நல்வரவு

வணக்கம் !

Saturday 25 January 2020

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - நூல் அறிமுகம்



கவிஞர் ஜான்ஸி ராணி
வாசகசாலை பதிப்பகம்
விலை ரூ 80/-
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் பெற்ற, கவிஞர் ஜான்ஸி ராணியின், முதல் கவிதைத்தொகுப்பு இது.


அலங்கார ஜோடனைகளோ, வார்த்தை ஜாலங்களோ எதுவுமின்றி, எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக, அன்றாடம் நாம் புழங்கும் எளிய சொற்களின் வழியே, பெண்ணின் நுட்பமான மனநிலைகளையும், காதலின் மென் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.  

குழந்தைகளின் பாலியல் வன்புணர்வு மற்றும் நீட் தேர்வினால் அனிதா இறப்பு குறித்த, சமகாலத்துச் சமூகசிந்தனை கொண்ட, சில கவிதைகளும் இதில் உண்டு.

வலியின் மகுடிக்கு
ஆடும்
வார்த்தை சர்ப்பத்தின்
நடனம்
கவிதை
என்று கவிதைக்கு இலக்கணம் வகுக்கும் இவருக்கு, நாலைந்து வரி குறுங்கவிதையில், ‘நச்சென்று கருத்தை வெளிப்படுத்தும் திறன், கைவரப் பெற்றிருப்பது சிறப்பு!

ஏற்ற இறக்கங்கள் & இன்ப துன்பங்கள் நிறைந்த இவ்வாழ்வைப் புலம்பலோ, குறையோ ஏதுமின்றி, நேர்சிந்தனையுடன் எதிர்கொண்டு, அதற்குத் தக்கபடி, தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராயிருக்கும், இவரின் சிறந்த மனப்போக்கை வெளிப்படுத்தும் இது, இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை!:-

குறையொன்றுமில்லை
துளைகளிட்டுப் போனாலும்
புல்லாங்குழலென
உருமாற்றிக்கொள்வேன் நான்”.

பிரசவத்துக்குப் பிறகு, பெண்களின் அடிவயிற்றைக் கிழித்துக் கிழித்துத் தைத்து, ‘ஆயிரங்கால் பூரானெனத் தையல் போட்டுச் செய்யப்படும் அறுவை காரணமாக, வயிறு நைந்து போகிறது; அதனால் பெண்ணிற்குத் தையல் என்பது காரணப்பெயர் என்று இவர் சொல்லியிருப்பது, மிகப் பொருத்தம் தானே? அது போல, அறுவையின் தையலுக்கு, ஆயிரங்கால் பூரானும், பொருத்தமான சிறந்த உவமை!

நூலின் தலைப்புக்கேற்ற மாதிரி, பெண்களின் நாற்பது வயது ஹார்மோன் பிரச்சினைகளைச் சொல்லும், இரண்டு கவிதைகள், இதில் உள்ளன.
மத்திய நாற்பதுகளில்
சட்டென்று மாறியது
ஹார்மோன்களின் வானிலை
மாதம் மும்மாரி பொழிந்தது (பக் 14)
&
ஈஸ்ட்ரோஜனின் ஏற்ற இறக்கங்கள்
நடனமாடும் நடுவயதுத்
தொல்லைகள்
தடுமாறும் முன்பின் தேதிகளில்
இரு தொடையிடுக்கில்
எப்போதும் கனக்கும்
பஞ்சுப்பொதிகள்  (பக் 28)

மேற்கூறிய முதல் கவிதையில், நாற்பது வயதைக் கடந்த பெண்களின் மெனோபாஸ் பிரச்சினையை, ‘மாதம் மும்மாரி பொழிந்தது,’ என்று மெல்லிய நகைச்சுவை இழையோட, இவர் சொல்லியிருப்பதைப் பெரிதும் ரசித்தேன்.

ஆணாதிக்கச் சமுதாயத்தில், பெண் சக ஜீவனாக மதிக்கப்படாமல், இன்னும் கணவனின் உடைமையாகவும், போகப் பொருளாகவும் கருதப்படுவதைச் சுட்டிக் காட்டும் கவிதையின், இவ்வரிகள் சிறப்பு!
அரூப மசியால்
எனதேயான
என் மேனியெங்கும்
டாட்டூ இடப்பட்டிருக்கும்
OWNED BY’
என ஒளிரும் உந்தன் பெயர்

அண்மை காலத்தில் நடைபெறும் வன்முறைகளில்,  நாம் ஜீரணிக்கவே முடியாத கொடுமை, பச்சிளம் சிசுக்களைக் கூட, பாலியல் வன்புணர்வு செய்வது தான்.   இதற்கு எதிராக, இதில் இடம்பெற்றிருக்கும்  கவிதையை வாசித்த போது,
தாயின் கருப்பையிலேயே இனி
குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க
வேண்டுமோ
குட் டச்
பேட் டச் என்று

நெஞ்சு இரண்டாக,’ எனும் கவிதையில், கவிஞர் உமா மோகன் எழுதிய
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா
தவழும் போதே
தற்காப்புக் கலை சொல்லவா?”
எனும் வரிகள், நினைவுக்கு வந்தன.

சொப்பு வைத்து விளையாண்ட பால்யத்தில், பாலியல் வல்லுறவுக்கு ஆட்படும் பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளான பிறகும், வாழ்நாட்முழுக்க, உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்படுவாள் என்பதை ஓர் உளவியல் ஆலோசகராக, இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்துகிறார்:-

அழுக்கும் வெம்மையும் கரையட்டும்
என
இப்போது தொடங்குகிறாள்
தேய்த்துத் தேய்த்துக் கைகளைக்
கழுவிக் கொள்ள
மீண்டும் மீண்டும் மீண்டும்.

இதில் இடம் பெற்றிருக்கும் காதல் கவிதைகளில்,
கொஞ்சம் வைத்துக் கொள்
எனப் பகிர முடியா
நிறைமாத சூலியின்
கனமென
சில பிரியங்கள்,”
என்ற கவிதை எனக்குப் பிடித்திருந்தது.

எல்லாக் கவிதைகளையும் சொல்லிவிட்டால், வாசிப்பவருக்குச் சுவை குன்றிவிடும் என்பதால், இத்துடன் நிறுத்துகின்றேன்.

பெண்ணியக் கருத்துக்களை, மென்மையாக அல்லாமல், இன்னும் காத்திரமாக, ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் கவிதைகளை, ஜான்ஸியின் அடுத்த தொகுப்பில் எதிர்பார்க்கிறேன்.  

கவிஞருக்குப் பாராட்டுகள்!  அடுத்த தொகுப்பை, விரைவில் வெளியிட, ஜான்ஸிக்கு வாழ்த்துகள்!



3 comments:

  1. சிற்ந்த கவிதை நூல் எனத் தெரிகிறது; ஆங்கிலத் தலைப்பு ஒரு குறை .

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை நூல் அறிமுகம்.

    எடுத்துக் காட்டிய கவிதைகள் சிறப்பு.

    நன்றி.

    ReplyDelete
  3. தங்கள் பதிவு கவிதை நூலை வாசிக்கத் தூண்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete