வலையுலகப் பிதாமகன் என்றழைக்கப்படும் திரு. கோபு சாரின் கதைகளில்
என்னை மிகவும் கவர்ந்தவை:-
இணையத்தமிழ் வளர்ச்சியில், இவரின் பங்களிப்பு மிக அதிகம்.
தமிழில் விமர்சனக்கலை இன்னும் முழு வளர்ச்சியடையாத நிலையில், விமர்சனப்போட்டி என்ற ஒன்றை அறிவித்து, 2014 ஜனவரி
துவங்கிப் பத்து மாதங்கள் செம்மையாக நடத்திப் பதிவர்களிடம் ஒளிந்திருந்த விமர்சனத்
திறமையை வெளிக்கொணர்ந்து, விமர்சன சக்ரவர்த்திகளையும், வித்தகிகளையும் உருவாக்கிய பெருமை
இவரையே சாரும்.
மாத ஓய்வூதியம் இல்லாத நிலையிலும், சொந்தப் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து, ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள்
கொடுத்ததுடன், போனஸ், ஹாட்டிரிக், ஆறுதல் என்ற பெயர்களில் பல்வேறு பரிசுகள் உடனுக்குடன்
கொடுத்துப் பதிவர்களை எழுத ஊக்குவித்தவர்.
இப்போட்டிக்கு நடுவராக இருந்தவர், தேர்ந்த படிப்பாளியும், படைப்பாளியுமான
பூவனம் ஜீவி சார் அவர்கள். அண்மையில் மறக்க முடியாத எழுத்துலகம் – ந.பிச்சமூர்த்தியிலியிருந்து எஸ்.ரா வரை என்று இவர் எழுதி, சென்னை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள அருமையான
நூல் பற்றிய என் பார்வையைத் தனிப்பதிவாக எழுதியிருக்கிறேன்.
சிலர் விமர்சனம் என்ற பெயரில் கதையை அப்படியே வரிக்கு வரி ஒப்பிப்பார்கள். ஆனால் கதையின் ஒரு வரியைக் கூடச் சொல்லாமல் விமர்சனம்
செய்து அசத்தியவர், தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி சார் அவர்கள்.
சூடிதார் வாங்கப் போறேன் என்ற கோபு சார் கதைக்கு, இவர் எழுதிய விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது.
இளம் வயதிலேயே புகழ்பெற்ற வானம்பாடிக் கவிஞர்கள் சிலரோடு புதுக்கவிதையின்
பிதாமகனான ந.பிச்சைமூர்த்தி அவர்களிடம் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்ற
கவிஞர் இவர் என்பது ஒன்றே போதும், இவர் சிறப்பை நாம் அறிந்து கொள்ள.
இவர் கவிதைகளினூடே வெளிப்படும் மனித நேயம், சமூக அவலங்களைக்
காணும் போது, பாரதியைப் போல் நெஞ்சு பொறுக்காமல் வெளிப்படும் கோபம், பெண் முன்னேற்றம்
குறித்த முற்போக்கு சிந்தனை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தவை:--
பெண்கள் தினம் என்பது மலர்க்கொத்து பரிசளித்து, வாழ்த்துச் சொல்லும்
கொண்டாட்ட நாளில்லை; அதன் உண்மையான நோக்கம் வேறு என்பதை எவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறார் பாருங்கள்!
"பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?
இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்…………"(நம்மைக் கூர்ப்படுத்திக்கொள்ளும் நாள்)
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்…………"(நம்மைக் கூர்ப்படுத்திக்கொள்ளும் நாள்)
என்னைக் கவர்ந்த வேறு சில படைப்புகள்:-
ஜெயகாந்தனிடம் “இப்போது ஏன் எழுதுவதில்லை?” என யாரோ கேட்க,
“அது என்ன தோசையா, சுட்டுச் சுட்டு அடுக்குவதற்கு? என்றாராம். இக்கவிதையை வாசித்த போது, எனக்கு அவர் சொன்னது,
நினைவுக்கு வந்தது.
"குட்டிக்கும்
பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்....
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....
இளம் கன்றே நீ உலகறிவாய்".....
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....
இளம் கன்றே நீ உலகறிவாய்".....
கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர் என
பன்முகத்திறமை கொண்ட அண்ணன் முத்துநிலவன் அவர்களின் இன்னொரு பரிணாமம், பதிவர்
விழாவின் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளர்!
2015 அக்டோபரில் புதுக்கோட்டையில் பதிவர்களை
ஒருங்கிணைத்து உலகமே வியக்கும் வண்ணம், சிறப்பாகப் பதிவர் விழா நடத்திய இவரின்
வலைப்பூ வளரும் கவிதை என்பது, நான் சொல்லாமலே, உங்கள் அனைவருக்கும் தெரிந்தது
தான்.
விழாவை முன்னின்று நடத்தியதோடு நில்லாமல், இணையத்தமிழை
வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவரை, எவ்வளவு பாராட்டினாலும்
தகும்.
