நல்வரவு
வணக்கம் !
Sunday, 21 October 2012
Tuesday, 2 October 2012
உறவுகள்
உங்களது சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று டாக்டர் கூறிய போது அதை ஜீரணிக்க
முடியாமல் பேயறைந்தது மாதிரி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் சேகர்.
”என்ன டாக்டர்
சொல்றீங்க? அவங்களுக்கு வயத்துல தான்
வலி. ரெண்டு நாளா வாந்தி. மூச்சு விட ரொம்பச் சிரமப்படுறாங்க. முகமும் காலும் ரொம்ப வீங்கியிருக்கு. அதுக்காகத்
தான் ஒங்கக்கிட்ட காட்ட வந்தோம். நீங்க வேற
என்னமோ சொல்லிப் பயமுறுத்திறீங்க?”
டாக்டர் சொன்னதை நம்ப முடியாமல் அவன் மனைவி சித்ரா கேட்டாள்.
”எல்லாம் அதோட
அறிகுறிதாம்மா. நுரையீரல்ல நிறைய தண்ணி
சேர்ந்திருக்கு. ஒடனடியா ஆஸ்பத்திரியிலே
சேர்த்துடுங்க. டயாலிசிஸ் செய்யணும். கையில ’பிஸ்டுலா’ன்னு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கு. ஆனா அது மூலமா டயாலிசிஸ் செய்றதுக்கு ஒரு மாசம்
ஆகும். அதுவரைக்கும் தற்காலிகமா கழுத்து
பக்கத்துல ஒரு ’கதீட்டர்’ போட்டுப் பண்ணனும்.”
”அதுக்கெல்லாம் நெறைய பணம்
தேவைப்படுமே. நாங்க சாதாரண வயித்து
வலின்னு நெனைச்சுக் கிட்டுத்தான் வந்தோம்.
அதனால் வீட்டுக்குப் போய் பணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு நாளைக்கு வரலாமா
டாக்டர்?”
”நாள் வளர்த்தினீங்கன்னா
ரொம்ப சீரியஸ் ஆயிடும்மா. எவ்ளோ சீக்கிரம் வர்றீங்களோ, அவ்வளவுக்கு நல்லது.”
”சரிங்க டாக்டர். நாளைக்குக் கண்டிப்பா வந்துடுறோம்.”
ஒரு நிமிடம் பாத்ரூம் போய் வருகிறேன் என்று அவனிடம் கைப்பையைக் கொடுத்து
விட்டு உள்ளுக்குள் சென்று கொஞ்ச நேரம் அழுது தீர்த்து விட்டு முகத்தைக்
கழுவிக்கொண்டு வெளியில் வந்தாள் சித்ரா.
எதிர்காலமே சூன்யமாகி விட்டது போலிருந்தது அவனுக்கு.
’இன்னமும் நான் முடிக்க
வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? அய்யோ
நான் என்ன செய்வேன்? திடீரென்று ஒருவனிடம் உன்னுடைய ஆயுட்காலம் இவ்வளவு நாள்
அல்லது இத்தனை மணி நேரம் என்று சொன்னால் அவனுக்கெப்படி இருக்கும்? எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நாளுக்குள்
முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் என்னால் முடித்து விட்டுப் போக முடியுமா? எல்லாவற்றையும்
சித்ரா தலையில் சுமத்தி விட்டுப் போனால், பாவம் அவள் என்ன செய்வாள்?’
சிவந்திருந்த தன் முகத்தையும், கண்களையும் அவன் பார்க்க முடியாதபடிக்கு
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ”வாங்க
வீட்டுக்குப் போகலாம்,” என்று சித்ரா அழைத்த
போது அவனது எண்ண ஓட்டம் தடைப்பட்டது.
”அவ்வளவு தான் என்
வாழ்க்கை! எல்லாம் முடிந்து போய் விட்டது சித்ரா,” என்று அவன் சொன்ன போது குரல் உடைந்து கண்ணீர் கொட்டியது. சிறு குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுதான்
சேகர்.
”ஷ்! எல்லாரும்
பார்க்கிறாங்க. மனசைத் தளர விடாதீங்க. இந்தச் சமயத்துல தைரியம் தான் ரொம்ப
முக்கியம். வருஷக்கணக்கா டயாலிசிஸ்
செஞ்சிட்டு எத்தனை பேரு நல்லா இருக்காங்க தெரியுமா? மேலும் அறுவை சிகிச்சை பண்ணி வேற
சிறுநீரகத்தைப் பொருத்திக்கிட்டா பிரச்சினையேயில்லன்னு டாக்டரும் சொன்னாரில்லே?”.
”சித்ரா! நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணினேன்? மனசாலக் கூட யாருக்கும் எந்தத் தீங்கும்
நினைச்சதில்லே. ஏன் எனக்கு மட்டும்
இப்படி?”
”ஒங்களுக்கு மட்டும்
இல்லீங்க. கள்ளங் கபடு இல்லாத இந்தச்
சின்னக் கொழந்தைங்களைப் பாருங்க. இந்தப் பிஞ்சு வயசில பெரிய பெரிய வியாதியெல்லாம்
வந்து எவ்ளோ கஷ்டப் படுதுங்க?. இதுங்க
என்ன பாவம் பண்ணிச்சிங்க? மனுஷன் நல்லவனா கெட்டவனான்னு மனசைப் பார்த்து வியாதி வர்றதில்லேங்க.”
”எனக்கு எந்த வைத்தியமும்
பண்ண வேணாம் சித்ரா. டயாலிசிஸ் பண்ணினா, சேர்த்து
வைச்சிருக்கிற மொத்த பணமும் காலியாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்னு நான்
கேள்விப்பட்டிருக்கேன்.
பசங்களைப் படிக்க வைக்க, குடும்பத்தை நடத்த நிறையப் பணம் தேவைப்படும். எப்படியும் நான் பொழைக்கப் போறதில்லே. அதனால எனக்கு வைத்தியச் செலவு எதுவும் பண்ணாம நிம்மதியா என்னைச் சாக விட்டுடு.”
”இங்கப் பாருங்க. எத்தினியோ வியாதிக்கு மருந்தே இன்னும்
கண்டுப்பிடிக்கலே. ஒங்களுக்கு வந்திருக்கிற
வியாதிக்குச் செலவு பண்ணினாலும், வைத்தியம் இருக்கேன்னு நெனைச்சுச் சந்தோஷப்படுங்க. அவசியமானதுக்குக் கூடச் செலவழிக்காம பணத்தைச்
சேர்த்து வைச்சிக்கிட்டு நாம என்ன பண்ணப் போறோம்?
கண்டதையும் நினைச்சு மனசைப் போட்டு அலட்டிக்காம தைரியமா இருங்க. மத்ததை எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”
’பெண்கள் வீக்கர் செக்ஸுன்னு
யார் சொன்னது? இந்த மாதிரி நெருக்கடியான
சமயங்கள்ல அவங்களுக்கிருக்கிற தைரியமும் துணிச்சலும் எந்த ஆணுக்காவது இருக்குமாங்கிறது
ச்ந்தேகம் தான். பெரிய பலசாலியா
இருக்கிறவன் கூட சாவு நெருங்குதுன்னு தெரிஞ்சவுடனே, ஆடிப்போயி எவ்வளவு பெரிய கோழையாயிடுறான்?’
”என்ன யோசனை? கவலைப்படாதீங்க. ஒங்களுக்கு ஒன்னும் ஆகாது. ரொம்ப நாளைக்கு
டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியமில்லே ஒங்கக்கா, தம்பி யெல்லாரும் ஒங்க மேல உயிரா
இருக்காங்க. ஒங்களுக்கு ஒன்னுன்னா அவங்க தாங்க மாட்டாங்க. நீங்க வேணா பாருங்களேன், ஒங்களுக்குக் கிட்னி கொடுக்க அவங்க எல்லாரும் நான் நீன்னு கியூ
வரிசையில வந்து நிக்கப் போறாங்க. ஆப்ரேஷன்
பண்ணிட்டா அதுக்கப்புறம் டயாலிசிஸ் பிரச்சினை தீர்ந்துடும்...”.
”என்னோட அக்கா, தம்பியைப்
பத்தி மட்டும் சொல்றே. ஏன் நீ கொடுக்க
மாட்டியா? உயிரு மேல ஒனக்கு அவ்வளவு பயம்.
அப்டித்தானே?,” கேட்டு விட்டு விரக்தியாகச் சிரித்தான். அவளைச்
சீண்டிவிட்டுக் கோபப்பட வைப்பதில் ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கு விருப்பம் அதிகம்.
”டாக்டரு என்ன
சொல்றாருன்னா, அப்பா அம்மா, இல்லேன்னா கூடப்பொறந்தவங்க கொடுத்தா நல்லாப்
பொருந்துமாம். ஒங்க ஒடம்பு அதை
நிராகரிக்கிற வாய்ப்பு ரொம்பக் கம்மியாம்.
மாமா, மாமிக்கு வயசாயிட்டுது.
அறுபது வயசுக்கப்புறம் எடுக்க மாட்டாங்களாம். ஒருத்தருக்கு ஒரு சிறுநீரகம் தாராளமாப் போதும்.
. என்னோட தோழி ஒருத்தி ஒரேயொரு சிறுநீரகத்தோட பத்துப் பதினைஞ்சு வருஷமா நல்ல
ஆரோக்கியத்தோட இருக்கா.”
சித்ரா பேசப் பேச கொஞ்சங் கொஞ்சமாக அவனுக்குள்
நம்பிக்கைத் துளிர் விட்டது. யார் கொடுக்க
முன் வந்தாலும் வராவிட்டாலும் தம்பி கண்டிப்பாகக் கொடுப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.
வீட்டுக்கு வந்து தேவையான பணம் ஏற்பாடு செய்து கொண்டு உறவுகளிடம் விபரம்
சொல்லி மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரமாகி விட்டது.
விபரம் கேள்விப்படடு மருத்துவமனைக்குப் படையெடுத்தவண்ண மிருந்தனர்
உறவுகள். அண்ணனுக்கு நான் தான் கொடுப்பேன் என்று அடம்
பிடித்தான் தம்பி முருகன். அவனுடையது
ஒத்துப் போகவில்லை என்றால், தான் தரத் தயாராயிருப்பதாய்ச் சொன்னாள் அக்கா பார்வதி.
”அத்தான் ஏதாவது சொல்லப்
போறாரோன்னு பயமாயிருக்குக்கா. அவர் கிட்டே
கேட்டுக்கிட்டியா? ஒன் பசங்கக் கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடு.”
”அவருக்கிட்டே கேட்காமலா?
அவரும் சரின்னு சொல்லிட்டாருடா தம்பி.
புள்ளை பொண்ணு எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணி என் கடமையை
முடிச்சிட்டேன். அதுங்கக்கிட்டே என்னா
கேட்குறது? இனிமே எனக்கொன்னும்
பிரச்சினையில்லே.”
முதலில் முருகனுக்குப் பல பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு அவனுடையது
பொருந்த வில்லை என்று டாக்டர் சொன்னபோது எல்லோருக்கும் முக்கியமாக சேகருக்குப் பெருத்த
ஏமாற்றமாயிருந்தது..
”அண்ணா! நீ எனக்கு எவ்வளவோ
செஞ்சிருக்கே. என்னோட நன்றிக்கடனை
இப்படியாவது நிறைவேத்தலாம்னு நினைச்சேன்.
என்னோட கண்டிப்பா பொருந்தும்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன். இப்ப்டியாயிட்டுதே,” என்று வாய் ஓயாமல் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான்
முருகன்..
”அதுக்கென்னப்பா
செய்றது? பொருந்துறதும் பொருந்தாததும்
நம்ம கையில இல்லியே! ஒன் உயிரைப் பத்திக்
கவலைப்படாம உடனே கொடுக்கிறேன்னு சொன்னியே
அதுவே போதும்,” என்று சேகரும் தம்பியை அவ்வப்போது
தேற்றிக் கொண்டிருந்தான்.
அதற்கடுத்து பார்வதிக்குச் சோதனை செய்து அவளுடையது நன்றாகப் பொருந்துவதாக
டாக்டர் சொல்லியபோது சேகருக்கு நிம்மதி ஏற்பட்டது.
ஒரு மாதங்கழித்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. அத்தினத்திற்கு இரு நாட்களுக்கு முன் வந்து
மருத்துவமனையில் சேருமாறு சொன்னார் டாக்டர்.
அறுவைசிகிச்சைக்குத் தேவையான பணம் ஏற்பாடு பண்ணிக்கொண்டு மருத்துவமனையில்
வந்து அட்மிட் ஆயினர் சேகரும் சித்ராவும்.
அவனது அக்காவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் அவள் வரவேவில்லை.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ”முதல்ல
கொடுக்கிறேன்னு சொன்னா; ஆனா இப்ப அவளுக்கு
விருப்பமில்லை,” என்று சொல்லித்
தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அவளது கணவர்.
சேகருக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது.
டாக்டரிடம் விபரத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் சேகர்.
இதற்காக வருந்த வேண்டாம் என்றும் குறித்த நேரத்தில் அறுவை நடக்கும் என்றும்
டாக்டர் சொன்ன போது வியப்படைந்தான் சேகர்.
”எப்படி டாக்டர்? சிறுநீரகம் யார் கொடுக்கிறாங்க?”
”ஒங்க மனைவி தான்
சேகர். இதே மாதிரி ஏதாவது நடந்துச்சுன்னா
ஒங்க ஆப்ரேஷன் தடைபடக் கூடாதுன்னு தன்னோட சிறுநீரகத்தையும் சோதிச்சுப் பார்க்கச்
சொல்லி முன்னாடியே எங்கிட்ட கேட்டுக்கிட்டாங்க.
