![]() |
தவிட்டுக்குருவி |
தவிட்டுக்குருவி - Yellow-billed Babbler (Turdoides affinis)
தோட்டங்களிலும்
புதர்ச்செடிகளிலும் அடிக்கடிக் காட்சி தரும் தவிட்டுக்குருவி, பெரும்பாலோர்க்குத் தெரிந்த
பறவை. உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல்
நிறத்தில் இருக்கும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். இதற்குக் கல்குருவி,
சிலம்பன் என்ற பெயர்களும் உண்டு.
பெரும்பாலும் நான்கு
அல்லது ஐந்து குருவிகள் சேர்ந்து கூட்டமாகக் காட்சியளிப்பதோடு, ஓயாமல் கத்திக் கொண்டே
இருக்கும். சமயத்தில் அணில் குரலுக்கும், இதன் ஓசைக்கும் எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.
பூச்சிகளையும் தானியத்தையும் உணவாகக் கொள்ளும்.
குறிப்பிட்ட உயரத்திற்கு
மேலோ, தொலை தூரத்துக்கோ தொடர்ச்சியாக பறக்க இயலாது என்பதால் வலசை செல்லாத பறவை. தரையில் தத்தித் தத்தி நடக்கும். அடர்த்தியான மரங்களில் கூடு கட்டும். எங்கள் மாமரத்தில் ஒரு முறை கூடு கட்டியது.
எங்கள் வீட்டு ஜன்னல்
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து,
அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.
அக்காக்குயில்(Common Hawk-Cuckoo)
இதற்கு அக்காகுருவி,
அக்கக்கா குருவி என்ற பெயர்களும் உண்டு. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். இக்குயிலை நான் பார்த்ததில்லை என்றாலும், இது பற்றி இப்பதிவில் சொல்லக் காரணமிருக்கிறது.
குயிலினத்தைச்
சேர்ந்த பறவை என்பதால் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காது. காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவது போல்,
தவிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த பறவைகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் முட்டையிட்டுவிடுமாம். தவிட்டுக்குருவி தான் அதன் குஞ்சுகளை வளர்க்குமாம்.
இது சம்பந்தமாக
அருமையான இரு காணொளிகளைப் பார்த்து ரசித்தேன். அவசியம் நீங்களும் பாருங்கள்:-
இணைப்பு:- 1 https://www.youtube.com/watch?v=JtNHLtHbwxs
இணைப்பு:-
2 https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM
காணொளியில் நாணல்
கதிர்க்குருவி (Reed warbler) கூடு கட்டி முட்டை
யிட்டிருக்கிறது. அது வெளியே சென்றிருக்கும்
சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது. இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக்
கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது.
இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது!
முட்டை மாற்றப்பட்ட உண்மை அறியாத கதிர்க்குருவி
அடைகாக்கின்றது. மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே முட்டையிலிருந்து
வெளிவரும் குயில் குஞ்சு, பொரிக்காத மற்ற முட்டைகளைக் கூட்டிலிருந்து தன் முதுகால் அனாயாசமாகத் தூக்கி
வெளியே தள்ளிவிட்டுத் தான் மட்டும், மொத்த தீனியைத் தின்று வளர்கின்றது.
ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக்
கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி
ஓடி உழைத்து உணவூட்டுகின்றன. பாவம் இந்தப்
பெற்றோர்!
(நன்றி:- பறவைகள்
அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை) (படங்கள் - நன்றி இணையம்) இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல