திரு. கோபு சார்
நடத்திய விமர்சனப்போட்டி நிறைவுவிழாவின் ஆறாம் நாளான நேற்று, போட்டியில் வெற்றிபெற்றோர் பற்றிய
புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் திருமதி கீதா மதிவாணன் 32 பரிசுகள் பெற்று முதலிடத்திலும், திருமதி இராஜேஸ்வரி
மேடம் 28 பரிசுகள் பெற்று இரண்டாம் இடத்திலும்
உள்ளனர். இருவருக்கும் என் பாராட்டுக்கள்!
நல்வரவு
வணக்கம் !
Friday, 7 November 2014
Wednesday, 5 November 2014
மறக்க மனம் கூடுதில்லையே - சிறுகதை விமர்சனம் - 4
திரு கோபு சார்
அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவில் நான்காவதாக ஸ்ரீராஜராஜேஸ்வரி
விருது ஏற்படுத்தப்பட்டு, மிக அதிகளவில் ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைத்த நால்வருக்குப்
பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்பரிசு வென்ற
சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்!
மறக்க மனம் கூடுதில்லையே
– (ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்)
கதைக்கான இணைப்பு:-
Monday, 3 November 2014
அஞ்சலை – சிறுகதை விமர்சனம் - 3
வை.கோபு சாரின்
விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
Sunday, 2 November 2014
உடம்பெல்லாம் உப்புச்சீடை – சிறுகதை விமர்சனம் - 2
திரு வை.கோபாலகிருஷ்ணன்
அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம்
நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:-
Saturday, 1 November 2014
'காதலாவது கத்திரிக்காயாவது' - சிறுகதை விமர்சனம் - 1
திரு வை.கோபு சார்
அவர்கள் பத்து மாதங்களாக வெற்றிகரமாக நடத்திய விமர்சனப்போட்டி முடிந்து இப்போது நிறைவு
விழா துவங்கியிருக்கிறது. விழாவின் முதல் கட்டமாக,
ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-
இப்பட்டியலில்
என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
Tuesday, 7 October 2014
சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
வலையுலகில் முதன் முறையாக விமர்சனப் போட்டியை ஜனவரி
2014 துவங்கி பத்து மாதங்கள்(!!!!) சிறிது கூடத் தொய்வின்றி வெற்றிகரமாக நடத்தி
வரும் (பதிவர்களால் வை.கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும்) திரு.வை.கோபாலகிருஷ்ணன்
அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
இப்போட்டியின் 38 வது கதையான ‘மலரே….குறிஞ்சி மலரே!’ என்ற
கதைக்கு விமர்சனம் எழுதியனுப்பக் கடைசி நாள்:- 09/10/2014. இதனுடன்
சேர்த்து இன்னும் மூன்று கதைகளே களத்தில் உள்ளன. இவ்வரிய வாய்ப்பைப்
பயன்படுத்தித் தங்களது விமர்சனத்திறமையைச் சோதித்துக் கொள்ள விரும்புவோர்க்கான
இணைப்பு:-
திட்டமிடல், குறித்த காலத்தில்
செயல்படுதல், காரியத்தில் சோர்வின்றித் தொடர்ந்து ஈடுபடுதல், குன்றாத ஆர்வம்,
விடாமுயற்சி போன்ற தலை சிறந்த பண்புகளை வை.கோபு சார் அவர்களிடத்தில் தான் கற்றுக்
கொள்ள வேண்டும்.
கதையை வெளியிட்ட மாத்திரத்தில்
அனைவருக்கும் அது பற்றிய தகவல்களை அளித்தல், திரும்பத் திரும்ப நினைவூட்டல்,
விமர்சனத்தை நடுவருக்கு நகல் எடுத்து அனுப்புதல், பரிசு விபரங்களைக் குறித்த
நேரத்தில் வெளியிடுதல், பரிசு தொகையைச் சுடச்சுட விநியோகித்தல் என இந்தப் பத்து
மாதங்களாகத் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திருக்கிறார். கரும்புத்
தின்னக் கூலியாக தொகை+ போனஸ்+ ஹாட் டிரிக் எனப் பரிசும் கொடுத்தும்
ஊக்குவிக்கிறார்.
என்னால் ஒரு சில போட்டிகளில் மட்டுமே
கலந்து கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தம் தான். ஆனால்
விமர்சனம் எழுதுவது எப்படி என்று இந்தப் போட்டியின் மூலமாகவே நான் தெரிந்து
கொண்டேன். பரிசு பெறுபவர்களின் விமர்சனங்களை வாசிப்பது மூலமாகவும், அவ்வப்போது
நடுவரும் வை.கோபு சார் அவர்களும் கொடுத்த குறிப்புகள் மூலமாகவும் ஒரு சிறந்த
விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இப்போட்டியில் நடுவராயிருந்து
சிறப்பான விமர்சனங்களைப் பரிசுக்குரியவையாய்த் தேர்வு செய்து கொடுத்தவர் திரு
ஜீ.வி. அவர்கள்.
தமிழில் விமர்சனக் கலையை வளர்த்த
சான்றோர்களில் வை.கோபு சார் அவர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு. சிறந்த
விமர்சன வித்தகர்களையும், சக்ரவர்த்திகளையும் உருவாக்கியிருக்கிறார். வெட்டி
அரட்டையைத் தவிர்த்து இணையத்தை நல்லதொரு காரியத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.
வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும்
அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம்
முழுவதுமாக நிறைவேறியிருந்திருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.
மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்! தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன் மாதிரி! எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!
நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும்
பெற்று இவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!
Friday, 26 September 2014
என் பார்வையில் கண்ணதாசன்’ –கட்டுரை
(கவியரசு கண்ணதாசன்
அவர்களின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கமும்
வல்லமையும் இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டிக்காக 24/05/2014 ல் எழுதியது)
கவிஞர், திரைப்படப்பாடலாசிரியர்,
அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன்
என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.
சிறுவயதில் எனக்கு
மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.
“உச்சி வெயில்
சூரியனை மேகம் மூடுது – என்
உள்ளம் எனும் சூரியனைக்
கோபம் மூடுது
காற்று வந்தால்
மறுபடியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து
விட்டால் கோபம் மாறி நேசமாகுது”
என்று தகிக்கும்
உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே
என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.
ஒருவித லயிப்புடன்
இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது
வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின்
பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதி யாண்டு வரை வேறு
ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின்
பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.
கல்லூரியில் சேரத்
திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று.
கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல்
நாள், ஒருத்தி என்னைப் பார்த்து
ஏய் “குழந்தையும்
தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.
அப்போது தான் லேசாக
அவள் முகம் நினைவுக்கு வந்தது.
அவள் என் ஐந்தாம்
வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர்,
கவிஞர் கண்ணதாசன்!
ஒவ்வொருவரின் வாழ்விலும்
மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும்
என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’
அன்றிலிருந்து
இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?
“பசுமை நிறைந்த
நினைவுகளே
பாடிப் பறந்த பறவைகளே
பழகிக் கழித்த
தோழர்களே
பறந்து செல்கின்றோம்,”
என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.
அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து
முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.
“குரங்குகள் போல,
மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
குயில்களைப் போலே,
இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல், செலவுகள்
செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம்,
அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே.”
என்று பாடுவதற்குள்ளாகவே,
பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி
முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.
இப்பாடலைக் கேட்ட
எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்
கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!
ஏற்கெனவே இதே வரிகளைப்
பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில்
முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக்
கொண்ட பாடல்!
கல்லூரியில் காலடி
வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின்
வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது.
தொலைக்காட்சியில்
இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே
வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில்,
முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்
இது!
என் கல்லூரி வாழ்வின்
முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும்
உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!
பள்ளி நாட்களில்
தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும்
செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா,
நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.
ஒருநாள் தமிழலக்கியத்தை
ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது
பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அற்றைத் திங்கள்
அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக
வைத்து, "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.
தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற
பாடல் பற்றிப் பேச்சு வந்தது.
அதுவரை அத்திக்காய்
என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு
வியப்புத் தாங்கவில்லை.
ஆர்வக்கோளாறு அதிகமாகி
“உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர்
சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது
காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று
என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும்
என்னை நாணச் செய்கின்றது.
பள்ளிப்பருவத்தில்,
நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது.
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல்
சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள்
பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண்
பெற்றிருந்திருப்போம்!
அக்காலத்தில் இரவு
பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில்
திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில்
பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே
அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும். “தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே”
“உள்ளத்தின் கதவுகள்
கண்களடா –
இங்கே உறவுக்குக்
காரணம் பெண்களடா,”
போன்ற பாடல்களைக்
கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த
நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.
கவலைகளால் மனம்
சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
“ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது,”
“உலகம் பிறந்தது
எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
மலர்கள் மலர்ந்தது
எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக”
“அதோ அந்தப் பறவை
போல வாழ வேண்டும்,
இதோ இந்த அலைகள்
போல ஆட வேண்டும்”
“வாழ நினைத்தால்
வாழலாம்
வழியா இல்லை பூமியில்?
ஆழக்கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்திவா”
போன்ற பாடல்களைக்
கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.
நெருங்கிய உறவுகளை
இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
“போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?”
என்ற
பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.
“என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே”
நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம்
உறைத்தது!
முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த
காலத்தில்,
“பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்,”
என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன! .
“உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
உருவத்தை நான் என்று காண்பேன்?,”
என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும்
அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப்
புகழ?
“அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்,”
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்”
“கருணை பொங்கும் உள்ளம்- அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றான்
கடவுளைத் தேடி அலைகின்றான்,”
போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில்
பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள்
கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு
என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த
நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது
தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!
‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம்,
தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!
(கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் திரு
காவிரிமைந்தன் அவர்கள் எழுதிய பின்னூட்டம் கீழே):-
அன்புடை ஞா.கலையரசி அவர்களுக்கு..
வல்லமை வாயிலாக கேட்டிருந்தபடி தாங்கள் அனுப்பிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை பற்றிய பின்னூட்டமிது. பல்வேறு பணிகளுக்கிடையே இப்பணி காலதாமதமானது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
எண்ணியவற்றைமட்டும் எடுத்தியம்பாமல் இதயம் வழியவழிய வைத்திருந்ததை ஏட்டில்பதித்திருந்தீர்கள்! குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல் உச்சிவெயில் சூரியனை மேகம் மூடுது.. நம் உள்ளமெனும் சூரியனைக் கோபம் மூடுது!” என்னும் வரிகளைத் தந்து கட்டுரையின் தொடக்கம் தந்தது அருமை! குழந்தையும்தெய்வமும் குணத்தால் ஒன்று .. குற்றம்தனை மறந்துவிடும் மனத்தால் ஒன்று!” என்னும் பல்லவியின் அழகு.. பவித்ரமானது! அதற்கடுத்த இரண்டு வரிகளில் வாழ்க்கைக்குத் தேவையான மற்றுமொரு ரகசியத்தைப் பதிவுசெய்திருக்கிறார் பாருங்கள்!.. “நடந்ததையே நினைப்பதுதான் துயரமென்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று!” இதுதான் கவியரசர்!
இந்தப் பாடல் உங்களின் தோழியை.. உங்கள் நட்பை மீட்டெடுத்துத் தந்தக் காட்சிகளை தத்ரூபமாக தந்தீர்கள்.. அழகு!!
ஆம்..உங்கள் நினைவுகளில் அந்தப் பசுமை நிறைந்த நினைவுகளே.. கல்லூரியின் இறுதிநாளில் பாடிட அதுபோல் மற்றுமொரு பாடல் வரவில்லையே.. நீங்கள் குறிப்பிட்டதைப் போல.. நம்மைப்போல் கல்லூரியில் படித்திராத கவிஞர்.. படித்த நம்மால்கூட எழுதிக்காட்ட முடியாத வரிகளை..உணர்வுகளை எப்படி படைத்துக் காட்டினார் என்கிற கேள்விக்கு .. “படைப்பதனால் என் பெயர் இறைவன்” என்கிற அவரது வரியே பதிலாகும்!! எங்கோ பிறக்கின்றோம்..எங்கோ வாழ்கின்றோம்..எங்கோ இணைகின்றோம்..எங்கோ பிரிகின்றோம்.. இதில் மனம் உணர்வுகளால் அல்லவா பின்னிக்கிடக்கிறது! அன்பால் ஒன்றுபட்ட உள்ளங்களின் பிரிவு அது நட்பாக இருந்தாலும்.. வலி அதிகம்தான் என்பதைத்தான் கல்லூரியின் இறுதிநாள் சொல்கிறது. இதனை இவ்வளவு அழகாக.. எளிமையாக.. இனிமையாக எடுத்துச் சொல்ல கவியரசரால்தான் முடிந்திருக்கிறது .. இப்பூவுலகில்!! “பறந்து என்பதற்கு பதிலாக பிரிந்து என்கிற சொல் பயன்படுத்த ஏற்பாடு என்று படித்த போது..இந்தப் பாடலை நீங்கள் எந்த அளவு உள்வாங்கியிருக்கிறீர்கள் என்று உணரமுடிந்தது. காலவெள்ளம் அடித்துச் செல்லமுடியாதப் பெட்டகமாய் கண்ணதாசன் பாடல்கள் என்றுமிருக்கும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சத்திய சான்று!
அத்திக்காய் பாடலுக்கு உங்கள் அப்பாவிடம் பொருள் கேட்ட விஷயங்கள் அருமை! இனிமை!! இப்படியெல்லாம் அப்பா எனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்க வைக்கிறீர்கள்!
இரவு நேரங்களில் 10 மணி முதல் 11 மணி வரை.. நெஞ்சில் நிறைந்தவை என்னும் தலைப்பில்.. இரவின் மடியில் என்னும் தலைப்பில் வானொலி நிலையம் வழங்கிய பாடல்கள் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்! உறங்கிடும் முன்பாக உள்ளத்தின்மீது யாரோ மயிலிறகால் வருடிவிடுவதைப்போல.. அடுத்தடுத்து வானொலி நிலையத்தார் சுழலவிடும் பாடல்கள் சுகந்தம் தருபவை! அவற்றில் பெரும்பாலும் கண்ணதாசன் அதிக வாக்குகள் பெற்று நம் நெஞ்சில் நிறைந்திடுவார்! அற்புதமான அனுபவங்களாய் ஒவ்வொரு இரவும் நம் உள்ளங்கள் நிறையும்!! (உள்ளத்தின் கதவுகள் கண்களடா பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது என்பதை அறியவும்).
தாய்மைப் பேறு அடைந்தபோதும் கவிஞரின் பாட்டுவரிகள் உங்களைத் தாலாட்டியது பூப்போல பூப்போல சிரிக்கும்.. பாடல் என்கிற ஒப்புவிப்பு உன்னதமானது! வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நம்மோடு கைகோர்த்து வருகிறார் கண்ணதாசன் பாடல்கள் வாயிலாக என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!
மீண்டும் நன்றிகளுடன்..
என்றென்றும் கண்ணதாசன்புகழ்பாடும்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல் - சென்னை 600 075.
தற்போது - அபுதாபி (அமீரகம்)
00971 50 2519693
Website: thamizhnadhi.com
Friday, 21 February 2014
“தற்காலத் தமிழின் போக்கும், அதன் எதிர்கால நிலையும்”
தற்காலத்
தமிழின் போக்கு சிறப்பாய் இருக்கிறது என்றோ, திருப்திகரமாக இருக்கிறது என்றோ
யாரேனும் சொன்னால், அது சிற்றோடையில்,
திமிங்கலத்தை மறைப்பதற்குச் சமம்.
இன்றைய
தமிழின் நிலை, தாய்மொழிப் பற்றாளர்களுக்கு மிகவும் கவலை யளிப்பதாகவே உள்ளது.
பாரதியார்
இன்று இருந்திருந்தால்,
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்பதற்குப்
பதில்
“தேமதுரத் தமிழோசை தமிழகத்திலாவது
பரவும்
வகை செய்தல் வேண்டும்,”
என்று
நெக்குருகிப் பாடியிருப்பார்.
இன்றைய தமிழகத்தில், எங்கும், எதிலும் ஆட்சி
செய்வது ஆங்கிலமே.
தற்காலத்
தமிழின் போக்கை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளப் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ்
என இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.
பேச்சுத்
தமிழில், மக்கள் அன்றாடம் புழங்கும் மொழியும், வானொலி தொலைக் காட்சி, திரைப்படம்
போன்ற ஊடகங்கள் பயன்படுத்தும் மொழியும் அடக்கம்..
எழுத்துத்
தமிழில் நாள், வார மாத இதழ்கள், இணையம்
போன்ற ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி, கவிதை, கட்டுரை, சிறுகதை நாவல் என தமிழ்
எழுத்தாளர்களால் கையாளப்படும் மொழி என இருவகைப்படுத்தலாம்.
பேச்சுத்தமிழ்:-
இன்று பேச்சுத்தமிழில்
ஏராளமான ஆங்கிலச் சொற்கள், வேற்றுமொழி என்று தெரியாத அளவுக்கு இரண்டறக் கலந்து
விட்டன. படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்கள்
கூட ஆங்கிலச் சொற்கள் பலவற்றைத் தினந்தினம் தம் உரையாடலில்
பயன்படுத்துகிறார்கள்.
பிற
மொழிச் சொற்களைக் கலப்பின்றி ஒரு நிமிடம் தமிழில் பேச வேண்டும் என்று
தொலைக்காட்சியில் போட்டி வைக்கிறார்கள்.
அதில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலோர், அரைநிமிடம் கூட ஆங்கிலம்
தவிர்த்துப் பேச இயலாமல் போட்டியிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால், பேச்சு
வழக்கில் அம்மொழி எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கிறது என்பது தெளிவாகிறதன்றோ?
பேச்சு
மொழியில் இவ்வளவு தூரம் ஆங்கிலம் கலக்க, நம் மக்களின் ஆங்கில மோகமே முக்கிய
காரணமாக இருக்கிறது. அம்மா என்று குழந்தை
அழைப்பதை விட மம்மி (பிணம்!) என்று தம்மை அழைப்பதைத் தானே, நம் தாய்மார்கள்
விரும்புகின்றனர்? குழந்தைகளுக்கு அழகு
தமிழில் கவின், கயல் போன்ற பெயர்களைச் சூட்டாமல், ஆஷிக், அக்ஷ்யா என வாயில்
நுழையாத வடமொழிப் பெயர்களைப் பெருமைக்குச் சூட்டிவிட்டுத் தினந்தினம் அப்பெயர்களைக்
கடித்து மென்று துப்புபவர்கள் ஏராளம்!
தமிழர்
திருநாளான பொங்கல் நாளன்று வாசலை அலங்கரிக்கும் கோலங்களில் கூட, நம் பெண்கள்
‘பொங்கல் வாழ்த்து!’ என எழுதுவதை விடுத்து, ‘ஹாப்பி பொங்கல்,’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதைக்
கண்டு மனம் மிக வேதனைப்படுகிறது.
ஆங்கிலம்
படித்தோருக்கு மென்பொருள் துறைகளில் வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல அம்மொழி
தெரிந்திருக்க வேண்டும் போன்ற காரணங்களைச் சொல்லி, பிள்ளைகளுக்குத் தாய்மொழிக்
கல்வி மறுக்கப்பட்டு, ஆங்கிலவழிக்கல்வியே பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திணிக்கப்படுகிறது.
பள்ளிகளில்
மதிப்பெண் அதிகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாம் மொழியாகக் கூடத் தமிழைப்
படிக்க விரும்பாமல், ஹிந்தி,
சம்ஸ்கிருதம், பிரெஞ்சு எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி
வருகிறது. ஆங்கிலம் படிக்க வேண்டாம் என
நான் கூறவில்லை. தாய்மொழியோடு மற்ற
மொழிகளிலும் புலமை பெறுவது மிகவும் நல்லது தான்.
ஆனால் ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளைத் தலையில் தூக்கி வைத்துக்
கொண்டாடிவிட்டு, நம் மொழியைக் கேவலமாகக் கருதித் தரையில் போட்டு மிதிப்பதைத் தான்
தவறு என்கிறேன்.
என்
பிள்ளைக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்பதை ஒரு சாதனையாகச் சொல்லும் பெற்றோரைக் கண்டால்
எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.
தாய்மொழியைப் படிக்கத் தெரியவில்லை
என்பதற்காக வெட்கப்படாமல், வேதனைப்படாமல், பெருமையாகக் கூறும் இனம், உலகத்திலேயே
தமிழினம் மட்டுமே.