ஒங்களுக்குத் தெரியாம எல்லாச் சோதனையும் செஞ்சு பார்த்ததிலே அவங்களோட
நல்லாப் பொருந்துது. நீங்களும் அவங்களும்
ஒரே ரத்த குரூப்பா இருக்கிறதினாலே ரொம்ப நல்லதாப் போச்சு.
புருஷனோட உயிருக்கு ஆபத்துன்னா, கிட்னி தானமாக் கொடுக்க முன் வர்ற முதல் ஆளு
மனைவி தான் சேகர். ஆனா மனைவிக்குக் கொடுக்கிறேன்னு முன்வர்ற கணவரோட எண்ணிக்கை
ரொம்ப ரொம்ப சொற்பம். அம்மா, மனைவி இந்த
ரெண்டு பேரைத் தவிர உலகத்துல வேற எந்த உறவும் தன்னோட உயிரைப் பணயம் வைக்க லேசில
ஒத்துக்கமாட்டாங்க.”
”நீங்க சொல்றதை நான் ஏத்துக்க
மாட்டேன் டாக்டர். எனக்குச் சிறுநீரகம்
தேவைன்னு சொன்னவுடனே நான் கொடுக்கிறேன்னு முதல்
ஆளா வந்தவன் என் தம்பி தான். ஆனா அவனோடது
எனக்கு ஒத்துக்காம போனது என்னோட துரதிர்ஷ்டம்.”
”ஹா ஹா ஹா..”
”ஏன் டாக்டர் சிரிக்கிறீங்க?
நான் என்ன ஜோக்கா சொன்னேன்?”
”ஒங்கத் தம்பி நல்ல நடிகர். சினிமாவுல நடிச்சார்னா ஆஸ்கார் அவார்டு கண்டிப்பா
அவருக்குத்தான்.”
”என்ன டாக்டர்
சொல்றீங்க? நடிப்பா? எனக்கொன்னும்
புரியலியே?”
”அவரோடது ஒங்களுக்கு ரொம்பவே
நல்லாப் பொருந்திச்சி சேகர்.. வெளியில நன்றிக்கடன்,
அது இதுன்னு உணர்ச்சி பூர்வமா வசனம் பேசிட்டு,
யாருக்கும் தெரியாம என் ரூமுக்கு வந்து ”தயவு
செஞ்சு என் கிட்னி அண்ணனுக்குப் பொருந்தலேன்னு சொல்லிடுங்க டாக்டர்,”ன்னு கேட்டு, என் கால்ல விழாத குறையா கெஞ்சினது
எனக்குத் தானே தெரியும்.”
Sunday, 29 July 2012
புது மனைவி
கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
”தேநீர் மிகப் பிரமாதம்,” என்றேன்;.
”அது புரூ காபிப்பா,” என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!
உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,
”சிரமப்பட்டு நான் செஞ்ச
சமையலை
வாயைத் தொறந்து, ரெண்டு வார்த்தை
பாராட்டினா முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை,” என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!
வேறொரு நாள்...
”சமையலில் கை தேர்ந்து
விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை” என்றேன்;
”சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்”என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!
மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் வைத்தாள்,
”ஒங்களுக்குத் தேர்வு
செய்யவே
தெரியலை,” என்ற விமர்சனத்துடன்!
’இங்கிலீஷ் கலர்’(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு!
சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக
வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு
புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு
டிக்கெட் வாங்கி வந்தால்,
”பாழாய்ப்போன இப்படத்துக்கு
வந்ததுக்குக்
கடற்கரைக்காவது போயிருக்கலாம்;
படுமட்டம் ஒங்க ரசனை,”என்றாள்
படம் பார்த்து முடித்த பிறகு!
இவளைத் திருப்திப்படுத்த முடியாது
என்றவுண்மை எனக்கு உறைத்த போது,
வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
”என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி!” என்று
வாய் விட்டுக் கத்தினேன்,
அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!
(தமிழ் மன்றத்தில் எழுதியது)
(தமிழ் மன்றத்தில் எழுதியது)
Wednesday, 18 July 2012
’அதிர்ஷ்டம்’ - ஒரு நிமிடக்கதை
அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகனுக்குத் தங்கையாக நடிக்க வேண்டிய நடிகை வராமல் போகவே, பத்தோடு பதினொன்றாக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த புவனாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
அந்தப் படத்தின் டைரக்டர் மாலன் ஏற்கெனவே ஏழெட்டுப் படங்கள் எடுத்துச் சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கியவர்.
"இந்த டைரக்டர் படத்துல, அதுவும் கதாநாயகனுக்குத் தங்கச்சி வேடம், அதிர்ஷ்டக்காரி தான்டி நீ" என்று சக நடிகைகள் வாழ்த்துத் தெரிவிக்கவே, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் புவனா.
எத்தனையோ நாள் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது, இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளது உள்மனது சொல்லவே, உயிரைக் கொடுத்து நடித்தாள்.
"ம். நல்லா நடிக்கிறியே, இவ்ளோ நல்லா நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்று டைரக்டர் பாராட்டியபோது, வசிஷ்டர் வாயிலிருந்து கிடைத்த பாராட்டு எனப் புளகாங்கிதமடைந்தாள் அவள்.
"இந்தப் படம் வெளிவந்தவுடனே பெரிய ஸ்டார் ஆயிடுவே, எங்களையெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கம்மா"
என்று தோழிகள் கிண்டல் செய்ய, கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலானாள்.
கதாநாயகியாக அவளிடம் கால்ஷீட் கேட்டு, முன்பணம் கொடுக்க அவள் வீட்டு ஹாலில், படத் தயாரிப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போல் அவளுக்கு அடிக்கடி கனவு வரத் துவங்கியது.
படம் வெளியான அன்று தம் தோழிகள் புடை சூழ, தியேட்டருக்குச் சென்று, தான் நடித்த காட்சிகள் எப்போது வரும் என ஆவலோடு காத்திருந்தாள். ஆனால் படம் முடியும் வரை அந்தக் காட்சிகள் வரவேயில்லை.
எடிட்டிங்கில் அவளது அந்தத் தங்கை பாத்திரமே, கத்தரிக்கோலுக்கு இரையாகி உயிரை விட்டிருந்தது.
Sunday, 1 July 2012
உண்ணாவிரதம்- சிறுகதை
மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாய் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு அணையைத் திறக்க
வாய்ப்பில்லை எனத் தமிழக அரசு கையை விரித்து
விட்டது.
நடந்து முடிந்திருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் டெபாசிட்
தொகையை இழந்து மண்ணைக் கவ்வியிருந்த 'அகில உலகத் தமிழர் நலன் காக்கும் கழகம்' என்ற அமைப்பின் தலைவர் மாடசாமி, தம் கட்சியின் செல்வாக்கைப் பெருக்க, காவிரி நதி நீர்ப் பிரச்சினை உதவி
செய்யும் என்ற நம்பிக்கையில் வேளாண் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தார்.
போராட்டத்தின் முதல் கட்டமாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற முடிவுக்கு
வந்தார்.
"கொலஸ்டிரால் எக்கச் சக்கமாக ஏறியிருக்குது.
உடம்பைக் குறைக்கணும்னு டாக்டர் வற்புறுத்திச் சொல்லிக்கிட்டேயிருக்காரு. நீங்க என்னடான்னா இந்த வயசிலேயும் வாயைக் கட்டாம
எதையாவது தின்னுக்கிட்டேயிருக்கீங்க",என்ற மனைவிமார்களின் இடைவிடாத முணுமுணுப்பு தான் அந்த முடிவுக்குக் காரணம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! உண்ணாவிரதம்
இருப்பதால், வேளாண் மக்களின் ஆதரவு கிட்டும்;
அதே சமயம்,
வயிற்றுக்குக் கட்டாய
ஓய்வு கொடுப்பதால், உடம்பு எடையும் கொஞ்சம் குறையும்.
நிறைய செலவு பண்ணி மக்கள் கூட்டத்தைக் கூட்டி, பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்,
தமது ஒரு நாள் உண்ணாவிரதம்
பற்றி அறிவிப்பதற்காக மேடை ஏறினார். கூடியிருந்த
எழுச்சிமிக்க மக்கள் வெள்ளத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, 'ஒரு நாள் உண்ணாவிரதம்'
என்பதற்குப் பதிலாகச்
'சாகும் வரை
உண்ணாவிரதம்' என்று வாய் தவறிச் சொல்லி விட்டார்.
"காவிரி மன்ற உத்தரவுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா விடமிருந்து மத்திய அரசு பெற்றுத்
தரவேண்டும்; இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்ற அவரது அதிரடி அறிவிப்பைக்
கேட்டுக் கூடியிருந்த மக்கள் செய்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அப்போதுதான் தாம் செய்த தவறு, அவருக்குப் புரிந்து என்ன
செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தார்.
"தமிழக விவசாய மக்களின் துயர் துடைக்கத் தம் இன்னுயிரை ஈவதற்கு முன் வந்திருக்கும்
நம் தலைவரின் தியாகம் மகத்தானது," என்றும் 'தியாகச் செம்மல்' என்றும் அடுத்து வந்தவர்கள் அவரை வானளாவப்
புகழ்ந்து பேச, வேறு வழியின்றி சாகும் வரை உண்ணாவிரதம்
இருக்க வேண்டிய தாயிற்று.
இந்த அறிவிப்பைக் கேட்ட மற்றக் கட்சித் தலைவர்கள், ஏதோ நகைச்சுவை துணுக்கைக் கேட்டவர் போல் நகைத்து
விட்டு, 'இது
வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று கிண்டல் செய்தனர்.
துவக்க நாளன்று மூக்குப் பிடிக்கத் தின்று விட்டு, உண்ணாவிரதத்துக்குத் தயாரானார் மாடசாமி. வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டதால், எந்த நேரத்திலும் எதுவும்
நடக்கலாம் என்ற பயத்தில், டாக்டர் குழு ஒன்றை மேடைக்கு அருகில் இருக்கச் செய்தார். அக்குழு அவ்வப்போது அவரது உடல் நிலையைப் பரிசோதித்து
உண்ணாவிரதத்தை எவ்வளவு நாட்கள் நீட்டலாம் என ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தது.
உட்கார்ந்திருக்க முடியாமல் மேடையில் ஒரு படுக்கை தயார் செய்து, படுத்துக் கொண்டார் தலைவர். அவருக்குப் பணிவிடை செய்ய வலப்பக்கத்தில் ஒருவரும்,
இடப்பக்கத்தில் ஒருவரும்,
தலைமாட்டில் ஒருவருமாக
அவரது மனைவிமார்கள் வீற்றிருந்தனர்.
'கிழவனுக்கு ஏதாவது நேருமுன், பாகப்பிரிவினை செய்யாமல் பாக்கியிருக்கும் சொத்துக்களை எழுதி
வாங்கி விடவேண்டும்,' என்ற எண்ணத்தில் ஆளாளுக்குத் தனித்தனியே வக்கீல்களை வரவழைத்திருந்தனர்.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று, இவரது உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.
'எதிர்க்கட்சி சார்புடைய இச்சேனல், இவருடைய உண்ணாவிரதத்தை ஒளிபரப்ப என்ன காரணம்?'
என்று எல்லோரும் முடியைப்
பிய்த்துக் கொள்ளாத குறை.
உண்மையில், சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தவர், இடை நேரத்தில் எதுவும் சாப்பிட்டால் கையுங் களவுமாகப்
பிடிக்கலாம் என்றெண்ணி ஒரு நிமிடம் கூட கண்ணயராமல், பகல், இரவு என 'ஷிப்ட்' முறையில் வேலை செய்தனர், அதன் பணியாளர்கள். எனவே இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ஏதாவது
சாப்பிடலாம் என்ற அவரது நினைப்பிலும் மண் விழுந்தது.
இரண்டாம் நாளிலிருந்து பசி தாங்க முடியாமல் அவதிப்பட்டார் தலைவர். மனிதாபிமான முறையில் மற்றக் கட்சித் தலைவர்கள் யாரேனும்
வந்து சொன்னால், 'அது தான் சாக்கு' என்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம் என ஆவலாகக் காத்திருந்தார். தம் தொண்டர்கள்
மூலம் தலைவர்கள் சிலரை தம்மைப் பார்க்க வரச் சொல்லி தூது அனுப்பினார். ஆனால் இவரது உண்ணாவிரதத்தை யாருமே 'சீரியஸாக' எடுத்துக் கொள்ளாததால்,
இவரைப் பார்க்க யாருமே
வரவில்லை.
மத்திய அரசோ, கர்நாடக அரசோ இவரது உண்ணாவிரதத்தைச் சட்டை செய்யவேயில்லை.
நான்கு நாட்களில் படுத்த படுக்கையாகி விட்டார். பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே, எமனின் எருமை வாகனம் வந்து நிற்பது
போல் தோன்றவே, பயந்து கொண்டு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார்.
"என்னமோ தெரியலடா, கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதுக்கே உங்கப்பா நடுங்கிறாரு," என்று முதல் மனைவி தன் பையனிடம்
சொன்னபோது தான், நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.
கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்த போது, மனைவிமார்கள் மூவரும் ஏதோதோ பத்திரங்களைக் கொண்டு வந்து
கையெழுத்துப் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.
அதற்குப் பயந்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.
மாடசாமியின் அரசியல் வாரிசு யார் என்பதிலும், யார் பெரிய தாதா என்பதிலும் அவரது
பிள்ளைகளிடையே நடந்த யுத்தத்தில், அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு மேல் உண்ணாவிரதத்தை நீட்டித்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று
டாக்டர்கள் சொல்லிவிடவே என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவருக்குத்
தொலைக்காட்சியின் அந்த அறிவிப்பு தேனாக வந்து காதில் பாய்ந்தது.
'தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்துள்ளது. மேலும் சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது"
என்ற வானிலை அறிக்கை தான் அந்த அறிவிப்பு.
"என் கோரிக்கையையேற்று இயற்கை அன்னையே மழை பெய்யச் செய்துவிட்டாள். வறண்டு கிடந்த காவிரியில் தண்ணீர் வந்து விட்டதால், என் உண்ணாவிரதத்தை முடித்துக்
கொள்கிறேன்" என்று மகிழ்ச்சிப் பொங்க அறிவித்தார் மாடசாமி!.
.
(23/11/2009 ல் தமிழ் மன்றத்தில் எழுதியது)
Tuesday, 26 June 2012
Saturday, 16 June 2012
புதைக்கப்படும் உண்மைகள் - சிறுகதை
அருண் பத்திரிக்கையில் எழுதிய அந்தச்செய்தி, சட்டசபை யிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு கலக்குக்
கலக்கியது.
இரண்டு வருடங்களாகப் 'புலன் விசாரணை' என்ற அந்தப் பத்திரிக்கையில் நிருபராகப் பணிபுரிந்தும்,
பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு செய்தியும், அவனுக்குக் கிடைக்க வில்லை
அந்தச் சமயத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று ஒரு காலத்தில்(!) போற்றப்பட்ட
தஞ்சாவூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்தான்
அருண். அதைப் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் சொல்லத்
தயங்கினாலும், பின் வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்
கொண்டனர்.
தேர்தல் நெருங்கும் நேரமாகையால், வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அவல்
கிடைத்து விட்டது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள்
அந்தச் செய்தியை நிமிடத்திற்கொருமுறை கொட்டை எழுத்துக்களில் போட்டு, உலகளவில் பிரபலமான பொருளாதார
நிபுணர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களது கருத்துக்களைக் கேட்டும், உள்ளூர் அளவில் வாக்குவாதம்
நடத்தியும் தமக்குப் பெரிய
அளவில் விளம்பரம் தேடிக் கொண்டன.
'வறுமையின் காரணமாக தன் குழந்தைகளைக் காப்பாற்ற வழியின்றிக் குடியானவன் ஒருவன் தன்
குழந்தை ஒன்றைப் பணத்துக்கு விற்றுவிட்டான்,' என்பதே அந்தச் செய்தி. பட்டினிச்சாவு எப்படி ஒரு நாட்டிற்கு அவமானமோ அதைப்
போலவே குழந்தையை விற்கும் இந்த நிகழ்வும், நாட்டிற்கு உலகளவில் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொடுத்து
விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
"காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அரசு உரிய கவனத்தைச் செலுத்தவில்லை; நடுவர் குழுமம் பரிந்துரைத்ததண்ணீரின் அளவைக் கூட கர்நாடகத்திடமிருந்து பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை;
வழக்கம் போல் வானமும் பொய்த்து விட்டது; 'வான் பொய்ப்பினும், தான் பொய்யா மலைத்தனைய கடல் காவிரி' என்பதெல்லாம் இலக்கியத்தில் படித்த சங்கதியாகிவிட்டது.
அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லுக்கும் உரிய விலையை அரசு நிர்ணயம் செய்யத்
தவறிவிட்டது; தாராளமயமாக்கலின் விளைவுகள் கண்முன்னே தெரியத் துவங்கிவிட்டன; பன்னாட்டு வியாபாரம் காரணமாக
உள்ளூர் குடிசைத் தொழில்கள் நசிந்து விட்டன. வேளாண் மக்களின் பிரச்சினைகளை அரசு புறக்கணித்ததன்
விளைவு தான் இது; கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர அரசு
தவறிவிட்டது.
இத்தகைய காரணங்களால் தம் குழந்தைகளை விற்றுச் சாப்பிடும் நிலைக்குக் குடியான மக்கள்
தள்ளப்பட்டு விட்டனர். எனவே இதற்கான பொறுப்பை
ஏற்று தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும். தமிழக அரசின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும்
மத்திய அரசும் பதவி விலக வேண்டும்," என்று சொல்லி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்..
இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி உடனே தீர்க்கும் படியும், இல்லாவிடில் மத்திய அரசுக்குத்
தேர்தல் சமயத்தில் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படும் எனவும் பிரதம மந்திரி முதன் மந்திரிக்குத்
தம் அலைபேசி மூலம் தெரிவித்தார்
ஏற்கெனவே ஒரு முறை ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்ததையும், அதைச் சமயோசிதமாக காலரா போன்ற
புது வகை தொற்று நோய்(!) ஒன்றினால் இறந்ததாக அந்த மாநில அரசு செய்தியை மாற்றி வெளியிட்டு
நாட்டின் மானத்தைக் காப்பாற்றியதையும், தம் பேச்சினிடையே நினைவுகூர்ந்து அம் மாநில முதல்வருக்குப்
புகழாரம் சூட்டினார் பிரதமர்.
"ஒரிசா மாநில முதல்வருக்கு நானும் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல; இந்தப் பிரச்சினையில் உங்களுக்குத் தலைகுனிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு," என்று தம் பங்குக்கு உறுதி
கூறினார் தமிழக முதன்மந்திரி.
"இதுபற்றி நேரில் விசாரித்து உண்மையைச் சட்டசபையில் வெளியிடும் வரை எதிர்க்கட்சிகள்
அமைதி காக்க வேண்டும்," என்ற முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
மந்திரிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர் கொண்ட
குழுவொன்றைத் தாம் அமைத்திருப்பதாகவும், அந்தக் குழுவை அக்கிராமத்துக்கு நேரில் சென்று உண்மையை
விசாரித்து வருமாறு பணித்திருப்பதாயும் அவர் சொன்னதை ஏற்றுப் போராட்டத்தைத் தற்காலிகமாக
நிறுத்தி வைப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
அச்செய்தியைப் பற்றி விசாரிக்க முதல்வர் அனுப்பிய குழுவில், அதனை வெளியிட்ட பத்திரிக்கையின்
சார்பில் அருணும் இருந்தான்.
அன்று காலை வரிசை வரிசையாக கார்கள் அணிவகுத்து அக்குக்கிராமத்தை நோக்கிப் படையெடுத்தன.
புழுதியைக் கிளப்பிக் கொண்டும், ஆம்புலன்ஸ் சைரன் அடித்துக்கொண்டும் வந்த வாகனங்களைப் பார்த்து
அக்கிராம மக்கள் பயந்து விட்டனர். தேர்தல்
சமயத்தில் மட்டுமே வாக்கு கேட்க வரும் கார்கள், இப்போது வருவதன் காரணம் புரியாது மக்கள்
குழம்பினர்.
நாலாப்பக்கமும் சாக்கடைகள், அதில் புரண்டு விளையாடும் பன்றிகள், பக்கத்தில் குப்பைமேடு, குடலைப் புரட்டியெடுக்கும்
நாற்றம், குண்டுங்
குழியுமான மண் சாலைகள்.. ஒரு கட்டத்துக்கு மேல் கார் போக சாலை வசதியின்றி, எல்லோரும்
இறங்கி நடக்க வேண்டியதாயிற்று.