கலை, இலக்கியம் சினிமா என எல்லாவகைமைக்கும் விருது
தரும் விகடன், வளர்ந்து வரும் வலைப்பக்க இலக்கியத்தை மறந்தது நியாயமா என விகடன்
நிர்வாகத்துக்கு வலைப்பதிவர் சார்பாக கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
“அடுத்த ஆண்டாவது விகடன் விருதுப்பட்டியலில் நல்ல
இலக்கியம் வளர்க்கும் சமூக விமர்சனங்களை முன் வைக்கும், தமிழ்ச்சமூகம் முன்னேற
தளராது பணியாற்றும் தமிழ் வலைப்பக்க எழுத்தாளர்க்கும் தனியாக விருது வழங்கிட
வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.”
முழுதும் படிக்க:- ஆனந்த விகடன் கவனத்திற்கு, வலைப்பதிவர் வேண்டுகோள்
விகடன் இவர் கோரிக்கையைப் பரிசீலிக்குமானால், அடுத்த
ஆண்டிலிருந்து, வலைப்பூவில் சிறப்பாக எழுதுவோர்க்கும் விருது கிடைக்க
வாய்ப்புண்டு.
தொடரும் தொடர் பதிவர்கள் என்ற தொடர் பதிவை, இவர்
துவங்கிச் சிலரை எழுத அழைத்ததும், நல்ல பதிவுகள் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற
உயரிய நோக்கத்திற்காகவே.
இன்றைய தமிழில் பெண்கவிகள் என்ற தலைப்பில் தமிழகத்துச் சங்க கால ஒளவை முதல் ஈழத்துச் சம கால அவ்வை வரையிலான
பெண்கவிகளின் கவிதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
இவரின் நீண்ட நாள் கனவான கவிதையின் கதை என்ற நூலை அடுத்த ஆணடு வெளியிடவிருக்கிறார். இதன் ஆக்கத்துக்காகவே தனியாகக் கவிதையின் கதை என்ற வலைப்பூவைத்
துவங்கியிருக்கிறார்.
கவிதை என்பது யாது? என்ற முன்னுரையே, வெளியாகப் போகும் நூலின்
ஆழத்திற்கும், அகலத்துக்கும் கட்டியங்கூறுவதாய் அமைந்து நம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இப்போது வலைப்பதிவில் தரமாக எழுதும் எழுத்தாளர்களை
நேர்காணல் செய்து தர வரிசைப் பட்டியலில் அவர்கள் முன்னணியில் இருக்கும்
காரணங்களைக் கேட்டறிந்து வெளியிடுவதன் மூலம், வலைப்பூவில் புதிதாக எழுதவரும்
எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
இதில் முதலாவதாக கூட்டாஞ்சோறு செந்தில் அவர்களின்
சிறப்பான நேர்காணல் வெளியாகியிருக்கிறது. இவர் ஊடகத்துறையில் பணியாற்றும்
பதிவர்.
இருட்டு நல்லது என்ற இவரின் கட்டுரை, புதுக்கோட்டை
பதிவர் விழாவின் போது நடத்தப்பட்ட உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியில் சுற்றுச்சூழல்
பிரிவில் முதற்பரிசு பெற்றது.
இயற்கையைப் பாழ்படுத்தியன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு
ஏற்படும் பாதிப்புகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவை பற்றி, இவர் எழுதும் கட்டுரைகள்
என்னை மிகவும் கவர்ந்தவை.
எடுத்துக்காட்டுக்குச் சில:-
அடுத்து என்னை மிகவும் கவர்ந்த பதிவர் கீதா
மதிவாணன். கவிதை, கதை, கட்டுரை,
மொழியாக்கம், தமிழிலக்கியம் என பல்சுவை விருந்து படைக்கும் கீதமஞ்சரி எனும்
வலைப்பூவுக்குச் சொந்தக்காரர்.
எழுத்து மட்டுமின்றி ஓவியம், புகைப்படம் போன்ற
கலைகளிலும் ஈடுபாடு உண்டு. ஆஸ்திரேலியா
எழுத்தாளர் ஹென்றி லாசன் கதைகளை 'என்றாவது ஒரு நாள்' என்ற தலைப்பில் மொழியாக்கம்
செய்து வெளியிட்டுள்ளார்.
பன்முகத்திறமை கொண்ட இவர் என் நெருங்கிய உறவினர்
என்பதில் எனக்குப் பெருமை!
என்னைக் கவர்ந்த பதிவுகளில் சில:-
நெருப்பெனத் தோன்றும் முருக்கம்பூ என்ற தலைப்பில் முருக்கம்பூவை
பற்றிய பதிவு, சுவையான இலக்கிய மேற்கோள்களுடன்.
ஒண்ட வந்த பிடாரிகள் என்ற தலைப்பில் உலகின் பல பாகங்களிலிருந்து
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களால் சொந்த மண்ணின் உயிரினங்களுக்கு
ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விவரிக்கும் அருமையான தொடர்.
இது போன்று ஆஸ்திரேலியாவைத் தவிர உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய உயிரினங்கள் பற்றிய தொடரும் சுவாரசியம்
மிகுந்தது.
எழுத எழுத என் கட்டுக்கடங்காமல் நீளும் கட்டுரையை, அடுத்த பதிவுடன் எப்படியாவது
முடிக்கத் திட்டமிருக்கிறேன்!
நன்றியுடன்
ஞா.கலையரசி
(படம் – நன்றி இணையம்)