கு!
வாசல் சாவியை நான் அபகரித்து
அமுக்கிக் கொண்ட செய்தியறியாமல்
மின்சாரம் இல்லாக் கும்மிருட்டில்
தம் சாவியைத் தேடித் தேடிக்
களைத்துப் போகிறார் முதியவர்.
கதவைத் திறக்க வழியறியாது
சாப்பாட்டு மேஜை மேல்
தஞ்சம் புகுகிறார்கள் இருவரும்.
விடுவதாயில்லை நான்!
ஓட ஓடத் துரத்திப் பிடிக்கும்
விளையாட்டு பிடித்திருக்கிற
தெனக்கு!
மேஜையின் விளிம்பு வரை முன்னேறி
மீண்டும் பாதங்களை நனைக்கிறேன்.
கண்களில் மரணபயம் லேசாக
எட்டிப்பார்க்கிறது இப்போது!
முக்காலிகளை மேஜையில் ஏற்றி
மூச்சு வாங்க ஏறி அமர்கின்றனர்
.
அலைபேசியில் யார் யாரிடமோ
நிலைமையை அவசரமாய் விளக்கி
உதவி கோருகிறார் பெரியவர்..
படிப்படியாக நான் உயர்வதைக்
கண்டு
முடிந்தமட்டும் அலறுகிறார்கள்
உதவி கேட்டு!
தெருவில் என் பேரிரைச்சலுக்கிடையே
பெரியவரின் மரண ஓலம்
சிறுகேவலாய் விம்மி அமுங்குகிறது!.
தெருவில் பத்தடி உயரத்தில்
நான் பாய்ந்து கொண்டிருக்கும்
போது
இருட்டில் யார் வருவார்கள்
இவர்களுக்கு உதவி செய்ய?
முக்காலியை நான் மூழ்கடிக்கும்
சமயம்…
எழுந்து நின்று…
உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு
ஓலமிடுகிறார்கள் மீண்டும்!
நெஞ்சு வரை உயர்ந்துவிட்டேன்
இப்போது!.
அவர் தம் கைகள் நனையா வண்ணம்
உயரத் தூக்கி அலைபேசி மூலம்
அபயக்குரல் எழுப்புகிறார்
மீண்டும்!
பத்து நிமிடங்களுக்குப்
பிறகு…
இருவர் கண்களையும் முத்தமிட்ட
நான்
உயரத் தூக்கிய கைகளை நனைத்தவாறு
வீட்டின் உச்சியைத் தொட்ட
பெருமிதத்துடன்
முதல் மாடியில் தஞ்சம் புகுந்தோரின்
பக்கம்
என் கவனத்தைத் திருப்புகிறேன்.
அலைபேசி அணைந்து கீழே விழுகிறது.
![]() |
சமர்ப்பணம் |
(02/12/2015 அன்று சென்னை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரைப்
பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் வாசித்த போது, கர்னல் வெங்கடேசன் அவர்களும், அவர்
மனைவி கீதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்த விதம்
என்னைக் கடுமையாகப் பாதித்தது. வெள்ளத்தில்
மூழ்கி ஓரிரு நிமிடங்களில் உயிர்விடுவதை விடக் கடைசி நிமிடம் வரைஉதவி கிடைக்காமல் மரண
பயத்தில் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடிய விதம் மனதை நெகிழச் செய்தது. இந்த உண்மை
சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிவை எழுதினேன். )
இருவருக்கும் இப்பதிவைச்
சமர்ப்பணம் செய்கிறேன். அவர் தம் குடும்பத்தாருக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:-
“The water has reached the
ankle level … now it’s up to my hip … now we are standing on the table inside
the bedroom, my father told me,” said Anitha quoting the frantic updates
Venkatesan gave her. His final call came at 11am on December 2, when he said
they were neck-deep in water and that he was craning his neck just below the
ceiling, trying to protect the phone, the last line of communication. Then the
call went dead. It was Geetha’s 60th birthday. (http://timesofindia.indiatimes.com/city/chennai/Locked-at-home-Armyman-wife-died-sending-SOSs/articleshow/50099333.cms)
(படங்கள்
நன்றி இணையம்)