சாக்கடை நீர் தூய வெண்ணிற வேட்டியில் பட்டுவிடுமோ எனப் பயந்தவர்கள், அதனை மடித்து
மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு, சாக்கடையைத் தாண்டித் தாண்டி குதித்தவாறு பயணம் மேற்கொண்டனர்.
பார்ப்பவர்களுக்கு நீளம் தாண்டுதல் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார் களோ என நினைக்கத்
தக்கவாறு இருந்தது அந்தக் காட்சி.
ஏற்கெனவே குழந்தை விற்கப்பட்ட சம்பவம் குறித்து, அக்கிராம மக்கள் அறிந்திருந்தமையால்,
அக்குடிசையைக் கண்டுபிடிப்பதில் மந்திரி குழுவினர்க்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.
"அவங்க எல்லோரும் ஒங்க வூட்டைத் தேடித்தான் வராங்கக்கா" என்று பக்கத்துத் தெரு
மாரியம்மா அவசரமாக ஓடி வந்து சொன்னதிலிருந்து அஞ்சலைக்குப் படபடப்பு அதிகரித்தது. ஏற்கெனவே
நோயால் அவதிப் பட்டுக்கொண்டிருந்த அவள் கணவன் முனியாண்டிக்கோ, பயம் காரணமாக மூச்சு விடுவதில்
சிரமம் ஏற்பட்டது.
ஒருவழியாக படாத கஷ்டங்கள் பட்டுக் குடிசையை அடைந்த மந்திரி குழுவினர் வந்ததும் வராததுமாக அஞ்சலையைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்:-
"நீ தான் அந்தக் குழந்தையைப் பெத்தவளா?
நீயெல்லாம் ஒரு
அம்மாவா? குழந்தைக்குச் சாப்பாடு போட முடியாத
நீ, ஏன் குழந்தை பெத்துக்கிட்டே? பெறதுக்கு முன்னால அந்த அறிவு இருந்திருக்கணும். ஏன் உன் புருஷன் குத்துக்கல்லாட்டம் தானே இருக்கான்? அவன் போய் உழைச்சுச் சம்பாதிக்கிறதுக்கென்ன?
எதுக்கு வித்தே? குழந்தையை வித்தாவது அப்படி உயிர் வாழணுமா என்ன? அப்படியென்ன உயிர் மேல ஒனக்கு ஆசை?"
இந்தக் கேள்விகளில் இருந்த நக்கல் புரிந்து சிலர் ஏளனமாகச் சிரித்தனர்.
"கும்பிடறேனுங்க சாமி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க
சாமி. நான் மட்டும் அன்னிக்குக் குழந்தையை
விக்காம இருந்திருந்தா, என் புருஷன் இன்னிக்கு உயிரோடயே இருந்திருக்க மாட்டாரு. கொளுத்து வேலை பாத்துக்கிட்டிருந்த அவரு ஒரு நாளு
நெஞ்சு வலி அதிகமாகி மயக்கம் போட்டுக் கீழே வுழுந்துட்டாருங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில
மாசக்கணக்கா வைச்சுப் பாத்தேனுங்க. அங்க அவருக்கு ஒரு வைத்தியமும் பண்ணலேங்க..
டாக்டரய்யாவைக் கேட்டேன். ”ஏற்கெனவே இவருக்கு முன்னாடி வந்தவங்க, நூத்துக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் முடிஞ்ச
பொறகு தான் இவருக்கு ஆப்ரேஷன் பண்ணுவோம். சீக்கிரம் பண்ணனும்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குப்
போ,'ன்னு சொல்லி
சத்தம் போட்டாருங்க பெரிய டாக்டர்.
மாசக்கணக்கா இவரு வேலைக்குப் போகாததால வருமானம் சுத்தமா நின்னு போச்சு. நான் தான் நடவு வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன். தண்ணியில்லாததால நிலத்தையெல்லாம் வித்துட்டுக் கிராமத்து
ஜனங்க டவுனுக்குப் பொழைப்புத் தேடி போக ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எனக்கு நடவு வேலையும்
தொடர்ந்து கிடைக்கலேங்கய்யா.
தனியார் ஆஸ்பத்திரின்னா, ஆயிரக்கணக்கா செலவாகுமே பணத்துக்கு என்னா பண்றதுன்னு யோசிச்சேன். என்னோட ஒன்னு விட்ட அண்ணன் வேலு கொஞ்சம் வசதியாயிருந்தாரு. அவருக்கிட்ட கடன் வாங்கித் தான் இவருக்கு வைத்தியம்
பண்ணினேனுங்க. அவருக்கிட்ட வாங்கின கடனை நாம எப்படி அடைக்கப் போறோம்னு கவலைப்பட்டுக்
கிட்டிருந்தப்பத் தான், ஒருநாளு அண்ணன் அந்த ரோசனையைச் சொன்னாரு.
"உனக்கு ஏற்கெனவே ரெண்டு பசங்க இருக்கானுங்க.
மூணாவதா பொட்டைப்புள்ளையை வேற பெத்து வைச்சிருக்கே. அதை வளர்த்து ஆளாக்கிப்
பவுன் போட்டு வரதட்சிணை கொடுத்து எப்படிக் கல்யாணம் பன்ணுவே? பசங்களுக்கு வயிறாறக் கஞ்சி ஊத்தவே உனக்கு வருமானம் இல்லே. மச்சானுக்கும் உடம்பு சொகமில்லே. பேசாம அந்தக் குழந்தையை என்கிட்ட
கொடுத்திடு. எனக்கும் கொழந்தையில்லே. என்
பொண்ணாட்டம் அருமை பெருமையா அதை வளர்ப்பேன்.
அதுக்குப் பதிலா நீ கொடுக்க வேண்டிய பணத்தை நான் தள்ளுபடி செஞ்சுடறேன்"
னு சொன்னாரு அவரு.
நானும் எங்க வூட்டுக்காரரும் ரோசிச்சுப் பாத்தப்ப, இது சரியான ரோசனையாப் பட்டுது, அந்தக் குழந்தை என்கிட்ட இருக்கிறதை விட அவருக்கிட்ட இருந்தா
நல்லா வளரும்னு தோணிச் சிங்கய்யா. நானும் கடன்லேந்து
வெளியே வந்துடுவேன். அதுக்காகத் தான் அவருக்கிட்ட
என் கொழந்தையைக் கொடுத்தேனுங்க. தப்பாயிருந்தா இந்தச் சிறுக்கியை மன்னிச்சிடுங்கய்யா. எனக்கு வேற வழி தெரியலீங்க" சொல்லிக் கொண்டே அங்கு நின்றிருந்தவர்கள் முன்பாக
நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து கதறினாள் அஞ்சலை.
"என்ன தான் கஷ்டம் இருந்தாலும், அதுக்காகப் பெத்த குழந்தையை வித்தது பெரிய தப்பு. நீ பண்ணுனகாரியத்தால எங்க அரசாங்கத்துக்கு எவ்ளோ கெட்ட பேர் தெரியுமா? சரி சரி. நடந்தது நடந்துட்டுது.