கடைத்தெருவில்
பெயர்ப் பலகைகளிலாவது தமிழ் இருக்கிறதா எனப் பார்த்தால்
அங்கும்
ஆங்கிலமே கோலோச்சுகிறது:-
பத்மா
ஹாஸ்பிடல், உமா நர்சிங் ஹோம், கிரவுன் மெடிக்கல்ஸ், லஷ்மி ஸ்டோர், பாலாஜி காஸ்ட்
பிரைஸ் ஷாப், கணபதி புரொவிஷன் ஸ்டோர், எனப் பட்டியல் நீளுகிறது.
வானொலி,
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலாவது, பேச்சு வடிவம் சிறப்பாக இருக்கிறதா என்றால்
அதுவும் இல்லை.
பிரபலங்களின்
பேட்டியாகட்டும், கலந்துரையாடலாகட்டும், பங்கு பெறுபவர்களில் பெரும்பாலோர், லண்டனிலிருந்து
நேரே குதித்து வந்தவர்கள் போல், தமிழில் பேசத்
திக்கித் திணறி, இடையிடையே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தம் ஆங்கிலப்
புலமையைப் பறைசாற்றிக் கொள்வது தான் வழக்கமாக இருக்கிறது. செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிச் சொல்லவே
வேண்டியதில்லை. கடித்துக் குதறி இவர்கள் வாசிக்கும்
தமிழ், நாராசமாக ஒலித்து நம் செவிகளைப் புண்ணாக்கி இரத்தம் சிந்த வைக்கிறது!
அடுத்துத்
திரைப்படபாடல்கள் பக்கம் நம் பார்வையைத் திருப்பினால், அங்கும் நமக்குக் காத்திருப்பது
ஏமாற்றமே:-
“பார்த்தேன் சிரித்தேன்
பக்கம்
வரத் துடித்தேன்
அந்த மலைத்தேன்
இவரென மலைத்தேன்”
“அத்திக்காய்,
அத்திக்காய்
ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே
என்னுயிரும்
நீயல்லவோ”
போன்ற
இலக்கிய நயமிக்கத் திரைப்படப்பாடல்களைக்
கேட்டு ரசித்த தமிழர்கள் இப்போது கேட்டுப் புல்லரிப்பது:-
“வொய்
திஸ் கொல வெறி, கொல வெறிடி
டிஸ்டன்ஸில
மூணு மூணு
மூணு
கலரு வொயிட்
வொயிட்
பக்கிரவுண்டு நைட்
நைட்
கலரு பிளாக்
வொயிட்
ஸ்கின் கேர்ளு, கேர்ளு
கேர்ளு
ஹார்ட் பிளாக்
ஐஸ்
மீட்டு மீட்டு
மை ஃபியூச்சர் டார்க்”
இது
போன்ற உலகத்தரம் வாய்ந்த தமிழ்ப்பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால், தமிழ்த்
திரைப்படப் பாடல்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழின் எதிர்காலமும் இருட்டாகவே
இருக்கும்..
தமிழ்த்
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க, வரிச்சலுகை அளிக்கப்படுகிறது என்றால், எங்குப்
போய் நாம் முட்டிக் கொள்வது?
எழுத்துத் தமிழ்:-
மக்களிடம்
அதிகச் செல்வாக்கு பெற்ற எழுத்து ஊடகங்களிலோ, தமிழ் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
விகடன்
போன்ற ஒரு பாரம்பரியமிக்க வார இதழில் இடம்பெற்றிருக்கும் திரைப்பட விமர்சனத்தில்
நம் தமிழ், எவ்வளவு அழகாய்க் கொஞ்சி விளையாடுகிறது பாருங்கள்!:-
“உதய்-சந்தானம் காமெடி, காதலி சேஸிங்,
டீஸிங், வெளிநாட்டுப்பாடல்கள், குடும்ப செண்ட்டிமெண்டுகள், என, ‘ஒரு கல் ஒரு
கண்ணாடி,’யின் ஜெராக்ஸாகவே கதிர்வேலனைக் காதலிக்க வைத்திருக்கிறார்
இயக்குநர். காதல், காமெடி, செண்டிமெண்டு
மசாலா பேக்கேஜில் மிக்ஸிங் சறுக்கியதில் இது கதிர்வேலனுக்கு மட்டுமே காதல்!”
குமுதம் வார இதழில், நடிகையின் பேட்டி:-
“டெக்னாலஜி
ரொம்ப வளர்ந்து போச்சு. நாம டெக்னாலஜியை
ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும். கதையோட ‘சோல்’
நமக்கு இம்ப்ரஸ் ஆகணும். ‘டமால், டுமீல்,’
கதையை என்கிட்ட சொன்னப்ப, ரொம்ப
எனர்ஜிடிக்கா இருந்தது. உடனே எஸ்
சொன்னேன். தட்ஸ் ஆல்”
நண்பர்களே! இன்றைய தமிழின் சீர் கெட்ட நிலைமைக்கு
எடுத்துக்காட்டுகள் போதுமா? இன்னுங் கொஞ்சம் வேண்டுமா?
இதே
குமுதம் இதழில் வெளியாகியிருக்கும் இரண்டு நகைச்சுவை துணுக்குகள்:-
1. “நர்ஸூக்கு
லவ் லெட்டர் கொடுக்கறப்போ, மிஸ்டேக் பண்ணிட்டேன்”
என்னாச்சு?
ஐ
லவ் யூ சிஸ்டர்னு எழுதிட்டேன்பா”
2. “நைட்ல
பைக்ல லைட் போடாம வர்றியே, திமிரா?
“இல்ல
சார். டெய்லி இரண்டு மணி நேரம், பைக்ல பவர் கட் சார்”
இணையத்தில்
முகநூலில், டிவிட்டரில் நம் இளைய தலைமுறையினர் எழுதும் தமிழ் பற்றிச் சொல்லவே
வேண்டியதில்லை:-
“ஐஸ்கிரீம் பார்லர்ல ஃப்ரெண்ட்ஸோட
போறவங்கள்ள… எனக்கு வெனிலா போதும்னு சொல்றவன் தான், அநேகமா பில் கொடுப்பான்”
இலாபத்தை
மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக நாளிதழ், வார இதழ்களைத் தவிர சிறு
பத்திரிக்கைகளில் தமிழ் ஓரளவு தரமாக இருக்கின்றது.
முன்னெப்போதையும்
விட இப்போது தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது. இவர்கள் சொல்ல விரும்பியதை, பகிர நினைப்பதை
மேடையேற்ற, இணையம் இன்று களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. எழுதுவோரில் பெரும்பாலோர் கூடுமானவரை பிறமொழிக்
கலப்பின்றித் தரமாக எழுதுவதை வாசிக்கையில், சிறிது ஆறுதலாயிருக்கிறது.
எனவே பேச்சுத்தமிழை
விட எழுத்துத் தமிழின் நிலைமை நன்றாகவே இருக்கிறது. இணையத்தில் தமிழ்
இந்தளவுக்குச் சிறப்பாக இருப்பதற்கு, உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களின்
முயற்சியும் தமிழ்ப்பற்றும் முக்கிய காரணங்கள் என்றால் அது மிகையில்லை.
தமிழின் எதிர்கால நிலை:-
ஒரு மொழி எவ்வளவு தான் இலக்கியச்செல்வம்
பெற்றிருந்தாலும், பொது மக்களின் பேச்சுமொழியாக இருக்கும் வரை தான் அதற்கு உயிர்
இருக்கும். ஒரு காலத்தில் ஐரோப்பா முழுதும் ஆட்சி செலுத்திய இலத்தீன், இன்று
என்னவாயிற்று? அது போல் சாமான்ய மக்களின்
பேச்சு மொழியாக இல்லாமல் மெத்த படித்த மேல்தட்டு மக்களின் மொழியாக இருந்த சம்ஸ்கிருதமும்
வழக்கொழிந்து போயிற்று.
எனவே எழுத்தை
விட, பொது மக்கள் தினந்தினம் பயன்படுத்தும்
பேச்சு மொழிக்கு நாம் அதிக முக்கியத்துவம்
கொடுக்கவேண்டும். ஏனென்றால் பேச்சுவடிவமே ஒரு மொழியின் உயிர் மூச்சு.
பேச்சுத்தமிழின் இன்றைய நிலை தொடர்ந்து
நீடிக்குமானால், தமிழின் எதிர்காலம் கேள்விக்குரியதே.