குழந்தையைத் திரும்பக் கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன். மறுபடி யார்கிட்டயாவது வித்தேன்னு தெரிஞ்சுதுன்னா, ஒன் புருஷனைப் புடிச்சு வெளியிலே வர முடியாதபடி உள்ளாற போடச்
சொல்லிடுவேன்," என்று மிரட்டினார் மந்திரி.
அவர் சொன்னதைக் கேட்ட அஞ்சலைக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது.
"அந்த ஆள் யாருன்னு விசாரிச்சு குழந்தையை வாங்கினதுக்குத் தண்டனையா 15 நாள் புடிச்சி உள்ளாற வை. அந்தக் குழந்தையைத் திருப்பி இந்தம்மாக்கிட்ட கொடுக்கிறதுக்கு
உடனே ஏற்பாடு பண்ணு,"
பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு மந்திரி கிளம்ப,
பரிவாரங்களும் அவரைப்
பின் தொடர்ந்தன.
மறுநாள்...
"அய்யா! நான் தப்பு ஏதும் பண்ணலைய்யா. என்னை விட்டுடுங்கய்யா. அந்தக் கொழந்தையை என் பெத்த குழந்தையா நினைச்சி
வளர்க்கிறேங்க. அது மேல என் உசிரையே வைச்சிருக்கேனுங்க. அதை என்கிட்டே யிருந்து பிரிச்சிடாதீங்கய்யா" அந்தச் சிறைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தான்
வேலு.
அஞ்சலை கொடுத்த விளக்கம் அருணைத் தவிர வேறு யாரையும் பாதித்ததாகத் தெரியவில்லை.
வளர்க்க வழியின்றித் தான் அந்தத்தாய் குழந்தையை விற்கும் நிலைக்குப் போயிருக்கிறாள். இப்போது திரும்பவும் குழந்தையை அவளிடமே கொடுத்து
அவளை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அக்குடும்பத்துக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டாமா
என்பன போன்ற எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன.
இந்தச் செய்தியை அவசரப்பட்டு வெளியிட்டு அக்குடும்பத்துக்குத் துன்பத்தை மேலும்
அதிகரித்து விட்டோம் என்ற குற்றவுணர்வு அவனைத் தூங்க விடாமல் செய்தது.
அடுத்த வாரம், குழந்தை விற்கப்படவில்லையென்றும், வேலு என்பவன் பெற்றோரிடமிருந்து திருட்டுத் தனமாகக் கடத்திப்
போய் விட்டான் என்றும் அரசு நேரிடையாக களத்தில் இறங்கிக் குழந்தையை அவனிடமிருந்து மீட்டுப்
பெற்றோரிடமே திரும்பவும் ஒப்படைத்துப் பிரச்சினையைத் தீர்த்து விட்டது என்றும் சட்டசபையில்
பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தம் அறிக்கையை வாசித்தார் முதன் மந்திரி.
இச்செய்தி அருணுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதல்வரின் அறிக்கையை மறுத்து அஞ்சலை சொன்ன உண்மைக்
கதையை வெளியிட வேண்டும் என்றான் பத்திரிக்கை ஆசிரியரிடம்.
"இதைக் கண்டுக்காதே. அப்படியே இருந்துட்டுப்
போகட்டும், இதோட அந்தக் கொழந்தை விஷயத்தை மறந்திடு" என்றார் அவர் கண்டிப்புடன்.
தன்னுடன் பயணம் செய்த எதிர்க்கட்சி உறுப்பினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
"என்னய்யா? கடைசியில இப்படிச் சொல்லிட்டாங்க, ஆசிரியரை எதிர்த்துக்கிட்டு என்னால உண்மையை வெளியிட முடியலே. உங்களுக்குத் தான் உண்மை தெரியும்ல. நீங்க மறுப்பு அறிக்கை வெளியிடறதுக்கென்ன?"
என்னப்பா? புரியாத ஆளாயிருக்கியே. நம்மளோட எல்லா
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தான் வந்தாங்க.
எல்லாரும் சட்டசபையில அறிக்கை வாசிக்கிறப்ப அமைதியா இருக்கிறத வைச்சே உன்னால்
விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியலேன்னா, நீயெல்லாம் பத்திரிக்கை ஆபீசில இருந்து எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோ," என்று நக்கலடித்தார் அவர்.
அவனால் இச்செய்தியை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. மேலும் வேறு எங்காவது வேலை தேடிக்கொள்ளுமாறு மறுநாளே
பத்திரிக்கை ஆசிரியர் அவனிடம் சொல்ல, வேலையை விட்டு அவனது சொந்த ஊருக்கு வந்து, மனதுக்குப் பிடித்த ஆசிரியர் பணியை மேற்கொண்டு ஓராண்டிற்கு
மேலாகிவிட்டது.
அஞ்சலையின் குடும்பம் தற்போது எத்தகைய நிலையில் இருக்கிறது. அந்தக் குழந்தை எப்படியிருக்கிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, அக்குழந்தைக்கு ஏதாவது உதவி
செய்யும் நோக்கத்தோடு அக்கிராமத்தை நோக்கித் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டான்
அருண்.
ஒன்றரை ஆண்டுகளில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது அக்கிராமம். எனவே யாரிடமும் விசாரிக்காமல் எளிதாக அக்குடிசையைக்
கண்டுபிடித்துவிட்டான்.
"அம்மா! அம்மா!"
ஐந்து நிமிடங்கள் கூப்பிட்டும் உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. வாசல் படல் ஒருக்களித்துச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. குடிசையின் மேலிருந்த கீற்று, பல ஆண்டுகளுக்கு முன் வேயப்பட்டிருக்க வேண்டும் என்பது,
வெயிலிலும் மழையிலும்
அவை மடித்துப் போய் ஆங்காங்கே உளுத்துக் கொட்டியிருப்பதிலிருந்து அனுமானிக்க முடிந்தது.
ஒருக்களித்திருந்த படல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான். மூலையில் ஓர் உருவம் முடங்கிக் கிடப்பது தெரிந்தது. அது யார் அஞ்சலையா? அல்லது அவளது கணவனா?
மீண்டும் உரத்துக் கூப்பிட்டான். உருவம்
கொஞ்சம் அசைந்து கொடுத்தது.
"ஆரு? கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல்
இருந்தது அந்தக் குரல்.
"நான் தான்."
"நாந்தான்னா ஆரு"
இருமிக் கொண்டே மெல்ல எழுந்து வந்தது அவ்வுருவம். அஞ்சலை தான்.
கண்கள் குழி விழுந்து எலும்புக் கூடாயிருந்தாள்.
‘என்னை அடையாளம் தெரியலீங்களா?
உங்கக் கொழந்தை விஷயமா,
ஒங்க வீட்டுக்கு வந்து
விசாரிச்சி... ‘
அருண் முடிக்கவில்லை.
"வாங்கய்யா. இப்ப எதுக்கு வந்தீங்க?
மறுபடியும் ஏதாவது எழுதி
என்னை உள்ளாறப் புடிச்சிப் போடவா? குழந்தையை வித்தேன்னு தெரிஞ்சவுடனே, கார் மேலே கார் போட்டுக்கிட்டு வந்து
ஆளாளுக்கு என்னையும் என் வூட்டுக்காரரையும் மிரட்டினீங்க.
அந்தக் கொழந்தையையும் சேர்த்து வைச்சிக்கிட்டுச் சோறு, தண்ணியில்லாம பரிதவிச்சேனே,
அப்ப எங்க போனீங்க
எல்லாரும்? யாருக்கு நாங்க என்னா கெடுதல் செஞ்சோம்? ஏழையாப் பொறந்தது எங்கக் குத்தமா? ஏன் எங்களை வாழவும் வுடாம, சாகவும் வுடாம இந்தப் பாடு
படுத்தறீங்க?"
கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக அவன் நெஞ்சில் விழுந்தன. இந்தக் குடும்பத்தின் இன்றைய நிலைமைக்குத் தெரிந்தோ
தெரியாமலோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் அவனை வதைத்தது.
"அம்மா, நான் இப்ப ஒரு பத்திரிக்கைக்காரனா வரலை.
ஒங்க நிலைமையப் பத்தி எழுதினப்போ, அதனால ஒங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்னு
நினைச்சித் தான் எழுதினேன். இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, ஒங்கக் கொழந்தையைப் பத்தி
எழுதியிருக்கவே மாட்டேன்.
சரி. அதை விடுங்க. ஒங்க வூட்டுக்காரர்
எங்க? அந்தக் கொழந்தை எப்படி இருக்குது? அத வளர்க்கிறதுக்கு நான்
ஏதாவது உதவி செய்யலாம்கிற நல்ல எண்ணத்தோடத் தான் இப்ப வந்திருக்கேன். என்னை நம்புங்க"
கனிவான வார்த்தைகள் அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், தொண்டையைக் கனைத்துக் கொண்டு
பேசத் துவங்கினாள்:-
"என் வூட்டுக்காரர் வேலைக்குப் போயிருக்காரு.
அளவுக்கு மீறி உழைச்சதிலே எனக்குக் காசநோய் வந்திடுச்சி. இருமல் கொட்டிக்
கொலைக்குது. அதனால யார் வூட்டுக்கும் போயி
பத்துப் பாத்திரம் கூட என்னாலத் தேய்க்க முடியலே. பசங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா
படிப்பு வரலை. 'மாடு மேய்க்கிற பயலுங்க, ஏன் இங்க வந்து எங்க உயிரை
வாங்குறீங்க,'ன்னு வாத்தியார் ஒரு நாள் பிரம்பால நல்லா அடிச்சிட்டாராம். மறுநாள் இஸ்கூலுக்குப்
போகவே மாட்டோம்னு புடிவாதம் புடிச்சானுங்க ரெண்டு பயல்களும். அங்கப் போனா மத்தியானம் சோறு கிடைக்குமேன்னு நான் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சேன்.
அன்னிக்குப் போனவனுங்க தான். எங்க போனானுங்கன்னே
தெரியலே. பக்கத்து ஊரில ஒரு சினிமாக் கொட்டாயில
பெரியவனைப் பார்த்ததா ஒருத்தர் சொன்னாரு. என்னால அங்கப் போய்த் தேடிப் பார்க்கக் கூட
முடியலே. சரி. எங்கயாவது போயி நல்லா இருந்தாச்
சரின்னு மனசைத் தேத்திக்கிட்டேன்"
"சரி. அந்தக் கொழந்தை? அது எப்படி இருக்கு இப்போ?"
"அதுவா? வேலு அண்ணன்கிட்டேயிர்ந்து அதைப் புடிவாதமாப்
பிரிச்சு என்கிட்ட கொண்டு வந்து போலீசுகாரங்க கொடுத்தாங்க. அங்கேயிருந்திருந்தா என் புள்ளை நல்லாயிருந்திருக்கும். கொழு கொழுன்னு வந்த புள்ளைக்குக் கால் வயித்துக்குக்
கூட என்னால கஞ்சி ஊத்த முடியலே. கொழந்தை எலும்பு
தோலுமா
ஆயி, கண்ணுல
உயிரைத் தேக்கி வைச்சிக்கிட்டு நடமாடிக்கிட்டிருந்தது. அதுக்கப்புறம்....
அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
”அதுக்கப்புறம்...?
அவசரமாகக் கேட்டான்.
"என்கிட்ட வந்த அஞ்சாம் மாசமே மஞ்சக்காமாலை வந்து அது செத்துப்போச்சு. யாரைக் குத்தம் சொல்லி என்னா பண்றது? விதி
முடிஞ்சிடுச்சி. அதுக்கு ஆயுசு அம்புட்டுதான்
தம்பி," என்றாள் அஞ்சலை விரக்தியுடன்,
எங்கோ தொலைதூரத்தை
வெறித்தபடி.
"உண்மையாலுமே மஞ்சக்காமாலை வந்து தான் செத்துச்சா? இல்ல......."
"ஏதேது. நீங்க கேட்கறதாப் பார்த்தா மறுபடியும் துப்பறிஞ்சு பத்திரிக்கையிலே எழுதப்
போறீங்களோன்னு பயமாயிருக்கு".
"சே! சே! என்னை நம்பினாச் சொல்லுங்கம்மா.
இல்லாட்டி வேணாம்".
"ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி? ஒங்களை நான் நம்பறேன். திங்கறதுக்குச் சோறு, தண்ணியில்லாம கொழந்தை துரும்பா இளைச்சுக்கிட்டே வந்து ஒரு நாள் செத்துப்போச்சி. இறந்த சேதி கேள்விப்பட்டவுடனே ரெண்டு போலிசுக்காரங்க
வந்தாங்க. என் மவளை வாழ விடாம, இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேன்னு
என் மாரிலேயேயும் தலையிலேயும் அடிச்சிக்கிட்டு அழுதேன்.
என்னைத் தனியா அழைச்சிட்டுப் போயி ஒம்மக பசி பட்டினியால இறந்ததுன்னு யாருக்கிட்டேயும்
மூச்சுவிடக் கூடாது. யாராவது கேட்டா,
மஞ்சக்காமாலை வந்து செத்துப் போச்சுன்னு சொல்லணும்னு
என்னை மிரட்டிட்டுப் போனாங்க. அதனால எல்லார்க்கிட்டேயும் இப்பிடித்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். தயவு செஞ்சு யார்க்கிட்டேயும்
இதப்பத்திச் சொல்லிடாதீங்க. ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும்."
கடுமையான இருமலுக்கிடையே மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்து
விட்டு, அவனுக்கு மட்டும் கேட்கும்
குரலில் சொன்னாள் அஞ்சலை:-
”என் கொழந்தையைக் குழியில போடும் போதே,
அது எப்பிடிச் செத்துச்சிங்கிற உண்மையையும் சேர்த்துப் போட்டுப் புதைச்சிட்டேன்
தம்பி”.
Subscribe to:
Posts (Atom)