‘மெல்ல தமிழ் இனிச் சாகும்,’ என்ற
பாரதியின் பயம் ஒரு வேளை உண்மையாகிவிடுமோ என நாம் அச்சம் கொள்ள வேண்டிய
காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இரண்டாயிரம்
ஆண்டு தொன்மை வாய்ந்த செவ்வியல் மொழி என்று
பழம் பெருமை பேசிப் பேசியே காலத்தைக் கடத்தி விட்டோம். இனியும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலில்
இறங்க வேண்டிய தருணமிது.
தமிழின்
எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும்?
·
குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.
·
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது
தமிழிலேயே பேச வேண்டும். தமிழில் பேசினால்
கேவலம் என்ற நினைப்பை விட்டொழிக்க வேண்டும்.
·
பள்ளியிறுதி வகுப்பு வரையிலுமாவது குழந்தைகளுக்குத் தமிழ்
கட்டாயமாகப் போதிக்க வேண்டும்.
·
கூடுமானவரை பேச்சில், எழுத்தில் ஆங்கிலச் சொற்களைக் களைந்து
தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டும்.
·
ஏற்கெனவே தமிழில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக, மொழியாக்கம்
செய்யப்பட்ட சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
எ,கா.:-
அருவிக்குப் பதில் நீர்வீழ்ச்சி (WATERFALL என்பதின் தமிழாக்கம்)
·
தமிழில் திறனாய்வு இல்லை.
ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் நம் படைப்புக்களைக் கூர் தீட்டிக்கொள்ள
உதவும், எனவே நடுநிலையோடு விமர்சனம்
செய்பவர்களிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் சென்று அவர்கள் மீது சேற்றை
வாரி வீசக்கூடாது.
·
நூல் வாசிக்கும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு வலியுறுத்த
வேண்டும். பிறந்த நாள் போன்ற விசேட
நாட்களில் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்.
·
தரமான தமிழ்ப்புத்தகங்களை வாங்கித் தமிழ்ப் பதிப்பாளர்களையும்,
எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
·
பிரெஞ்சு மொழி இன்று அடைந்துள்ள உன்னத நிலைக்குக் காரணமான பிரெஞ்சுக்கழகம்
போல் அரசியல் தலையீடு இல்லாத தமிழ்க்கழகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
·
தமிழ்த் தெரிந்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க
வேண்டும். (விரிவஞ்சி இத்துடன்
நிறுத்துகிறேன்.)
கா கா
என்று கரையும் பறவையைக் காக்கா என்றோம்.
அதன் இயல்பை மாற்றிக் கூ கூ எனக் கூவ வைத்து விட்டால், அது குயில்
ஆகிவிடுமா?
நகல்
என்றுமே அசல் ஆக முடியாது. இது தான்
இயற்கை நமக்குச் சொல்லும் பாடம். கூ கூ
என்று கூவும் காக்கை, காக்காவாகவும் இல்லாமல், குயிலாகவும் மாறமுடியாமல், முடிவில் இரண்டுங்கெட்டான்
ஆகிவிடும்.
அது
போலத் தமிழ் தான் நம் அடையாளம். தமிழ் பேசுவதால் தான் நாம் தமிழர். இதனைத் துறந்து ஆங்கிலேயருக்கு நிகராக அவரது தாய்மொழியைப்
பேசுவதால், நாம் எந்நாளும் ஆங்கிலேயர் ஆகமுடியாது. நமக்கு முகவரியைக் கொடுத்த, இரண்டாயிரம் ஆண்டு தொன்மை
வாய்ந்த வரலாற்றைக் கொடுத்த தமிழை மறந்தோம் என்றால், நம் சொந்த அடையாளத்தை இழந்து இரண்டுங்
கெட்டான் காக்கையைப் போல நாடோடிகளாகத் திரிய வேண்டிய நிலை ஏற்படும்.
நம்
மொழியை உருக்குலைக்காது, அதன் சிறப்பியல்புகளைச் சீரழிக்காமல் பாதுகாத்து, நம்
குழந்தைகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டியது நம் கடமை. இல்லையேல் நம் வருங்காலச் சந்ததியினர் நம்மை
ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
(பொங்கல்
தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப்படைப்புகள் தளத்தில் நடத்தப்படும் மாபெரும் கட்டுரைப்போட்டியில்
பங்கேற்பதற்கான கட்டுரை)
Subscribe to:
Posts (Atom)